| நான்காம் ஆயிரம் நம்மாழ்வார்
 திருவாய் மொழி
 
 | 
		| திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல் (திருமோகூர்) | 
					
			
			
      | | 3774 | தாள தாமரைத் தடம் அணி வயல் திருமோகூர் நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
 தோளும் நான்கு உடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்க்
 காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே             (1)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3775 | இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
 நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
 நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே             (2)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3776 | அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட
 வென்று இம் மூவுலகு அளித்து உழல்வான் திருமோகூர்
 நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே             (3)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3777 | இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
 படர் கொள் பாம்பு அணைப் பள்ளி கொள்வான் திருமோகூர்
 இடர் கெட அடி பரவுதும் தொண்டீர்! வம்மினே             (4)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3778 | தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன் அண்டம் மூவுலகு அளந்தவன் அணி திருமோகூர்
 எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளையக்
 கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே             (5)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3779 | கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம் ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
 வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
 ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே             (6)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3780 | மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலாச் சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
 முற்றும் தேவரோடு உலகுசெய்வான் திருமோகூர்
 சுற்றி நாம் வலஞ் செய்ய நம் துயர் கெடும் கடிதே             (7)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3781 | துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின் உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர்
 பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த
 தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே             (8)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3782 | மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய் அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
 துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
 நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே             (9)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3783 | நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர் தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
 காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
 நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்             (10)
 | 
 |  | 
		
			|  |  |  | 
					
			
			
      | | 3784 | ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
 வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
 ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே             (11)
 | 
 |  | 
		
			|  |  |  |