நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல் (திருவனந்தபுரம்)
3785கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே             (1)
   
3786இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே             (2)
   
3787ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண் அனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசுமினே             (3)
   
3788பேசுமின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே             (4)
   
3789புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்             (5)
   
3790அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேள்மின் நாமும் போய் நணுகவேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே             (6)
   
3791துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு அணைப் பள்ளி கொண்டான்
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே             (7)
   
3792கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம்.            (8)
   
3793நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணிய ஆன
சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே.            (9)
   
3794மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம் இல் புகழினாரே             (10)
   
3795அந்தம் இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி தன்னைக்
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே             (11)