நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு)
3829அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் அது நமது விதிவகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே             (1)
   
3830வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே! கேசவன் எம் பெருமானைப்
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே             (2)
   
3831நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதிவகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே             (3)
   
3832என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்ச பாரதத்துப் பாண்டவர்க்காப் படைதொட்டான்
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே             (4)
   
3833வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே!
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாள் இணை என் தலைமேலே             (5)
   
3834தலைமேல தாள் இணைகள் தாமரைக்கண் என் அம்மான்
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான்
மலை மாடத்து அரவு அணைமேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே            (6)
   
3835குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடிமேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே             (7)
   
3836மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந் நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே?             (8)
   
3837திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே             (9)
   
3838பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான்
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாய் அரவு அணைமேல் வாட்டாற்றான் காட்டினனே             (10)
   
3839காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளங் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே            (11)