நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம்
நம்மாழ்வார்
திருவாய் மொழி

காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல் (திருப்பேர் நகர்)
3851திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென்பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே             (1)
   
3852பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே             (2)
   
3853பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே             (3)
   
3854எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே             (4)
   
3855வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே (5)
   
3856திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே             (6)
   
3857உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே?             (7)
   
3858கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே             (8)
   
3859இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம்போகப் புணர்த்தது என் செய்வான்?
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே             (9)
   
3860உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே            (10)
   
3861நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே (11)