பக்கம் எண் :

முதற் காண்டம்4

                 பயன் பெறும் வழி

         உவர்வாய் கடல்தரும் ஒளிமணி கொண்டுஎன
         துவர்வாய் கைக்கும் என் சொல்உரை ஒருவா,         
65

         தேன்தரும் விரைமலர்த் தேம்பா வணியை
         வான்தரும் அறத்துஅணி வனப்புஎன உளத்து அணிந்து,
         இன்புறக் கேட்பவும் ஏற்ற நல்லறத்து
         அன்புற வேட்கவும் அனைவரும் செய்கால்,
         தேன்முகத்து அலர்ந்த தேவ திருக்கதை             70

         கான்முகத்து இனிய கனி எனப் பழுத்தே,
         இவ்வுலகு இடர்அற இருவினை அரிந்தபின்,
         அவ்வுலகு அரும்பயன் அளிக்குமென்று உணர்க.
         தேமுகத்து அலர்அணிச் சிறப்புற உணர்ந்த
         பாமுகத்து உரையது பதிகம் முற்றும்.                75


     64. உவர் - உப்பு. 69. வேட்டல் - விரும்புதல்.
     72. இருவினை - பெரிய பாவச் செயல். அன்றியும், சன்மப்
        பாவம் கருமம் பாவம் என்ற இருவகைப் பாவமும் ஆம்.
        அன்றி, நல்வினை தீவினை என்று கொள்ளுதல் முனிவர்
        நூலுக்கு முரணானது என்று தெளிக.

குறிப்பு : இங்கு, ‘வீரமாமுனி என்போன்........உரைத்தனன்’’
        (37-38) என நூலாசிரியரைக் குறிப்பிட்டு, ‘உரை அறைகுது
        நானே’ (61) என உரையாசிரியன் தன்னை வேறாகக்
        குறித்தலாலும், தேம்பாவணி உரை முடிவில், ‘மாணாக்கன்
        புகழ்ந்துரைத்த புறவுரை ஆசிரியம்’ என்ற பகுதியில், ‘சொல்
        அமிர்து ஏந்திய துகள் உறும் என் உரை’ (33) என அவனே
        குறித்தலாலும், தேம்பாவணி பழைய உரை வீரமாமுனிவரின்
        மாணவன் இயற்றியதேயன்றி, சிலர் குறிப்பிட்டுள்ளதுபோல,
        அவர் இயற்றியதே அன்று என்று தெளிக.

        தேம்பாவணி முதற் காண்டம் முழுமைக்கும் வித்துவான்
        A. S. ஜெகராவு முதலியார் 1901-ல் எழுதி வெளியிட்ட
        விருத்தியுரையும் உண்டு. அவர்தம் புலமைத் திறம் அதனிற்
        பொலிந்து விளங்குகின்றது.

        தொடர்ந்து வரும் இப்புத்துரை நடையிலும் அமைப்பிலும்
        முற்றும் புதியதாய், மேலேகாட்டிய உரைகளைப் பெரிதும்
        தழுவி, வேண்டிய திருத்தங்களும் விளக்கங்களும் கொண்டு
        அமைவது.