பக்கம் எண் :

முதற் காண்டம்557

புண் காத்த மருந்து அன்ன பொலி அருள் சேர் மா தவனும்
விண் காத்த வேந்தனைச் சூல் வேய்ந்து ஒவ்வாக்
                                   கன்னிகையும்
மண் காத்த அருள் பரப்பி வழி வருங்கால், வளைத்து
                                   இவரை,
கண் காத்த நிமை என்னக் காத்தார் அக் ககனத்தார்.

     புண்ணைப் போக்கிக் காத்த மருந்து போலப் பொலிந்த அருள்
பொருந்திய பெருந் தவத்தோனாகிய சூசையும், விண்ணுலகை ஆண்டு
காத்த அரசனாகிய ஆண்டவனைக் கருப்பமாக அணிந்து எவரும் தனக்கு
நிகரில்லாத கன்னியாகிய மரியாளும், இம்மண்ணுலகைக் காத்த ஆண்டவன்
அருளைப் பரப்பிய வண்ணமாய், வழி நடந்து வருகையில், அவ்
விண்ணுலகத்தவராகிய வானவர் இவ்விருவரையும் சூழ்ந்து சென்று,
கண்ணைக் காத்த இமை போலக் காத்து வந்தனர்.
 
                    20
துன்றாங்கு முட்டடத்திற றுயராற்றா துவள்கொடிபோ
லன்றாங்கு நொய்யடியா ளயர்வுற்றுச் சோர்ந்துவிழப்
பொன்றாங்கு பொறைத்திண்டோட் பொலிந்தும்பர்
                                   தாங்கினரால்
மின்றாங்கு மலைத்தோற்றம் விளங்குவடி வொத்தெனவே.
 
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா, துவள் கொடிபோல்,
அன்று ஆங்கு நொய் அடியாள், அயர்வு உற்றுச் சோர்ந்து விழ,
பொன் தாங்கு பொறைத் திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்
                                                 ஆல்,
மின் தாங்கு மலைத் தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே.

     மெல்லிய அடிகளை உடைய மரியாள் அந்நாளில் அங்கு முட்கள்
செறிந்த வழித் தடத்தில் நடந்த துயரம் பொறுக்க மாட்டாமல், துவண்ட
பூங்கொடி போல் தளர்ச்சி அடைந்து சோர்ந்து விழப் போகையில், பொன்
அணிகள் அணிந்த மலை போல் உறுதியான தோள்களுடன் விளங்கிய
வானவர், மின்னலைத் தாங்கும் மலையினது தோற்றத்தை விளக்கமான
வடிவத்தால் ஒத்த தன்மையாகத் தாங்கிக் கொண்டனர்.