பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்101

உய்விக்குமாறு நீயே மடிவாய்; இவ்வாறு, ஆறுதலற்றவர்க்கு ஆறுதல்
அளிக்கும் உனது அருளையே ஆராய்ந்து காணுமிடத்து, உன் அரிய
வீரத்தோடு கூடிய வல்லமையை யார் உள்ளவாறு அறிவார்?

     ஆய்ந்து + யார் - ஆய்ந்தியார்; யகரப் புணர்ச்சியில் குற்றியலுகரம்
இகரமாயிற்று.

                     140
ஒருநாத னென்று தனியேக னின்று மொருமூவ ரென்று
                                        பெயராய்க்
குருவாகி வந்து தணவாத கன்று குறுகாது மெங்கு முளனாய்ப்
பொருளாதி யென்று பொருடோறு நின்று பொருடோற ழிந்து
                                        சிதையா
யருவாகி நின்று முருவோயி யாரு னருவீர வாண்மை யறிவார்.
 
"ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும், ஒரு மூவர் என்று
                                       பெயர் ஆய்,
குரு ஆகி வந்து, தணவாது அகன்று குறுகாதும் எங்கும்
                                      உளன் ஆய்,
பொருள் ஆதி என்று பொருள் தோறும் நின்று, பொருள் தோறு
                                      அழிந்து சிதையாய்.
அரு ஆகி நின்றும் உருவோய், யார் உன் அரு வீர ஆண்மை
                                      அறிவார்?

     "ஒரே கடவுள் என்ற முறையில் நீ ஒப்பற்ற ஒருவனாய் நின்றும்,
ஆள் வகையில் ஒரு மூவர் என்ற முறையில், தந்தை மகன் தூய ஆவி
என்று பெயர் கொண்டு, குரு என்று ஆகி இவ்வுலகிற்கு வந்தும், முந்திய
நிலையினின்று பிரியாமல் பிரிந்தும், வந்த இடத்திற்குள் குறுகி
அடங்காமலும், எங்கும் இருப்பவன் ஆகி, பொருள்களுக்கெல்லாம்
ஆதிமூலம் என்ற முறையில் பொருள்தோறும் நின்றாலும், அப்பொருள்கள்
அழியுந் தோறும் நீயும் உடன் அழிந்து சிதையாமல் நிலைபெற்று, அருவப்
பொருளாய் இருந்தும் உருவப் பொருளாய் உலகிற்கு வந்தவனே, உன்
அரிய வீரத்தோடு கூடிய வல்லமையை யார் உள்ளவாறு அறிவார்?

     உருவோய் + யார் - உருவோயியார் - யகரவீறு யகர முதலோடு
இடையே இகரம் பெற்று வந்தது. அடுத்த பாடலில் 'உயர்வோயியார்'
என்பதற்கும் இது பொருந்தும். அரு * உரு - அருவம் * உருவம் -
உருவமின்மை * உருவமுண்மை.