பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்264

தேன் மொழிக் கிள்ளையும், செழும் பொற்
                                பூவையும்
பா மொழிக் கையிலும், பண்செய் தேனொடு
பூ மொழித் தும்பியும் மருளிப் பொங்கு ஒலி,
நா மொழிக் கீதம் போல் நரலப் போயினார்

     தேன் போன்ற மொழி பேசும் கிளிகளும், செழுமையான பொன்
போன்ற உருவங் கொண்ட மைனாக்களும், பாடல் போன்ற மொழியிற்
பாடும் குயில்களும், வீணை ஒலியைச் செய்யும் தேனீக்களோடு
பூக்களிடையே மொழி பேசும் தும்பிகளும் ஒன்றாகக் கலந்து பொங்கச்
செய்யும் ஓசை, நாவினால் சொல்லமைத்துப் பாடும் பாடல்போல் ஒலிக்க,
முனிவனும் மரியாளும் திருக்குழந்தையோடு அச்சோலை வழியே நடந்து
போயினர்.

                 5
அள்ளிலைக் கமலமே லணிச்சங் கீன்றமுத்
தொள்ளிலைக் குவளைகண் விழித்து குத்ததே
னள்ளிலைப் புறத்திழீஇ நழுவப் புள்ளெழக்
கள்ளிலைக் கொடுந்தடங் கடந்து போயினார்.
 
அள் இலைக் கமல மேல் அணிச் சங்கு ஈன்ற முத்து,
ஒள் இலைக் குவளை கண் விழித்து உகுத்த தேன்,
நள் இலைப் புறத்து இழீஇ நழுவ, புள் எழ,
கள் இலைக் கொழுந் தடம் கடந்து போயினார்.

     தம்மைக் கண்டு அஞ்சிய பறவைகள் எழுந்து பறப்பதனால், செறிந்த
இலைகளை உடைய தாமரை மலர் மேல் அழகிய சங்குகள் ஈன்று வைத்த
முத்துக்களும், ஒளி பொருந்திய இலைகளை உடைய குவளை மலர்கள் கண்
போல விழித்துப் பார்த்த வண்ணம் சொரிந்த தேனும், அவற்றின் செறிந்த
இலைகளிடையே இறங்கிப் பாய, அவர்கள் மலர்களில் தேனும், செடிகளில்
இலைகளும் கொழுமையாய்த் தழைத்த தடாகங்களையும் கடந்து போயினர்.

              6
நவிவரி நகுலமு நாவிப் பிள்ளையுங்
கவிவரி நிபுடமுங் கானக் கோழியுஞ்
சவிவரி நவிரமுங் களபத் தந்தியுங்
குவிவரி மலைச்சரி குதிப்பப் போயினார்.