இனையன கேட்ட
இருந் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி,
"தனை அன உலகம் படைத்தி; நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல்
உரைத்தி;
அனையன போதா, மைந்தனாய் உதித்தி; அம் மறை வழங்க நோய்
உற்றி;
முனை அன உலகத்தோர் உனைப் பகைத்து, முதிர் துயர் அழுந்துதி,
அந்தோ ! |
இவற்றையெல்லாம்
கேட்ட பெருந்தவத் தலைவனாகிய சூசை தான்
ஏந்திக் கொண்டிருந்த மகனை நோக்கி, "உன்னைப் போல் பெருமை
உடையதாக இவ்வுலகத்தை நீ படைத்தாய்; உன் கருணை தழைக்குமாறு
நல்ல வேத நூலை எடுத்துக் கூறினாய்; அவையெல்லாம் போதா என்றது
போல், நீயே மனிதனாக அவதரித்தாய்; அவ்வேதம் உலகில் வழங்குமாறு
துன்பங்களை ஏற்றுக் கொண்டாய்; போர் முனை போல உலகத்தோர்
உன்னை பகைத்து, அதனால், ஐயோ! நீ முதிர்ந்த துயரங்களில் மேலும்
அழுந்துவாய்.
இது, பின்வரும்
பாடலில் வரும் 'புனைந்தான்' என்ற சொல்லோடு
பொருள் நிறைவு பெறும் குளகப் பாட்டு. 'தனை அன' என்பதற்கு 'உன்
தனை (உன்னை) அன' என ஒரு சொல் வருவித்துப் பொருள் கொள்க.
'தனையன்' (தனயன்) என்பது, 'தனயன' என விளியேற்றதாகப் பழைய
உரை குறிப்பது பொருந்துமேற் கொள்க.
42 |
இன்னொளி
மகவே நினைப்பகைக் கினுநீ யீந்தநூற்
பகைக்கினுங் கயவர்
பொன்னொளி சுடரச் சுடுந்தழ லனையப் புன்கணாற்
பொலிவுறப் பெருகி
நின்னொளி குன்றா நின்மறை குன்றா நினைத்தநின்
னருட்டொழில் முடிப்பாய்
மன்னொளி மதுகை யோயெனக் கண்ணீர் மலரடிக்
கணியெனப் புனைந்தான். |
|