பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்475

"பின்றா வஞ்சத்து, அரிது உண்டோ? பெயர்க்கும் திறம் காணாது இரிந்து,
குன்றா வஞ்சத்து என் வலியும் குணிக்கிலீரோ?" எனச் சினந்து,
"பொன்றா உணர்வில், திறம் காணப் போவல் யான்!" என்று ஆர்த்து,
                                           எசித்திற்
சென்றான், சிதைவு எங்கணும் சிந்தச் சிந்தை சிந்தாக் கொடுங் கோனே.

     அழிவு எங்கும் சிதறிக் கிடந்த காலத்தும் தன் சிந்தனை தளராத
கொடிய மன்னனாகிய பேய்க்கரசன், "பின் வாங்காத வஞ்சனை
கைவந்தவிடத்து, செய்தற்கு அரியதொன்று உண்டோ? உங்களைப்
பெயர்த்தெறியும் வலிமை எதுவெனக் காணாமலே விலகி வந்து, அதன்
மூலம் குறையாத வஞ்சனை கொண்ட என் வலிமையையும் கருதாது
போயினீரோ?" என்று அப்பேய்களைச் சினந்து கொண்டு, "அழியாத
அறிவின் துணையால், அத்திறம் யாது எனக் காணும் பொருட்டு நானே
செல்வேன்!" என்று முழங்கி, எசித்து நோக்கிச் சென்றான்.

                       4
அண்டா தனயா வையுமண்டி யாய்ந்தான் கண்டான் றேவுருவும்
பண்டா யினதே வாலயமும் பணிப்பொற் றேருந் துகளென்னக்
கண்டான் பலரோர் கடவுடனைக் கருதி வணங்கக் கண்டான்கண்
ருண்டா யினவோர் காரணமு முணரா தெரிதீ வீழ்ந்தயர்ந்தான்.
 
அண்டா தன யாவையும் அண்டி ஆய்ந்தான்; கண்டான், தே உருவும்
பண்டு ஆயின தேவ ஆலயமும் பணிப் பொன் தேரும் துகள் என்னக்
கண்டான்; பலர் ஓர் கடவுள் தனைக் கருதி வணங்கக் கண்டான்;
                                            கண்டு,
உண்டாயின ஓர் காரணமும் உணராது, எரி தீ வீழ்ந்து அயர்ந்தான்.

     பேய்க்கரசன் அணுகாத யாவற்றையும் அணுகி ஆராய்ந்தான்; எங்கும்
பார்த்தான்; தேவர் உருவங்களும், பண்டு தொட்டு அமைந்திருந்த தேவர்
கோவில்களும் வேலைப்பாடமைந்த பொன் தேர்களும் தூளாகப் பொடிந்து
கிடக்கக் கண்டான்; பலர் ஒரே கடவுளைக் கருதி வணங்கக் கண்டான்;