கடவுள் வாழ்த்து
 
 
1சீரிய உலகம் மூன்றும்
  செய்து அளித்து அழிப்ப வல்லாய்,
நேரிய எதிர் ஒப்பு இன்றி
  நீத்த ஓர் கடவுள் தூய,
வேரிய கமல பாதம்
  வினை அறப் பணிந்து போற்றி,
ஆரிய வளன்தன் காதை
  அறம் முதல் விளங்கச் சொல்வாம்
1
   
 
2தே உலகு இறைஞ்சும் சூசை
  தேன் மலர்க் கொடியைப் பூத்து,
மூ உலகு அனைத்தும் எஞ்சா
  முறையொடு நிழற்றும் நாதன்
பூ உலகு எய்தி அன்ன
  பூநிழற்கு ஒதுங்கிச் சாய்ந்த
யா உலகு அனைத்தும் வாழ்த்தும்
  இரும் கதை இயம்பல் செய்வாம்.
2
   
 
3வளம் செயும் வரங்கள் தம்மால்
  வரைவு இல வளர்வு அமைந்த
உளம் செயும் அரிய மாட்சி
  உடையவன் ஆய தன்மை
நளம் செயும் வட நூலோர்கள்
  நவின்று இவற் சூசை என்பது
அளம் செயும் தமிழ்ச் சொல்லானும்
  அவன் வளன் என்பது ஒத்தே.
3