ஐயம் தோற்று படலம்
 
வாழ்த்து
 
527மாசு அறு துறவோர் அன்ன, வட திசை உள்ளி வெய்யோன்
காசு அறு மேடம் உற்றுக் களித்த பங்குனி நாள், கன்னி
ஆசு அறு கடவுள் எய்தி அவதரித்து உடலம் போர்த்த
ஏசு அறு காதை பாட இணை அவன் அடி மேல் கொள்வாம்.
1
   
இறைவன்அவதாரம்
கடவுள் கபிரியேலை மரியம்மாளின் தூது அனுப்புதல்
 
528தண் படு கொழுகொம்பு ஊன்றித்
  தலை படர் வல்லி அன்ன,
தெண் படு மதுப் பூ வாகை
  சேர்த்த நல் துணைவனோடு,
விண் படும் உடுக்கள் சூழ்ந்த
  விரைக் கொடி கன்னி, இவ்வாறு
எண் படும் அளவு அற்று
  ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில்,
2
   
 
529குணிக்க அருங் கருணை ஆர்ந்த
  குணத்தை ஆறு அமைந்த நாதன்,
தணிக்க அருங் குணுங்கை வென்று
  தரணியைப் புரந்து காக்க,
கணிக்க அரும் வளமை பூத்த
  கன்னியின் வயிற்றில் தான் ஈங்கு,
அணிக்க அரு முறையால்,
  மைந்தன் ஆக உள் கருத்து உற்றானே.
3
   
 
530மணம் முடித்து ஏழாம் திங்கள்
  வளர்ந்து தேய்ந்து ஒழுகா முன்னர்,
கண முடிக் கன்னி உள்ளம்
  கனிவு இயைந்து அமைய, கஞ்ச
மண மடல் குவியும் காலை,
  வந்த பங்குனி ஐ ஐ நாள்,
கணம் எனக் கபிரியேலைக்
  கடவுளே விட்டான் அன்றோ.
4
   
கபிரியேல்மரியாளிடம் தூது உரைத்தல்
 
531தூது என, வலியோன் ஆய கபிரியேல் சுடரைச் சூட்டி,
கோது என அவ் இருளை நீத்த கோதைகண் விரைவில் சென்று,
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து
போது என வழிந்த தேனைப் பொருது வெல் உரை உற்றானே.
5
   
 
532“பொய் அகன்று எழுவ தெய்வப் பூரண ஓகையாளே,
ஐ அகன்று உவப்பின் நாதன் அடைந்து வாழ் நெஞ்சத்தாளே,
வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண் இல் ஆசி
துய் அகம் பொலியப் பூத்த சுந்தரி, வாழி!“ என்றான்.
6
   
மரியாளின் பணிவு
 
533கனிக்கு அளவு உயர்ந்த கோடு
  வளையும் போல், கருணை ஆர்ந்த
நனிக்கு அளவு எளிமை பூத்த
  நறுமையில் பொருவாக் கன்னி,
தனக்கு அளவு அகன்ற ஆசி
  சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கு அளவு உளைந்து நாணி,
  வரைந்த ஓவியமே ஒத்தாள்.
7
   
 
534கலங்கின அகத்தும் தெள் நீர்க்
  கடல் அளறு ஆகா வண்ணம்,
மலங்கின அகத்தும் கன்னி
  மயக்கு உறாது, உரன் உற்று ஓங்கி,
“துலங்கின அகத்து உன் ஏவல்
  தொடர் நெறி தோற்றுவாய்“ என்று
இலங்கின அகத்துள் உள்ளி
  இறைவனை வணக்கம் செய்தாள்.
8
   
இரட்சகராகிய இயேசுவைக்கன்னியழியாமற்பெறுவாய்எனல்
 
535பளிங்கு அடுத்தவற்றைக் காட்டும்
  பான்மையால் இவள் முகத்தில்
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல்
  உறுதி சொல்வான்:
“விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு
  மீது உற உவகை பூத்த
வளம் கடுத்து உயர்ந்த மாதே,
  மயக்கு உற வருந்துவான் ஏன்?“
9
   
 
536“மதி பழித்து இலங்கு சங்கின்
  வாய்ந்த சூல் பழித்து, ஈங்கு உள்ள
விதி பழித்து, அரிய ஆற்றல்
  வேய்ந்தது ஓர் கருப்பம் ஆகி,
நிதி பழித்து ஒளிர்ந்த தோன்றல்
  நீய் பயந்து, அவற்கு இயேசு
துதி பழித்து இட்ட நாமம்
  சொற்றுவாய், கன்னி மாதே!“
10
   
 
537“அளி அமைந்து உயிர்த்த செம்மல்
  அநந்தன் சேய் என்ன நேமி-
யுளி அமைந்து, அரசு தாவித்து
  உயர்ந்த கோல் ஓச்சி, நாளும்,
களி அமைந்து அளித்த பாரில்
  காவல் என்று ஆள்வான்“ என்ன,
நளி அமைந்த இனிய சொல்லை
  நவின்று அடி வணங்கிட்டானே.
11
   
‘கன்னி மைந்தனைப்பெறுதல்ஏது‘என, ஐயுற்ற மரியாளுக்குக் கபிரியேல் கூறும் மறுமொழி.
 
538“தொய்யல் உற்று இறைவன் தாளைத்
  தொழுது வாழ் திரு வல்லோனே,
மய்யல் அற்று, அழிவு இல் கன்னி,
  மைந்தனைப் பெறுதல் ஏது?“ என்று
அய்யம் உற்று இவள் வினாவ,
  அரிய மாது அடியைப் போற்றி
வெய்யில் உற்று அடைந்த தூதன்,
  விடை மொழி உரைப்பான் மன்னோ.
12
   
 
539“கார் உலாம் உலகும் ஆங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம்
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றிச்
சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின், மகவை ஈன்றும்
சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ?“
13
   
 
540“மகன் பெறும் வயது முற்றி
  மைமை ஆம் எலிசபெற்கும்
தகல் பெறு கருப்பம் ஆகித்
  தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய்,
பகல் பெறு கன்னியாய் நீ
  பழுது இலா, சிறுவன் ஈனல்,
இகல் பெறு வினை என்றாலும்,
  இறையவற்கு எளியது அன்றோ?“
14
   
 
541“ஆவதும் கடந்த காட்சிக்கு
  அருந் தவன் ஈசயீயன்,
‘நோவதும் இன்றிக் கன்னி ஒரு
  மகவு உயிர்ப்பாள்‘ என்ன,
கோ அது இறைவன் சொன்ன
  கூற்று என உரைத்தல் பொய்யா
யாவதும் அறிதி அல்லால்,
  யான் நினக்கு உரைப்பது என்னோ?“
15
   
 
542“நேயம் ஆம் பிரீத்து சாந்து
  நிழன்ற தண் கவிகைக் கீழ், நீய்
தாயும் ஆய், ஒன்று ஆம் மூவர்
  தமில் சுதன் தன்னை ஈன்றும்
தூய மா கன்னிக்கு ஏதம்
  தோன்று இலா சுடரின் ஊங்கு
மாயமாய்க் காக்குவான் என்று
  அஞ்சலி செய்திட்டானே.
16
   
மரியாள் தியானத்தில் ஆழ்தல்
 
543தேற்று உரை உரைத்த
  தூதன் செப்பிய யாவும் கேட்டு
வேற்று உரை உரைத்திலாள், உள்
  விழைவு உற இறைவன் தாளைப்
போற்று உரை உரைத்து, கேட்ட
  புதிவினை ஓர்ந்து உசாவி,
ஏற்று உரை உடைத்த கன்னி,
  இரவு எலாம் போக்கினாளே.
17
   
 
544அருள் புறம் கண்ட செல்வத்து
  அமலை முன் எளிமை உள்ளி,
வெருள் புறம் கண்டு, கூசி,
  வெறுத்தலோடு அமைதல் தேற்றாள்,
தெருள் புறம் கண்ட மீனின்
  திரு முகத்து ஒளி வில் வீச,
இருள் புறம் கண்ட பாரிற்கு
  எரி விளக்கு ஒப்ப நின்றாள்.
18
   
விண்ணும் மண்ணும் மரியாளின் சம்மதத்தை ஆவலோடு
எதிர்பார்த்தல்
 
545இன்னவாய் உசாவும் வேலை,
  இளம் பிடி அன்ன ஓர் நல்
கன்னி வாய் மொழியைக் கேட்ப,
  கடவுளும் கடவுள் தன்னைத்
துன்னி வாழ் அமரர் யாரும்,
  துகள் தவிர்ந்து உலகம் எல்லாம்
அன்ன வாய் உய்யும் என்ன,
  அவாவொடு நிற்பார் அன்றோ.
19
   
கதிரவன் தோற்றம்
 
546சூழ் திரை உடுத்த பாரில்
  தோன்றிய நவத்தைக் காண்டற்கு
ஆழ்திரை விரைவின் நீக்க
  ஆதவன் கதித்துத் தூண்டும்
தாழ் திரை ஆழ்ந்த பாய்மா
  தழல் சினத்து உயிர்த்தது என்னக்
கீழ் திரை கவிந்த வானம்
  கேழ் ஒளி சிவந்தது அன்றோ.
20
   
மரியாளின் சம்மதமும் இறைவன் அவதரித்தலும்
 
547நல் நிலா உதயத்து, எந்தை
  நயப்பு உற, வியப்ப வானோர்,
மன்னி யாம் எவரும் வாழ்க,
  வந்த வானவனை நோக்கி,
கன்னி தாழ் சிரத்தைக் கோட்டி,
  “கடவுள் ஆள் என்னை, இதோ,
பன்னி, ஆயின நின் வாய்ச் சொற்படி,
  எனக்கு ஆக!“ என்றாள்.
21
   
 
548என்றுளி, கடுத்த அன்பால்
  இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர்
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர்
  மெல் உடல் ஆய், உள் ஆவி
சென்றுளி, மனுவும் வாய்ந்த
  தெய்வமும் பொருந்த வீக்கி
ஒன்றுளி, இறைவன் மைந்தன்
  ஓர் மனு மகனும் ஆனான்.
22
   
 
549மீ அகன்று உயர்ந்த மாண்பாள்
  விளங்கவே, உலகம் மூன்றும்
ஆய் அகன்று, ஒன்று நீத்து
  ஐயாயிரத்து இருநூறு ஆண்டில்,
பாய் அகன்று ஒளியின் சான்றோன்
  படர் இருள் நீக்கு முன்னர்,
நாயகன் மருளை நீக்க
  நான் என ஆயினானே.
23
   
 
550ஆதனே விதித்த நாளும் அமையமும் ஆகும் வேலை,
ஏதமே விளைத்த ஆதன் இழிவு ஒழித்து உயிர்கள் யாவும்
நாதனே அளிப்ப, சுங்க நாளையில் உதித்து, முன்னோர்
வேதமே உரைத்த வண்ணம் விகலம் அற்று ஆயிற்று அன்றே.
24
   
எங்கும் இன்பம் பொழிதல்
 
551யாழ் இசை பழிப்ப வானோர்
  இனிது எனப் பாட, ஆங்கும்,
ஆழ் அலை பழிப்பத் தொய்யல்
  ஆர்ந்த தாய் நயப்ப, வெய்யோன்
கேழ் ஒளி பழிப்ப அன்ன
  மனை ஒளி கிளர்ப்ப, வானில்
வீழ் உறை பழிப்ப எங்கும்
  விழு நயன் பொழிந்தது அன்றோ.
25
   
தேவதாயின் முகப்பொலிவு
 
552பளிக்கு வேய் செப்பில் உண்ட
  பருதி சூழ் எறிக்கும் வில்லால்
தெளிக்குமே போலும், தேன் பெய்
  செழு மலர் முகைகள் மோதம்
அளிக்குமே போலும், வாய்ந்த
  அன்ன மா கன்னி மாட்டு எவ்
உளிக்குமே மணமும் வில்லும்
  ஒளி முகத்து ஒழுகிற்று, அம்மா!
26
   
வானவர்பத்தியும் மகிழ்ச்சியும்
 
553சேய் எனத் தன்கண் வந்த
  தேவனை வணக்கம் செய்து,
தாய் எனத் திறம்பாக் கன்னி,
  தன் உயிர் கிளர்ப்ப, தாறு இல்
தூய் என, துளித்த மாரித்
  தொகையின் மேல் வரங்கள் வாரும்
வாய் எனக் கண்ட வானோர்
  வாய் அடைத்து அஞ்சா நின்றார்.
27
   
 
554அஞ்சிய வணக்கத்தோடும்
  அஞ்சலி செய்து, தாயும்,
துஞ்சிய உயிர்கள் உய்யத்
  தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம்
விஞ்சிய சேயும் வாழ்த்தி
  விரும்பி, வான்வாழ் உயர்வீட்டை
எஞ்சிய விழுப்பத்து ஓங்கி,
  இனிது எனப் பாடா நின்றார்.
28
   
தேவ கருப்பத்தை வானவர் துதித்தல்
 
555“வாழும் வான் உளோர் யாமும்
  மருவு நன்றி மேல் உயர்ந்து,
ஆழும் ஆழி சூழு பாரில்
  அரிவை உண்ட தே அருள்
சூழு சூல் இது ஆய போது,
  சுடர் எரிந்த வானும் மேல்
தாழு பூமி ஏற ஆய
  தகவு வாடு இல் ஆவதே ?.“
29
   
 
556“வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூங் கொடி,
கேடு இலாது, உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ,
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய் அற,
காடு யாவும் வாசம் ஆரு கனியை ஈனும் நாள் இதே.“
30
   
 
557“நாள் இதே உவப்ப ஞாலம். நசை அமிழ்ந்து இரா அறக்
கோள் இதே. கடுத்த தீது கொணர் குணுங்கின் நோய் அற,
வாள் இதே, பிழைத்த நீச மனு மலிந்த கேடு அற,
பீள் இதே, வியப்ப வீடு பெறுவுகின்ற நாமுமே.
31
   
 
558“பெறுவுகின்ற நாம வாகை பெருகுகின்ற வேலினான்,
உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள்
இறுவுகின்ற காலம் ஆக, இளவல் நின்ற நாதனைத்
துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்றார் யாவரே?“
32
   
 
559“துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால்,
விதி செய்கின்ற வேதம் நின்ற, மிகை துடைத்த ஞானம் ஆய்,
கதி செய்கின்ற ஈறு அகன்ற கனிவு உகுக்கு வான்மிசை
பதி செய்கின்று வாழ, ஒன்று பரிசு இலக்கம் ஆகுமோ?“
33
   
 
560“இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ,
உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம்
விலக்கம் ஆக, நாதன் ஆகி, மெலிய மைந்தன் என்று உளாய்,
கலக்கம் ஆக நேமி தேயு கடி அகம் கலங்கவே.
34
   
 
561அகம் கலங்க முனை உடன்று அழிவு உகும் குணுங்கு இனம்,
நகம் கலங்க உரும் இழிந்த நடையில், மண்டு எழுந்த தீச்
சகம் கலங்க வெரு அடைந்து, சடுதி இன்று இழிந்தது ஆம்,
முகம் கலங்க உறும் அரந்தை முடிய மண் தலங்களே.
35
   
 
562“மண் தலம் களங்கம் எங்கும்
  வாரி மாறும் வாள்முகன்,
கண் தலங்களும் கலங்கு,
  காலும், ஞான காந்தியால்,
விண் தலங்கள் அங்கண் நின்ற
  மீனும் நாண வேய்ந்த சூல்,
எண் தலங்கள் எங்கும் நன்றி
  ஈறு இலாமல் ஈயுமே.“
36
   
 
563“ஈறு இலாமல் ஏகி மூடர் ஈங்கு தேடு சீர் எலாம்
சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே
மாறு இலாது நீடு வாழ்வு வான நாதன் ஈகுவான்.
பேறு இலாத மனுவொடு ஒத்த பிணி அருந்த உற்று உளான்.“
37
   
 
564“உற்ற மீனும் வானும் வானம் உற்ற யாமும் ஓயும் ஈறு
அற்ற ஆசையோடு கூசு அதிர்ப்பில் வாழ்த்தும் நாதனைக்
குற்றம் மாறி வாழு கோதை குக்கி சூழ ஆய சூல்,
சொற்ற ஆய சீரதோ, தொடுத்த பாவின் மாலையால்?“
38
   
 
565“தொடுத்த பாவை நிகர, நீதி தொடரும் நூலின் முறையினால்,
அடுத்த மூ உலகம் யாவும் அரிய மூன்று விரலினால்,
தடுத்த வீர எதிர் இலாது, தகவில் தாங்கு பரமனை,
உடுத்த சூலில் அரிதில் தாங்கும், உவமியாத ஓர் விறலியே.“
39
   
 
566“விறலியால் உயிர்த்த பாலன் விறலினால் உயர்ந்து, அரா
மறலினால் அமைத்த தீது மரபினால் அழிந்து அற,
திறலினால் மிதித்து கூளி சிரம் எலாம் நெரித்து அடும்
மிறலினால், உகுத்த பாவம் விலகுவான் விளங்குவான்.“
40
   
 
567“வான் விளங்க மண் விளங்க வந்த நாதன் வாழியே!
மீன் விளங்கல் ஏய்த்த முத்து வேய்ந்த சிப்பி வாழியே!
கான் விளங்க உயிர் அளிக்கு கனி இராயன் வாழியே!
தேன் விளங்க முகை விளாது தேறு கன்னி வாழியே!“
41
   
 
568“வாழி, மைந்தர் உய்ய வந்த வான நாதன், வாழியே!
வாழி, நன்மை ஈய இன்மை மலி தயாபன் வாழியே!
வாழி, வாழும் வானின் வாழ்வு மண்ணின் வாழ்வு, வாழியே!
வாழி, கருணை ஆழி, வாழி! மதுர ஆழி வாழியே!“
42
   
 
569என்று பா வழங்கும் மாரி இத் திறத்து உகுத்த பின்,
மன்று பூ வழங்கும் மாரி, மட்டு இனத்து இறக்கிய
கன்று நீர் வழங்கும் மாரி, கற்றை விட்ட மாரியும்,
குன்று மீ வழங்கும் மாரி குறை என, பரப்பினார்.
43
   
இறைவன் அவதாரத்தால்உலகம் மகிழ்தல்
 
570ஒளி முகத்து உள யாவும் உவந்தது ஒத்து,
அளி முகத்து அமலன் மனு ஆயின
களி முகத்து, உயர் காயமொடு ஆர்கலி
நளி முகத்து அகல் ஞாலம் நயந்தவே.
44
   
வானிலுள்ள சுடர்களின் மகிழ்ச்சி
 
571சேது உலாவிய செங் கதிரோடு வான்
மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா,
மாது உலாவிய மாட்சி ஒப்பாக, விள்
ஏது இலா ஒளி ஏழ் மடங்கு ஆயதே.
45
   
புது மலர்களின் மகிழ்ச்சி
 
572மிகை உற்று ஆம் நிலம் காத்து அவன் வேய்தலால்,
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய,
நகை உற்றால் என, நாள் மலர், தேன் உக,
முகை உற்று ஆய முறுக்கு அவிழ்ந்து, ஆம் அரோ.
46
   
மலர் பொய்கைகளின் மகிழ்ச்சி
 
573கடுக் கொடு இங்கு கடுத்தன தீது அற,
நடுக் கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான்,
மடுக் கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே,
உடுக் கொடு அண்டம் இறங்கினது ஒத்தது ஆல்.
47
   
பறவைகளின் மகிழ்ச்சி
 
574வள்ள வாய் இள மாங் குயிலோடு எலாப்
புள் அவாவு உவப்பில் புகழ்ந்தால் என
உள் அளாம் மகிழ்வு ஒத்து இனி பாடலால்
எள்ள யாழ் இசை ஏய்த்தன ஆம் அரோ.
48
   
தீமைகள் அகல்தல்
 
575ஐயும் போயின; போயின ஆகுலம்;
மொய்யும் போயின; போயின முன் பழி;
மையும் போயின; போயின வஞ்சனை;
பொய்யும் போயின; போயின பூதமே.
49
   
பூமியின் பேரழகு
 
576நெடிது நாள் வெளி மூடிய நீல் முகில்
கடிது போதலில் வான் கதிர் கான்று என,
கொடிது நோய் ஒழியும் குணத்து, அன்று, அணி
முடி துளவு எழில் முற்றின ஞாலமே.
50
   
 
577அலகு அற்று ஆயின ஆண்டகை ஓர் மகன்
உலகத்து ஆயினன் என்று உணராத் தவத்து
இலகத் தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர்
விலகத் தாவிய மீ களி கூர்ந்ததே.
51
   
சூசையின் உவகை
 
578வேறு அரங்கில் உறங்கி விழித்து இறை
கால் தொழுங் கடை, காரணம் காண்டு இலன்,
மால் தகும் கறை மாறிய சூசை, உள்
தாறு இறந்த தடம் பட ஆழ்ந்தனன்.
52
   
 
579‘வைய நாயகன் வையத்தார் எலாம்
உய்ய வந்து உலகு உற்றனனோ?‘ எனா
ஐயம் ஆய், இறையோனை அருச்சனை
செய்ய வீழ்ந்து மகிழ்ந்து, அருள் சீர்த்தனன்.
53
   
 
580வீடு அமைந்தன வாழ்வு விழுங்கிய
வீடு அமைந்தன இன்பு அது வேலை, தன்
வீடு அமைந்து, அதின் மூழ்கிய வேலையின்,
வீடு அமைந்திலன், வெண் மலர்க் கோலினான்.
54
   
 
581பானு அகக் கதிர், பானு அது சூலில், வான்
பால் நகக் களியாள் தரப் பார்த்ததால்,
பால் நகக் களிப் பவ்வம் உள் மூழ்கினான்,
பால் நகக் கமழ் பாடலி வாகையான்.
55
   
 
582கண்டு அகந்தனில் வாழ்ந்து, தன் காதலி
கண்டு அகம் தகும் காதை தெரிந்து இலான்,
கண்டு அகன்ற கனிந்த இன்பு எய்தலால்,
கண் தகு அம் துளி கான்று களித்தனன்.
56
   
 
583கலையின் மேல் எழு கால் கவினாள் உடைக்
கலையின் மேல் எழு காந்தி பரந்து, அன
கலையின் மேல் எழுகும் களியோடு, அருங்
கலையின் மேல் எழு காட்சி அடைந்து உளான்.
57
   
 
584நாள் தொறும் கரு நன்று வளர்ந்து, பொன்
நாடு உறும் கருணைப் பொலி நாயகி
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல்
நாட அருங் கலையால் நவில்வு ஆம் கொலோ?
58
   
சூசையின் ஐயம்
ஐயத்தோற்றும் பகுதிக்கு முன்னுரை
 
585கால்வு அரும் பிழி கால் கமழ் வாகையான்,
கால் வரும் பரிசாய், களி மாற, மேல்
கால் வரும்படி, கம்பலை காய்ந்து உறுங்
கால், வருந்திய காதை சொல்வாம் அரோ.
59
   
ஐயங் கொண்ட சூசையின் கலக்கம்
 
586மாசு அறும் கருப்பம் ஆகி,
  வளர்ந்து தேய் திங்கள் ஐந்து ஆய்
ஆசு அறும் தரும கன்னி
  அகடு இனிது ஓங்கும் வண்ணம்,
ஏசு அறும் தவத்தோன் கண்டே,
  எய்திட காட்சி வாளால்
தேசு அறும் நெஞ்சம் ஈர்ந்த
  செல்லலோடு, ஐயம் கொண்டான்.
60
   
 
587மணி நிறத்து அழகின் சாயல்
  வழங்கிய மடவாள், முன்னர்
அணி நிறப் படலை ஆக
  அறம் எலாம் சேர்த்த தன்மை
துணி நிறத் தெளிந்தோன், கண்ட
  தோற்றம் ஈங்கு ஆய்ந்த காலை,
பிணி நிறத்து உருத்த துன்பம்
  பெருகியே முற்றிற்று, அம்மா!
61
   
 
588நாள் வளர் பருவத்து அம் சூல்
  நன்று உற வளரும், வாய்ந்த
பீள் வளர் பருவத்து எஞ்சாப்
  பெருந் துயர் வளர்ந்து மிக்கு ஆய்,
வாள் வளர் புண்ணில் செந் தீ
  வைத்து என, துயரும் ஆற்றா,
கோள் வளர் புணரி தாழ்ந்து,
  குளித்த நெஞ்சு அமிழ்ந்துகின்றான்.
62
   
 
589கதிர் வரு முகத்தின் மாமை
  காண்டலின், கண்ட கண்ணால்,
பொதிர் வரும் அன்பும் ஐயப்
  புன்கணும் உளத்து உண்டு, உண்ட
முதிர் வரும் துயரச் செந் தீ
  முழுதும் அவிப்பச் சிந்தி,
பிதிர் வரும் இரு கண் ஆறே
  பெருந் துயர் ஒழிக்கல் ஆற்றா.
63
   
 
590கார் முகத்து எழுந்து, சூழக்
  கதத்த கால் முகத்தில் பவ்வ
நீர் முகத்து எழுந்த ஓதம் நேர,
  நொந்து அலைந்த நெஞ்சான்,
நேர் முகத்து எழுந்த ஐயம் இவள்
  அகன்று அகலும் தன்மை
சீர் முகத்து எழுந்து, தேர்ந்து
  சிந்தையில் தேறல் ஓர்வான்.
64
   
சூசை தன் கண்களைப் பழித்தல்
 
591“பொய் எனக்கு அறைந்தீர், கண்ணே
  புரை உறாக் கன்னி முன் நாள்
மெய் எனக்கு அறைந்த தன்மை
  மெலியுமோ? பளிங்கில் தூயாள்
மை எனக் களங்கம் உற்று மயங்கும்
  முன், இரவி நீட்டும்
கை என் அக் கதிர்கள் மாறிக்
  கலங்கலே காண்பீர்“ என்றான்.
65
   
சூசை, மரியாள் எதிர்சென்று கூர்ந்து நோக்குதல்
 
592என்றனன் கருக்கொள் காந்தை
  எதிர் வர எய்தல் உற்றான்;
நின்றனன்; விழித்தான்; ஐயம்
  நீககி் அருகு நண்ணிச்
சென்றனன்; கருக் கண்டு உற்றான்;
  தேர்ந்து உளம் சிதைந்தான்; நொந்தான்
பின்று அனன், பின்றாத் துன்பம்
  பெற்று, அழுது உரைப்பன் மீண்டே:
66
   
சூசையின் புலம்பல்
 
593“வான் வளர் நாதன் ஏவி,
  மணம் செய நானே, பூத்த
தேன் வளர் வாகை விண்ட
  செழு மலர் வாடாது ஓங்க,
மீன் வளர் கண்ணின் நல்லாள்
  விளைந்த தன் கன்னி அம்பூ
கான் வளர் இதழ்கள் வாடிக்
  காய்ந்தது என்று உணர்தல் ஆமோ?“
67
   
 
594“புண் செயும் வை வாள்,
  செய்த புண்தனை ஆற்றும் தன்மை,
கண் செயும் காட்சி காட்டும்
  கரு உளம் கிழித்து, காட்டும்
பண் செயும் மொழியாள் மாட்சி
  பற்றிய துயர்கள் ஆற்ற,
எண் செயும் உணர்வில் இங்கண்
  யாது மெய் என்பது?, அம்மா!“
68
   
சூசை தன் கண்களை மீண்டும் பழித்தல்
 
595“நீர் விளை கடலோடு ஒத்து
  நெஞ்சு அலைந்து உருக, பின்றாச்
சூர் விளை காட்சி தந்து,
  துறும் துயர் தந்த கண்ணே,
ஏர் விளை இரவி நோக்காது
  இருள் அடைந்து அரற்றி, எஞ்சாக்
கார் விளை தாரை ஒப்பக்
  கலுழ்ந்து இனி வருந்துதீரே!“
69
   
ஆண்டவனை நோக்கிக் கூறுதல்
 
596“இருள் அற உணர்வில் தேர்ந்த
  இருந் திறத்து அரசர் கோவே!,
தெருள் அற உணர்ந்த ஐயம்
  செய்த நோய் இனி நீத்து, உற்ற
மருள் அற உணராய் கொல்லோ?
  மணம் செயப் பணி செய்து, அன்றே?
அருள் அற வருத்தும் தன்மை
  அதன் பயன் என ஓர்ந்தாயோ?“
70
   
சூசை தனக்குதானே சொல்லிக் கொள்ளுதல்
 
597“ஆவி நோய் செய்த இச் சூல்
  ஆய என் வினை அன்றேனும்,
தாவி நோய் செய்த ஐயத்
  தகுதியால், உணரா நானே,
காவி நோய் செய்த கண்ணாள்
  காசு உறச் செய்தாள் என்னில்,
ஓவி நோய் செய்த இப் பார்,
  ஒருங்கு எனை விழுங்கும் இன்றே!“
71
   
 
598“பார் உலகு அளித்துக் காக்கப்
  பரமனை உயிர்க்கும் தாயே,
பேர் உலகு உவப்பக் கன்னி
  பெயர்கிலள் பெறுவாள் ஆகில்,
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள்
  என் மணத் துணைவி ஆமோ?
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு, இந்
  நினைவு, அகன்று அகல்மின், அன்றோ?“
72
   
 
599அலை புறம் கண்ட நெஞ்சே!,
  அரந்தை உண்டு, உய்யல் உன்னேல்.
உலை புறம் கண்ட செந் தீ
  ஒருங்கு மூழ்குதி இன்று என்ன,
இலை புறம் கண்ட பைம் பூ
  இருங் கொடி வாட நொந்து,
கலை புறம் கண்ட நூலோன்
  கலங்கி, உள் உளைந்து சோர்ந்தான்.
73
   
இரண்டு திங்களுக்குப் பின் சூசை பெருந்துயகுதல்
 
600இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய்,
பரு மதி மயக்கிய பலவும், ஓர்ந்து, தேர்
ஒரு மதி உணர்கிலன், உயிர்ப்பு வீங்கி, வீங்கு
அரு மதி மா தவன், அரற்றி விம்முவான்.
74
   
 
601கருவினை தெளிகினும், காந்தைகண் புரை
வரு வினை உணர்கிலன்; வருத்தும் பாசறைப்
பெரு வினை உரைக்கிலன்; உருகி, பேர் உளத்து,
அரு வினை தனித்து உணர்ந்து, அலக்கண் மூழ்கினான்.
75
   
 
602திருகினால் நொய் அலர் சிதைதல் போல், உளத்து
உருகினான்; மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய்
பருகினான்; துயில் கில் ஆய்ப் பருகு இல் ஆகி, வீ
மருகினான், மது மலர் வயங்கும் வாகையான்.
76
   
 
603உள் படை பாய்ந்து அகன்று உடைத்த புண் எனா,
நட்பு அடை உளத்தினுள் நணுகும் பாசறை,
நுட்பு அடை துயரினும் நொந்த நோய் எனா,
கண் படை கீறிய கருத்தின் நொந்து உளான்.
77
   
 
604கார் முகத்து உடைந்த ஏறு அன்ன, காதலி
சேர் முகத்து உடைந்து, தான் கண்டு தேறலால்,
நீர் முகத்து உடைந்த நீண் குரம்பின் நீர்மையால்,
சூர் முகத்து உடைந்து, உளம் கரைந்து தோன்றினான்.
78
   
சூசையின் துயரை உணர்நத்கன்னித்தாய் வருந்துதல்
 
605உயர் வினை உணர்கு இலாது, உடலை இன் உயிர்
பெயர் வினை போன்று, தன் தலைவன் பேர் உளத்து
அயர் வினை அனைத்தும் உள் அறிந்த மங்கையும்,
துயர் வினை அடைந்து, உளத்து அரற்றித் தோன்றினாள்.
79
   
 
606நிறை பட, சிறப்பொடு நிமலன் செய் அருள்
மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு,
அறை படத் திரு உளம் அறிந்து இலாமையால்,
பொறை பட, துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள்.
80
   
 
607அன்பினால் இவன் துயர் அடைந்து உளான் எனா,
நன்பினால் உவமியா நங்கை, ஓர்தலால்,
துன்பினால் உருகினள்; துனியை நீக்கும் ஓர்
இன்பினால் உரம் செய இறைவற் போற்றினாள்.
81
   
 
608வல்ல வள் வளி உருத்து அதிர, வான் உயர்
பல்லவ மரமும் மேல் படர் பொன் வல்லியும்,
ஒல், அவை, அலைவு உறீஇ வளையும் உண்மை போல்,
இல்லவள் கொழுநனோடு இடுக்கண் எய்தினாள்.
82
   
மரியாள், தன் துணைவரை வணங்கித்
துயருக்குரிய காரணம் கேட்டல்
 
609உருகிய துணைவனை உருகி நோக்கினள்:
“பெருகிய துயர் செயும் பிணிகள் ஏது? ஐயா!
மருகிய அடிமை யான் வனைவது ஏது?“ எனா
அருகு இயைந்து, அனபுஉற அறைந்து இறைஞ்சினாள்.
83
   
சூசை மரியாளை விட்டுப் பிரியக் கருதுதல்
 
610கண் நலாள் உரைத்த சொல், காதின் உள் புக,
புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா,
எண்ணலால் அருந்துயர் எய்திச் சூசை, உள்
நண்ணல் ஆம் தழல் பொறா, பிரிதில் நாடினான்.
84
   
 
611காசு அடை கடல் எழும் கமலம் காலினால்
பாசு அடை தளம்பிய பான்மை, பாசறை
ஆசு அடை பொழுது, அரிது அமைந்த காட்சியால்
தேசு அடை உளத்தையும் சிதைப்பது ஆம் அரோ.
85
   
 
612நீரின் மேல் தாள் பிரிந்து அலைந்த நீர் மலர்ச்
சீரின் மேல் அலைந்து அலைந்து அமிழ்ந்தும் சிந்தையான்,
சூரின் மேல் அன்பு உளம் சுடச்சுட, தகும்
போரின் மேல் கலங்கி உள், புலம்பினான் அரோ:
86
   
 
613“மருள் தரு கரு என மாதைக் காட்டினேல்,
இருள் தரு கசடு அது ஆம்; இவை ஒளிக்கினேல்,
அருள் தரு மறை முறை அழித்தல் ஆம்: இனி,
தெருள் தரு பிரிவு அலால், செய்வது ஏது உண்டோ?“
87
   
 
614“என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி
தன் உயிர் பிரிந்து, யான் தனித்துப் போயின
பின், உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம் கொலோ?
உன் உயிர் உய்யலும் எளியதோ?“ என்றான்.
88
   
 
615என்றலும், ‘திரு உளம் இன்னது ஆகுமேல்,
மன்று அருந்துணரொடு வந்த பூங் கொடி
நின்று, அருந் துணை பெறா நீக்கி, கானிடை
சென்று அருந் தவம் இனிது‘ என்று தேறினான்.
89
   
 
616பிரிந்துளி துணைவியின் பிணி கண்டால், உளம்
முரிந்துளி துணிவு இல் ஆம் என, முடங்கு ஒளி
இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண், இல்
சரிந்துளி நீக்குப தனில் குணித்தனன்.
90
   
கதிரவன் மறைதல்
 
617பிரிவு அரும் அன்பினர் பிரியுங் கால் உறும்
புரிவு அருந் துயர்கள் கண் உறல் பொறாது, ஒளித்து
எரி வரும் பருதி போய், ஐயம் எய்தினோன்
முரி வரும் சிந்தை போல் இருளும் மொய்த்ததே.
91
   
சூசை இறைவனை வேண்டித் துயில்தல்
 
618‘என் உளம் அறிந்த ஓர் எதிர் இல் நாதனே,
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால்,
மின்னலை அகலுது. இவளை மேவி நீ்,
துன்னு அலைவு அகற்றுதி“ என்று துஞ்சினான்.
92
   
மரியாளின் கலக்கமும் வேண்டுதலும்
 
619குணித்த யா நினைவையும், குறை இல் கோது எலாம்
துணித்த மா மடந்தை, காண் சூழ்ச்சியால், தனைத்
தணித்த மா துணையவன் தணந்து போயினால்,
கணித்த மா துயரினால் கலுழ்ந்து அரற்றினாள்:
93
   
 
620“தாய் பெறும் தனயனை மறந்த தன்மையால்,
நீய் பெறும் அன்பு அருள் நிகழ்த்திலாய், ஐயா!
தீய் பெறும் வளைத்த வில் நிமிரும் சீர்மையால்,
நோய் பெறும் கருத்து அற நுதலின், தீது அதோ?“
94
   
 
621“வளம் படு என் வயின் வைகும் நாதனே
இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ?
உளம் படு துயர் அத்து உறுதி செய்க“ எனா
வளம் படு விழி சிவந்து அழுது வேண்டினாள்.
95
   
இறைவன் கபிரியேல் என்னும் வானவனை சூசையிடம் அனுப்புதல்
 
622எள் அருங் குணத்து இறை இரக்கம் மீது றிஇ,
“உள் அருந் துயரினால் உறுதி ஆம் எனத்
தெள் அரும் இருவருக்கு இடர் செய்தேன், இனி,
தள் அருந் துனி அறத் தயை செய்வேன்“் என்றான்
96
   
 
623என்றலும், கபிரியேற்கு ஏவல் செய்து, “அறா
மன்றலும் பிழியும் பெய் வாகைச் சூசைகண்
சென்று, அழுந்திய துயர் தீர்ப்ப, சூல் வினை,
நன்று அழுந்து உவப்பு எழ, நவில்குவாய்“ என்றான்.
97
   
தேவ தூதன் சூசையின் கனவிற்பேசத் தொடங்குதல்
 
624செல் ஆரும் உலகு இமைக்கும் செங் கதிரோன்
  உருத் தோன்றி, தேவ வல்லோன்,
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி,
  தேன் தூற்றும் விரதச் செவ் வாய்,
சொல் ஆரும் பங்கயக் கண், பொன் வரைத் தோள்,
  சுடர் அகலம் தோற்று மேனி
எல் ஆரும் கதிர் எறிப்ப, இக்கு உமிழும்
  மலர்க் கொடியோன் இடத்துச் சென்றான்.
1
   
 
625கண் புலன் ஆம் கதவு அடைத்துக் கரிய துயில்
  கொண்ட தவக் கரையைக் கண்டோன்
உள் புலனால் அறிவு அமைந்து, உள் உருக்குகின்ற
  துயர் நீக்கி உவகை எய்த,
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து,
  உளத்து உருவம் வேயத் தோன்றி,
மண் புலனான் இரு செவியால் வான் உரிய
  இன்பு அருந்த, மதுச் சொல் கொண்டான்:
2
   
தேவத் தூதன் ‘கன்னி, குழந்தையைப் பெறுவாள்‘என்ற வேதமொழியை நினைவூட்டல்
 
626“வையத்தார் வானகத்தார் வணங்குகின்ற
  வரம் பெற்ற மதி வல்லோனே,
அய்யத்தால் அகத்து அலக்கண் நுழைந்து அறுப்ப
  அலைவான் ஏன்? அழிவு இல் கன்னி,
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி,
  பெறுவள் என் அப் பொருவு இல் வாய்ந்த
மெய்யைத் தான் அறியாயோ, விரை உயர்க்கும்
  மலர் வாடா விருது நல்லோய்!“
3
   
‘பெறும் மகவுக்கு ‘இயேசு‘எனும் பெயரிடு‘எனல்
 
627“நேர் விளைந்த நீதி பரன் நெடுங் காலத்து
  உணர்த்த தயை நிகழ்த்தும் கால் ஆய்,
சீர் விளைந்த நின் மனைக்கண் கன்னி அறா
  தான் மகன் ஆய்த் திங்கள் ஏழு ஆம்.
சூர் விளைந்த பிணி இன்றிச் சூல் கன்னி
  பெறும் தேவத் தோன்றல் தானே
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என, இயேசு
  எனும் நாமம் பகர்வாய்“ என்றான்.
4