சீனயிமாமலை காண் படலம்
 
வானவர்சீனயி மாமலையின்சிறப்பு அறிவித்தல்
திருக்குடும்பத்தார்காசை நகர்நீங்கிச்செல்லுதல்
 
1703கோபுர மணி ஒளி குன்ற, பேர் அகழ்
நூபுரம் புலம்ப, மேல் கொடி நுடங்க, நீள்
மா புரம் சிறுமையின் வாட, போயினார்,
மீபுரம் குடி என மாட்சி மேன்மையார்.
1
   
 
1704கொன் தெளித்து எழுதியது என, நல் கொள்கையார்,
மின் தெளித்து எழுதிய செல்வம் விட்டு என,
பொன் தெளித்து எழுதிய புரமும் நாடும் விட்டு,
இன் தெளித்து எழுதிய இவர் அன்று ஏகினார்.
2
   
 
1705சூழ் விளை ஏனலும், பரியும், தோரையும்,
கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோர்த்து, இரு
நீழ் விளை நிரைத்த பல் காவும் நீங்கியே,
காழ் விளை பழுவமும் கடந்து போயினார்.
3
   
 
1706நறவு சேர் பொழில்களும், நாரை அஞ்சமோடு
உறவு சேர் தடங்களும், உவந்த ஓகையின்
துறவு சேர் மடங்களும், துணை தணப்பு அரும்
புறவு சேர் வனங்களும் கடந்து போயினார்.
4
   
சீனயி மாமலையில்வானவர்வரவேற்றல்
 
1707பூண் எறி ஒளியொடு புடை விண்ணோர் வர
நீள் நெறி கடந்து போய், நெடிய நெற்றியால்
சேண் நெறி தவழ் மலை செல்ல, சேர்ந்து இரு
கோள் நெறி உம்பர் வந்து எதிர்கொண்டார் அரோ.
5
   
சூசை நீர்யார்என வினாவுதல்
 
1708பொன்னின் நீர் மிளிர் திருப் புதல்வன் தாள் இணை,
மின்னின் நீரவர், தொழ வீழ்ந்து, சூசை உள்
உன்னி, “நீர் எவர்? சொல்மின் உற்றது“ என்றலும்,
துன்னி நீர்ச் சட்சதன் தொழுது சொற்றினான்:
6
   
சட்சதன் என்னும்வானவனின்மறுமொழி
 
1709“திரை நிரை மணி கொழித்து, ஒளி செய் சேண் செலும்
வரை நிரை வளர் நலம் காக்க, வான் தொழும்
விரை நிரை மலர் உரு வேய்ந்த இப் பிரான்
உரை நிரை, வதிந்த நாம்“ என்ன ஓதினான்.
7
   
சூசை, மலையின்சிறப்பு யாதென வினவல்
 
1710“எம் பர நாயகன் ஏவலால், உலகு
அம்பரம் நான்கையும் அமரர் காத்தலில்,
உம்பர இம் மலைக்கு உரிமை யாது?“ எனாப்
பம்பர வளன் சொல, அமரன் பன்னினான்.
8
   
சட்சதன்சீனயி மலையின்சிறப்பு உரைத்தல்
 
1711“பான்அயில் உருக் கொடு பரமன் எய்திய
கான் அயில் மலர் முடிக்கு ஆய காட்சியால்
மீன் அயில் வானினும் மிகப் புகழ்ந்தன
சீனயி மாமலைச் சிறப்பு இஃது ஆம் அரோ.
9
   
 
1712“தனத்திடை எழுத்து என, ஞானத் தன்மையான்
மனத்திடை எழுதிய மறையின் நூல், பினர்,
கனத்திடை ஒலி எழ, கல்லின் தீட்டிய
புனத்திடைக் குளிர் மலைப் பொலிவு இஃது ஆம் அரோ.
10
   
 
1713“ஏர் கெழு மணி வளர் எசித்து நீக்கலின்,
கார் கெழு குவட்டு வான் கலந்த இவ் வரை,
நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள்,
பார் கெழு அணி எனப் பரப்பி நின்றவே.
11
   
 
1714தேன் நிமிர் தொத்து அணி திமிசும் சாந்தமும்,
வான் நிமிர் கோட்டு, அணி வகுத்த மால் வரை
மேல், நிமிர் நாயகன் விளிப்ப, யூதர்தம்
கோல் நிமிர் மோயிசன் குவட்டில் ஏறினான்.
12
   
ஆண்டவன்மோயிசனுக்குப் பத்துக்கற்பனை தந்தவிதம்
மலைமேல்மோயிசன்
 
1715“கோண் இகந்து ஆள் வான் இறைவன் ஏவல்
  கொண்ட குலக் கோமான்
சேண் இகந்தான்; சேண் சென்ற குன்றத்து
  உச்சி செல்கின்றான்;
ஊண் இகந்தான்; துயில் இகந்தான்; வானோர்
  ஒத்து ஆங்கு உறைந்தனகால்,
மாண் இகந்தார் மனம் போல இருண்டு
  யாவும் மருண்டனவே.
13
   
 
1716“கோடு ஒளிப்ப எழினி என எழிலி
  மொய்ப்ப, குடக்கு இரவிச்
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ்
  மண்டி, திரண்ட இருள்
ஈடு ஒளிப்ப விளக்கு இட்டதே போல்
  மின்னி, எரிவாய் மின்
ஊடு ஒளிப்ப ஒல்கி இடித்து உலகம்
  எல்லாம் ஒலித்தனவே.
14
   
 
1717“புழுங்கிய வாய் எரி செந் தீப் புரிசை
  சூழ்ந்தாற் போன்று, ஓயாத்
தழங்கிய வாய் முகில் மின்னி, எண் ஐந்
  நாளும், தாழ் எவரும்
அழுங்கிய வாய் மெலிந்து அஞ்ச, இறைவன்
  தாள் சேர்ந்து, ஆர்ந்து அமிர்தம்
விழுங்கிய வாய் மோயிசனே வாழ்ந்த
  வண்ணம் விளம்பு அரிது ஆல்.
15
   
மோயிசன் பேரின்பக்காட்சி காணல்
 
1718“கண்ட கால் இனியனவும், எவர்க்கும்
  காண்டற்கு அரியனவும்
உண்ட கால், ஆங்கு அன்னான் உண்ட
  இன்பம், உயர் வீட்டைக்
கொண்ட கால் அதற்கு உவமை குணிப்பர்
  அல்லால், கொங்கு அலர்க் கோல்
விண்ட கால் வரம் பூண்டோய், மதியார்
  இங்கண், மேதினியார்.
16
   
 
1719“முறை கெழு நல் கேள்வியின் நூல் புலமை
  மிக்க மோயிசன், ஆங்கு
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து
  நிற்ப, ஒளி அணி வான்
துறை கெழு நல் காட்சியினோடு இன்பப்
  பவ்வம் தோய்ந்து உவப்ப,
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன்
  இச் சொல் வழங்கினன் ஆல்.
17
   
இறைவன்மோயிசனுக்குக்கூறிய செய்தி
 
1720“பல் உயிரை வியவர் எனப்
  படைத்த பின்னர், பார்த்திபர் போல்
நல் உயிரை அடைந்த மனுக் குலத்தோர்
  ஆக்கி, நல் வினையும்
புல் உயிரை அடும் வினையும்
  அறிந்து, இரண்டில் புலன் தேற
வல் உயிரை ஈந்து, உரி
  வேண்டுதல் வேண்டாமை வகுத்தனனே.
18
   
 
1721“தனத்து எழுதி வைத்தது என, உறுதி
  ஞானத் தகுதியின் நான்
மனத்து எழுதி வைத்த மறை மறையத்
  தீமை மல்கியதால்,
கனத்து எழுதி வைத்த மினல் ஒத்த
  வாழ்க்கை காதலித்து,
புனத்து எழுதி வைத்த பொருள் ஒத்து, அவ்
  வேதம் புறத்து ஒழிந்தார்.
19
   
 
1722“மருள் மொய்ப்பத் தீவினையும் இருளும்
  மொய்த்து, மனுக்குலத்தோர்,
இருள் மொய்ப்ப, மனத்து எழுதி வைத்த
  நுண்மாண் எழுத்து உணரா,
பொருள் மொய்ப்பத் திரிந்து, அந்தோ குருட்டால்
  வீழ்வர் புதவில் எனா
அருள் மொய்ப்ப, கல்லிடை அம் மறையத்
  தீட்டி அளிப்பல்‘ என்றான்.
20
   
இருகல்லில்பத்துக்கட்டளைகள்
 
1723“மின் அல்லால் நிகர்ப்பு அரிது ஓர் எழுத்தில்
  தீட்டி, விதித்து இரு கல்,
‘என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல்
  ஆவீர்; எனை மெய்மை
தன் அல்லால் சாட்சி வையீர்; திரு நாள்
  ஆடத் தவிர்கில்லீர்;
மன் நல் ஆரணம் இது‘ என்று, ஒரு கல்
  கொள் முவ் வாசகமே.
21
   
 
1724“தந்தை தாய் வணங்குமின் நீர்; கொலையே செய்யீர்;
  தவிர் காமம்
நிந்தையாய் ஊடு இல்லீர்; கரவீர்; பொய்யீர்;
  நிலைப் பிறர் இல்
சிந்தையாய் இரீர்; பிறர் கைப் பொருளே வெஃகீர்;
  தீங்கு இது என்று,
எந்தை ஆய்ந்து இரண்டாம் கல் தீட்டி வைத்த
  ஏழ் விதியே.
22
   
கட்டளை தந்த கடவுளை இக்குழந்தை எனல்
 
1725“மின் முகத்துப் பொறித்த அணி இரு கல் ஏந்தி,
  வெஞ் சுடர் போல்
நல் முகத்து மோயிசன் வில் வீசி, வெற்பின்
  நயந்து இழிந்தான்
புன் முகத்து மனு மகன் இந் நாதன் அந்
  நூல் புரிந்தமையால்,
தன் முகத்துத் தாள் பணிய உற்றது“
  என்றான் சட்சதனே.
23
   
சூசையும், மரியும்வணங்குதல்
 
1726பண் ஒன்று பாடல் ஒத்த பயன் எலாம் இமிழின் கேட்டு,
கண் ஒன்று மகனும் தாயும் கண் இமை ஒன்றிக் காத்த
மண் ஒன்று பைம் பூங் கோலான் மகவினை வாழ்த்தி, யாரும்
விண் ஒன்று வெற்பு வேத வெற்பு என வணங்கிச் சேர்ந்தார்.
24
   
மூவரும்தங்கிய சோலை
 
1727நீர் தவழ் தழலின் கஞ்சம் நிரைத்த நீள் வாவி அங்கண்,
ஓர் தவழ் முகைகள் தண் தாது இழிந்த தேன் இனிமை வெஃகி,
வார் தவழ் முரசு வாட்டி வண்டொடு தேனும் ஆர்க்கும்,
கார் தவழ் சினைகள் நீண்ட காவிடை வதிந்து நின்றார்.
25
   
 
1728பார் கெழு மடந்தை ஈன்ற
  படர்தரு, கைத் தாய், ஆம் வான்
கார் கெழு முலை தழீஇய
  கரம் எனச் சினைகள் நீட்டி,
நீர் கெழு பால் உண்டு, அப்பால்
  நிழன்று தன் தாயைக் காக்க,
ஏர் கெழு கைத் தாய் நோக
  இகன்று ஒளி ஒளிக்கும், காவே.
26
   
 
1729சிலை வளர் நாணின் கையின்
  சேர்ந்து அடர்ந்து இறுகப் பின்னி,
கலை வளர் உணர்வின் ஓங்கி,
  கள் உண்டார் தலையின் ஆடி
விலை வளர் மகளிர் நெஞ்சின்
  வெயில் பகல் இருளிற்று ஆகி,
அலை வளர் ஒலியன் ஆர்க்கும்,
  அலர் முகத்து அலர்ந்த காவே.
27
   
 
1730பூவிடை அளிகள் துஞ்ச, பொதும்பிடை மயில்கள் துஞ்ச,
கோவிடை அன்னம் துஞ்ச, கொம்பிடைக் குயில்கள் துஞ்ச,
மாவிடை முசுக்கள் துஞ்ச, மருளிடை இரவு துஞ்ச,
நாவிடை உரைகள் துஞ்ச, நலம் எலாம் துஞ்சும் காவே.
28
   
சோலையில்ஒரு மரத்திற்கண்ட காட்சி
 
1731இணங்கிய மலர்க்கா அங்கண்,
  எரி முகத்து அனுங்கிற்று அன்ன,
உணங்கிய தருவைக் கண்டார்;
  உவந்து, தாம் வதிந்த பின்னர்,
அணங்கு இயைந்த இலையும்
  பூவும் அணிந்த அத் தருவே, தம்மை
வணங்கிய தன்மை கோலி,
  வனப்பு அரிது அணியக் கண்டார்.
29
   
 
1732தீய் நிறப் பவளக் கொம்பின்,
  மரகத இலைகள் தீர்ந்து
தூய் நிறத் தரள மொட்டும்
  தூய் மணி மலரும் பூத்து,
காய் நிறத்து இலங்க வெண்பொன்,
  கனக நல் கனிகள் காய்த்து,
மீய் நிறத் தருவின் வண்ணம்
  மீ வளர் வண்ணம் போன்றே.
30
   
 
1733நளி வளர் மலர்க் கோல் சூசை
  நயத்து இவை வியந்து நோக்கில்,
களி வளர் உவப்பு மாற,
  கதத்த வான் திசைகள் நான்கில்
வளி வளர் பகையில் வீச, மரம்
  குழைந்து அமுங்கி வாடி,
வெளி வளர் சினைகள் நூறி
  வீழ்வது போலக் கண்டான்.
31
   
 
1734படம் புரை பொறித்த மாமை,
  பட்டு, அற, இலையும் இன்றி
விடம் புரை பட்ட காலால்,
  வியன் தரு, கெட்டது என்னா,
வடம் புரை தவத்தைப் பூண்டோன்,
  மதித்து, உளத்து அனுங்கும் காலை
சடம் புரை அனிலம் கையால்
  தகைத்து என நின்றது அன்றோ.
32
   
மரத்தின்கேடும்ஆக்கமும்கண்ட சூசை வினவல்
 
1735அற்றது என்று அலைந்த சாகி,
  அனிலம் அற்று ஒழிந்த போது
செற்றது என்று அரிந்த கீடம்
  தீண்டிய கனிகள் அல்லால்
மற்றது என்று ஒன்றும் குன்றா
  வனப்பு எழீஇ இலங்க, சூசை,
“உற்றது என்று உணர்த்தி“என்றான்.
  உவந்து சட்சதனும் சொன்னான்:
33
   
இம்மரம் வேதத்து இயல்பினைக்காட்டுகின்றது
என வானவர்வணங்குதல்
 
1736“எல் உடைச் சரங்கள் இரவு அற எழுதி
  இரவி சேர் உதைய மா மலை போன்று
அல் உடைப் பாவ மருள் அறப் பரமன்
  அருளிய சுருதி நூல் உதித்த,
செல் உடை அணிந்து எங்கணும் பெயர் சிறந்த
  சீனயி மா மலைச் சார்பில்,
தொல் உடைச் சுருதி மாண்பு இயல் காட்டத்
  தோன்றிய தரு இது ஆம் மன்னோ.
34
   
 
1737“தீட்டிய இரு கல் ஏந்தி மோயிசன் போய்,
  திசைகள் நான்கு உரைத்த நல் மறைநூல்
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள்,
  களிப்பில் இக் காவில் இத் தருவும்
நீட்டிய சிவை விட்டு, உறை முகில் நக்கி
  நிகர்ப்பு அரிது எழுதிய மாமை
ஈட்டிய மணிப் பூஞ் சினைகளைப் பரப்பி,
  இரு நிலம் நிழற்றி நின்றதுவே.
35
   
 
1738“இன்பு உற உயிர் செய் இத் தருக் கனிகள்
  யாம் உண, ‘பிறர் கையில் இரந்து
துன்பு உறப் போவல் என்?‘ எனப் பலரும்
  சூழ்ந்து, தம் காவின் நஞ்சு உகும் காய்
அன்பு உற, இனிது என்று அருந்து என, பல பொய்
  ஆரணம் எங்கணும் விதித்த
பின்பு, உற மலர்ந்த இத் தரு, நொந்த
  பெற்றி போல் மெலிந்தது மாதோ.
36
   
 
1739“மனத்து எழும் சுருதி மெலிந்தன அளவில்,
  வனப்பு எலாம் ஒழிந்து தான் மெலியக்
கனத்து எழும் கொம்பர் வாடலே கண்டீர்;
  கருணையோடு இப் பிரான் மாக்கள்
இனத்து எழுந்து, எங்கும் இம் முறை வழங்கும்
  என்று, இவன் எய்திய முகத்தில்,
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து,
  தரு எலாம் உவந்தது கண்டீர்.
37
   
 
1740“செல்லின் மேல் வரையில் வரைந்த நூல் இவன் தான்
  தீட்ட ஓர் விலங்கலும் ஏறி,
கல்லின் மேல் வரைந்த எழுத்து ஒழிந்து ஆகக்
  கண்டு, அருந் தயையின் அச் சுருதி
எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக,
  இருப்பு அயில் ஆணியால் பொறித்து,
வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு,
  மெலிவு அற விளங்கலே செய்வான்.
38
   
 
1741நனை முகத்து உவந்து நக்க இத் தருப் போல்,
  நர தெய்வ குமாரன் ஈங்கு அருளும்
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி,
  வெகுண்ட நால் திசை வளி எழுந்து,
முனை முகத்து அடித்த தன்மையின் மறையை
  முருக்கிடப்பல மதத்தாரும்,
கனை முகத்து உலகும், அலகையும், உடலும்
  கதத்த நால் பகைகள் மொய்ப்பனவே
39
   
 
1742“வேர் அற அடித்த வளி என எங்கும்
  விளைத்த பல் பகை இவன் அருளால்
நேர் அற நீங்கி, கிருமி தீண்டிய காய்
  நிகர்த்த பற்று எஞ்சினர் அல்லால்,
பேர் அற நல்லோர் சிதைவு உறா வாழ்ந்து,
  பெயர்கு இல மறையொடு பொலிந்து
சூர் அற நிற்பார் இத் தருப் போன்று, இத்
  தோன்றல் செய் உறுதியால்“ என்றான்.
40
   
சூசை தேவ குழந்தையை நோக்கிக்கூறுதல்
 
1743இனையன கேட்ட இருந் தவத்து இறைவன்
  ஏந்திய மகவினை நோக்கி,
“தனை அனே உலகம் படைத்தி; நின் கருணை
  தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி;
அனையன போதா, மைந்தனாய் உதித்தி;
  அம் மறை வழங்க நோய் உற்றி;
முனை அன உலகத்தோர் உனைப் பகைத்து,
  முதிர் துயர் அழுந்துதி, அந்தோ!
41
   
 
1744“இன் ஒளி மகவே, நினைப் பகைக்கினும்,
  நீ ஈந்த நூல் பகைக்கினும், கயவர்,
பொன் ஒளி சுடரச் சுடும் தழல் அனை அப்
  புன்கணால் பொலிவு உறப் பெருகி,
நின் ஒளி குன்றா, நின் மறை குன்றா,
  நினைத்த நின் அருள் தொழில் முடிப்பாய்,
மன் ஒளி மதுகையோய் எனக் கண்ணீர்
  மலர் அடிக்கு அணி எனப் புனைந்தான்.
42
   
மூவரும்மலையினின்று நீங்குதல்
 
1745சினை வரும் கனித் தீம் சுவை உண்ட பின்,
அனைவரும் பொழில் நின்று நடந்து போய்,
கனை வரும் குளிர் கால் சவரம் செய,
சுனை வரும் சுருதிக் கிரி நீங்கினார்.
43
   
மரியாள்ஏங்கிக்கூறுதல்
 
1746நீங்கி, ஆயின யாவையும் நீங்கு இலள்
ஓங்கி, ஆர்வம் உணர்ந்து, உடு பூண்டனள்,
பாங்கு யாழ் இளகிப் பரிவு ஓதை கொண்டு
ஏங்கினால் என ஏங்கி, இயம்பினாள்:
44
   
 
1747“நாதன் ஓதிய நல் மறை நாகம் மேல்
சாத ஆரணச் சாகி என்கோ யான்?
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது,
ஏதும் ஈர் உயிர்ச் சாகி என்கோ யான்?
45
   
 
1748“உம்பரின் சுவை இக் கனி உண்டு, நீள்
கொம்பர் இன் நிழற் கீழ் உறை கோது இலார்
அம்பர் இன்பு உறும் அண்டர் என்கோ யான்?
இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான்?
46
   
 
1749“அறத்துச் செவ் வழி ஆரணம் எந்தை கைத்
திறத்துத் தீட்டிய சீர் பெரிது என்பெனோ?
மறத்துத் தேர் இல மாக்கள், அது உட் கொளா,
புறத்துப் போக்கிய புரை பெரிது என்பெனோ?
47
   
 
1750“தொல்லின் தம் மனத்து ஆசு அறத் தோன்றிய
எல்லின் ஒண் மறை இற்று ஒழிந்தார் என,
செல்லின் ஓங்கிய இன்ன சிலம்பு மேல்,
கல்லின் தீட்டிய ஆண்டகை காட்டினான்.
48
   
 
1751தீட்டிக் காட்டிய திவ்விய நூல், புற
நாட்டில் கற்றது எனா, நரர் பல் கதை
பூட்டி, போற்று அரு நூல் என, பொற்பு அறம்
கோட்டி, கோது உலகு ஆர்ந்தன கொள்கையே.
49
   
 
1752“நஞ்சு இதே அமுது இஃது என நாடுதற்கு
அஞ்சியே நரர் தேறிலர் ஆதலால்
நெஞ்சிலே அருள் நேரிய எந்தை நீ
எஞ்சியே மறை காட்டிட எய்தினாய்.
50
   
 
1753பொய்யைக் காட்டிய நின்னையும், பொய் அற
மெய்யைக் காட்டிய வேதமும் நூக்கினர்,
கையைக் காட்டி உரைப்பவர் காதையே
மையைக் காட்டினும், நூல் என வவ்வரே.
51
   
 
1754“காவி வாட்டிய கண் மணிக் காதலே,
ஓவி வாட்டிய உன் உடல் புண் பட,
வாவி வாட்டிய கோடையின், மானிடர்
ஆவி வாட்டிய அடும் பகை செய்வரோ?
52
   
 
1755“சுடரப் பொன் சுடும் தீ என, தொல் மறை
படர, பொங்கி வரும் பகைப் பாசறை
அடர, பொன்று இல ஆரணம், எங்கணும்
தொடரப் பொம்மி வளர்ந்து விளங்குமே.
53
   
 
1756“வேண்டிய யாவையும், வேண்டுவ தன்மையால்
ஈண்டில் ஆக்கிய ஈடு உள நின் அருள்
தாண்டி மாற்றுவர் ஈங்கு இல, தாரணி
ஆண்டு, யாரும் அளிக்குமினோ!“ என்றாள்.
54
   
கதிரவன்மறைவு
 
1757கன்று ஒளித்த கறவையின், இன்னணம்
நன்று ஒளித்த நமக்கு இனைந்து, ஆய்க்கதிர்
நின்று ஒளித்தலின், நேமியும் மெய்ம்மறை
என்று ஒளித்த மனத்தின் இருண்டதே.
55
   
மரத்தின்கீழ்தங்குதல்
 
1758அணி நிறத்த சினைப் படத்து, ஆர் ஒளி
மணி நிறத்து அலர்ப் பந்தரில் வந்து, பேர்
அணி நிறத்து அமரர் புடை ஆர்ந்து, அரும்
பணி நிறத்து அறம் பற்றினர் வைகினார்.
56