பாலைபுகு படலம்
 
மூவரும்பாலைச்சுரத்தை அடைதல்
 
1759கார் எழு நிசி கோன்மை கடிய, வில் ஒளி அம்பால்,
தேர் எழு சுடர் வெம் போர்ச் செங் கொடி உயர் தோன்ற
பார் எழு களம் எங்கும் பறவைகள் முரசு ஆர்ப்ப,
போர் எழு பொழுதாகப் புலரி வந்து இவர் போனார்.
1
   
 
1760வான் பயில் மதி ஏந்தும் வடி வடிவு அடியாளும்,
தேன் பயில் மலர் வாகைத் திருமறை அறையோனும்,
ஊன் பயில் உரு நாதன் ஒளி அடி தொழுது ஏந்தி,
கான் பயில் மலர் பூத்த கடி வன நெறி போனார்.
2
   
 
1761துயில் என விரி பூங்கா தும்பிகள் குழல் ஆக,
குயில் இனம் முழவு ஆக, குளிர் பொழில் அரங்கு ஆக,
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி,
அயில் என அழல் வீசும் அருஞ்சுர நெறி போனார்.
3
   
 
1762நண்ணிய பொருள் நீங்கி நல்குரவு எதிர் உற்ற
புண்ணிய மரபோர், உட் புலன் அயர்வு இலர் போன்றே,
மண்ணிய வனம் நீங்கி, வசு குடி உறை கானம்
கண்ணிய நெறி போகக் கண்டு, அழுதன காவே.
4
   
 
1763பூ இடை அழ வண்டு, பொதும்பு இடை அழ மஞ்ஞை,
கா இடை அழ அம் பூ , கடி மலர் தவழ் யாறு
தாவு இடை அழ, ‘அந்தோ, தகாது!‘என அழ யாவும்,
கோ இடை அரசு ஆள்வோர் கொடு வனம் அருகு உற்றார்.
5
   
மேற்சபை என்னும்பாலை நிலத்தின்கொடுமை
 
1764மேல் சபையாக வானோர் விருப்பு எழீஇ மருங்கில் சூழ,
நூல் சபையாகக் கற்றோர் நுதலிய புகழின் மிக்கோர்,
கோல் சபையாக மூவர், கொடுந் துயர் குடியாய் வைகும்
பேற்சபை என்னும் கானம் பெற்று, உளம் தளராப்புக்கார்.
6
   
 
1765காட்டிய விரலைத் தீக்கக்,
  கண்ட கண் விழியைத் தீக்க,
“சூட்டிய கொடிய கானம்
  சுடும்“ எனில், எனும் வாய் தீக்க,
ஈட்டிய அழலை எண்ணில்,
  எண்ணிய மனத்தைத் தீக்க,
கோட்டிய மனத்தின் தீக்கும்
  கொடியது ஓர் சுரம் அது அன்றோ.
7
   
 
1766புனல் பசை இழந்த கானில், பொழி துளி உள்ளி வந்தால்,
கனப் பசை இழந்து தாமும், கார்த் திரள், கனன்று வேக,
இனப் பசை இழந்த தீயோர், இரவலர் தம்மைக் கண்டு,
மனப் பசை இழந்த கோரம் மானிய சுரம் அது அன்றோ.
8
   
 
1767தீய் வயிறு ஆர்ந்த காலும், செஞ் சுடர்க் கதிரும், செந் தீ
மேய் வயிறு ஆர்ந்து வேகும் விரி மணற் பரப்பும் தீ ஆய்,
நோய் வயிறு ஆர்ந்த கானம், நொடை நல மாதர் வஞ்சம்
காய் வயிறு ஆர்ந்த வாயும் கண்களும் மனமும் போன்றே.
9
   
 
1768போர் முகத்து அழன்ற வீரர்
  புகைந்து எனப் புகைந்த கானம்,
ஏர் முகத்து எழுந்த மூவர்
  எய்திய வேலை, தானும்,
தார் முகத்து உவந்த மன்றல்
  தகும் புது மகளிர் போன்று,
நீர் முகத்து, இவர் அன்பு ஆர்ந்த
  நெஞ்சு எனக்குளிர்ந்தது அன்றே.
10
   
 
1769அயின்று எழும் விரை வாய்த் தாழை
  அலர் மடல் பள்ளி பல் நாள்
துயின்று எழும் இள நல் வேனில்,
  துதித்த பங்குனியில் செல்ல,
குயின்று எழும் குயில்கள் காட்டக்,
  கோது அற மகிழ் பூங் காவில்,
பயின்று எழும் புகழின் மிக்கோர்
  பணி முகத்து உவந்த பாலை.
11
   
பாலைச்சுரம் மகிழ்தலும் மூவரையும்வரவேற்றலும்
 
1770மைவ்வினை அழன்ற நெஞ்சில்
  மருவிய அருளின் மாட்சிச்
செவ் வினை புக்க பாலால்
  தீது அறச் சிறந்த தன்மைத்து,
அவ் வினை செகுத்த மூவர்
  அணி முகத்து அருளினாலே
வெவ் வினை உடன்ற கானம்
  விரை முகத்து உவந்தது அன்றோ.
12
   
 
1771நிறை மலர் ஒழுக்கத் தாள் கீழ்,
  நித்திலப் பரப்பில் தூய
நறை மலர் பரப்பினாற் போல்
  நளிர்பட ஒழுகிச்சூழ
உறை மலர் மணவாய்த் தென்றல்
  உரைத்த மங்கலத்தின் வீச
மறை மலர் பூண்ட மார்பர் மகிழ்வு அலர்
  மனத்தின் போனார்.
13
   
 
1772மின் நிறக் கொடியைச் சூடி
  விளங்கிய மணியின் வில் செய்
நல் நிறத்து ஆரம் பூண்டு
  நாடி வந்து, அணியின் தோன்றும்
செல் நிறக் குடையிற் கொன்ற,
  செழித்த செங் கதிரின் வெப்பத்து,
இன் நிறக் குளிர் பூ நீழல்
  இயங்கிய சிறப்பின் போனார்.
14
   
வானவர்பல உருவில்தோன்றிப்பாடுதல்
 
1773பாகு இளம் சுவை பெய் வில் ஆர்
  பவள வாய்த் துறையில் வைத்த
நாகு இளம் தரளம் காட்டி
  நகை தரு மடந்தை போல,
ஆகு இளம் பணிப் பூங் கானத்து,
  அழகு அணி செய்தால் என்ன,
வாகு இளஞ் சுடர் செய் மேனி
  வானவர் காட்டி நின்றார்.
15
   
 
1774ஈர் எழு வகுப்பில் தேர்ந்த
  இன மணி நல் யாழ் வாங்கி,
ஓர் எழு குரலின் ஓதை
  உரிக் கிளை தளிர்ப்ப, பாகின்
நேர் எழு மிடற்றின் ஓதை
  நெறிகள் மூன்று இயக்கிக், கூட்டி,
பார் எழு நடங்கள் வாட்டப்
  பாடினர் சிறப்பின் வானோர்.
16
   
சூசை மகிழ்ந்து பாடுதல்
 
1775காமம் சால் வியப்பில் ஓங்க
  கண்டு அவை உள்ளி, பைம் பூந்
தாமம் சால் கொடியோன், விண்ணோர்
  தளங்களுள் தலைவன் என்ன,
ஏமம் சால் இன்பத்து ஓர்ந்த
  இரும் புகழ் தளிர்த்து, தேவ
நாமம் சால் வழங்க, நல் யாழ்
  நடையொடு பாடினானே:
17
   
சூசை பாடிய பாடல்கள்
 
1776பாலையின் வெப்பம்
  பனி மருதத்து ஆக்கினையே,
மாலையின் தாமத்து
  அருள் நீதி வல்லோய்!
அருள் நீதி வல்லோன்
  அடி சென்றார், இங்கண்,
தெருள் நீதி நீங்கா தார்,
  தீது இடும்பை நண்ணாரே.
18
   
 
1777“வீங்கு ஓத நீர் நிலை ஆம்,
  வெய்ய நஞ்சு இன் அமுது ஆம்,
ஈங்கு ஓத ஒப்பு இறந்த
  எந்தை அடி சென்றால்!
எந்தை அடி சென்றார்,
  எங்கும் இடர் மொய்த்து உலவச்,
சிந்தை மகிழ, தாம் தீது
  இடும்பை நண்ணாரே.
19
   
 
1778“வான் வாழ் அமரர் வணங்கித் தலை ஏற்றும்
தேன் வாழ் அடி சென்றார் தீது இடும்பை நண்ணாரே;
தீது இடும்பை நண்ணுவர், இச் சீறடியை நாடாதால்,
வாது இடும்பை வாழ்க்கை வழுக்கு இவறும் தீயோரே.“
20
   
வானவர்விருந்து அமைத்தல்
 
1779ஏழ் இசைக் குழலினோடு இனிய பண்
  தொனியினோடு இசை விடாத
யாழ் இசைக்கு, இவை எலாம் இணர் நறுங்
  கொடியினோன் அறைய, நாதன்
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு
  அலர் நறா மழையை வாரிச்
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து
  அமரரே தொழுது போனார்.
21
   
 
1780இன்ன வாய், மருதம் ஒத்து இணர் நறா
  உமிழ் வனத்து இவர்கள் பல் நாள்
துன்ன, வான் உலகினில் துறுவினார்
  அனைய உள் சுவையின் விள்ளா,
உன்ன வாய் மகிழ்வு துய்த்து, உணவு உணா
  நினைவும் அற்று ஒழுகி, ஓர் நாள்
அன்ன வாய் அமரர் உற்று அணுகி, வான்
  உரி விருந்து அமைதல் செய்வார்.
22
   
 
1781கொழு நிலா மரகதக் கொடியின் மேல்
  மணிகள் பூத்து அயரும் பந்தர்,
விழு நிலா விளையும் முத்து அனைய மீன்
  விரிவு செய் விரி விதானத்து,
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து,
  இணர் நறா அமளி பாய்த்தி,
செழு நிலா மணி முகத் திருவினோர்
  அமளியில் பொலிய நின்றார்.
23
   
 
1782வில் கலத்து உரு நிலா இலக விட்டு
  அமரர் சூழ் வியவர் ஆகப்,
பொன் கலத்து அலர் நறாப் புனலும் உய்த்து,
  அகில் அலர் புகையும் ஆட்டி,
பல் கலத்து அமிர்தமே பல சுவைக்கு
  அமைய வானவர் பரப்பிச்,
சொல் கலத்து இணை இலாச் சுவையில் அத்
  தகவினோர் துதியோடு உண்டார்.
24
   
 
1783சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும்
  பொழுது அருந் தகுதி வானோர்
கால் வரும் கவரியும் கமழ்வரும்
  புகையையும் கனிய வாரி,
நால் வரும் கல நரம்பு இசை நயந்து
  எழ, நறா நளின வாயால்
பால் வரும் சுவை வரும் பல நரம்பு
  இசையொடும் பாடினாரே.
25
   
அப்பாலைவனத்தின்சிறப்புக்குக் காரணமான
எலிய முனிவனைப் பற்றிக்கூறுதல்
 
1784“தன் தோல் உரித்த பாம்பு ஒத்த
  தவத்தின் வாளால் பொறி ஐந்தும்
கொன்றோன், உளம் பற்று இருள் புக்கா
  குன்றாச் சீல விளக்கு ஏற்றி
நின்றோன், வரும் கால் கடந்து உரைக்கும்
  நிறை சொல் வல்லோன், பாப் புகழும்
வென்றோன் எலீய மா முனிவன்
  விருந்து உண்டு உவந்த வனம் இதுவே.
26
   
 
1785“கான் வாழ் சுவைத் தேன் துளி நக்கி,
  கத வாழ் மாறா வாழ்வு ஒழிந்து,
வான் வாழ் இறையோன் தனை மறுத்து,
  வசைப் பல் தேவர்த் தொழக் கண்டு,
தேன் வாழ் காவும் மன் உயிரும்
  தேம்பி வாட, முவ் வருடம்,
தான், வாழ் உறை கொள் முகில் முகமும்
  தகைத்த சாப மா முனியே.
27
   
 
1786“அந் நாள் எல்லாம், தான் நுழை வாய்
  அசல முழையுள் புக்கு உறைந்த
பல் நாள் எல்லாம் முறை தவிராப்
  பறந்து ஓர் காகம் உணவு உய்ப்ப,
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து,
  முதல்வன் அடி சேர்ந்தான் என்ன,
எந் நாள் எல்லாம் கோடாத
  இயல்பின் சீல மா முனியே.
28
   
 
1787“பிழையின் கொடுங் கோன் துறவர் எலாம்
  பின்றாச் சினத்துக் கொன்ற பினர்,
முழையின் கிடந்த இம் முனியும்
  முரிக்கக் கொணர்மின்!‘ என விட்ட
உழையில், ஒரு மூ ஐம்பது வேல்
  உழவர் ஒருங்கும் வாய் மொழியால்,
மழையின் கனலை வான் பொழிய!‘
  வைது என்று எரித்த மா முனியே.
29
   
 
1788“கொழு கொம்பு இழந்த கொடி அன்ன,
  கொழுநன் இழந்த இளங் கைமை
செழு கொம்பு அன்ன ஊன்றுதற்குத்
  திதியின் நின்ற ஓர் மகனும்
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து,
  விம்மி அழும் தாய் நனி உவப்ப,
எழு கொம்பு அன்ன அம் மகனை
  எழுப்பித் தந்த மா முனியே.
30
   
 
1789“வலம் புங்கு அவனி மா மகள் தன்
  மருங்குல் மணி நீள் மேகலையோ,
சிலம்பும் பசிய பொற் சிலம்போ
  சிறந்த சோர்தான் நதி சேர்ந்து,
புலம்பும் திரையைக் கம்பளத்தால்
  புடைப்ப அரிதின் பிரித்து, நளிர்ந்து
அலம்பும் திரையில் அடி தோயாது
  அப்பால் கடந்த மா முனியே.
31
   
 
1790“அப்பால் கடந்த போழ்து, இருளை
  அகற்றி வீசும் சுடர் கண்டால்,
வெப்பால், இரவி இரதமென
  வேய்ந்து, குளிர்ப்ப விடும் கதிரின்
ஒப்பால் மதி தன் இரதமென,
  உயர் நின்று இழிந்த தேர் ஏறி,
எப்பால் அனைத்தும் அணுகாத ஓர்
  இடத்தில் சேர்ந்த மா முனியே.
32
   
 
1791“இன்னும் இந் நாள் நல்உயிர் ஈறு
  இன்றி இன்பக் கடல் நின்றோன்,
பின்னும் இறைவன் தனில் குணித்த
  பின் நாள் தனில், இவ் உலகு எரிந்து,
மன்னும் உயிரோடு உக முடிதல்
  வருங் கால், அக் கால் மீட்டு, ஒளியால்
மின்னும் உருவோடு, இவ் உலகில்
  விளங்கத் தோன்றும், மா முனியே.
33
   
 
1792ஒல்காத் தவத்தின் வரத் தொகையோன்
  ஒரு நாள் சுடும் இவ் வனத்திடையே
செல்கால், தளர்ந்து, ஓர் வானவனும்
  சென்று தந்த அடை அருந்தி,
அல்காத், திறத்து நாற்பது நாள்,
  அருந்தா, பசியா, நெடு நெறி போய்,
நல்காத் திரு நல்கிய மலை, வான்
  நண்ணி முகில் தோய் முடி சேர்ந்தான்.
34
   
வானவர்திருமகனைத்தொழுதல்
 
1793“எஞ்சாத் திறத்தை அம் முனிக்கு அன்று
  ஈந்தோன், ஈங்கண் இன்று உமக்கே
துஞ்சாத் தயையின் வான் விரும்பும்
  சுவை இவ் விருந்து ஈந்தவன் யாரே?
அஞ்சாத் திறத்தின் மூ உலகும்
  ஆண்டு, உம்மிடத்து மகன் ஆகி,
விஞ்சாத் துதி மேல் நின்ற தயை
  விளைக்கும் இவன் தான்!“ எனத் தொழுதார்.
35
   
பாலைவழியைக்கடத்தல்
 
1794தேன் திறத்து இன்னவை செவியிற் கேட்டனர்
வான் திறத்து இன்பு உறீஇ, வைய நாதன் என்று
ஊன் திறத்து இளவலை ஆசி ஓதினர்,
கான் திறத்து ஐ எழு காதம் போயினர்.
36
   
வானவன்மிக்கயேல்கூற்று
 
1795ஐ எழு காவதம் ஏகி, அப்புறம்
கை எழு சூலத்துக் கவர்க்கும் முந் நெறி,
பொய் எழு வழி எனப் போதல் கண்டு உளி,
மெய் எழு மிக்கயேல் விளம்பினான் அரோ
37
   
 
1796“நீர் விளை மாராஅமும், நிழல் செய் ஓமையும்
ஏர் விளை முகத்து இடம் கிடந்த இந் நெறி,
பார் விளை வாழ்வு எனப் பனி முகத்து, அழல்
சூர் விளை கொடியது ஓர் சுரம் அது ஆம் அரோ.
38
   
 
1797“வலம் படக் கிடந்த அவ் வழியும், முன் நிலை
நலம் படக் காட்டிய சிறியர் நட்பு என,
வலம் படச் செலச் செல அஃகி, கோறு மா
திலம் படப் புகுந்து, கல் சிலம்பில் செல்லும் ஆல்.
39
   
 
1798“நிலத்து இடத்து அரசர் கை நீதிக் கோல் என,
வலத்து இடத்து எங்கணும் வழுவு இலா, நடுப்
புலத்து இடத்து, உறைவழி, பொருள் பொய்யா மறை
நலத்து இடத்து, எசித்தனை நல்கும் ஆம்“ என்றான்.
40
   
மூவரும்மரநிழலில்தங்குதல்
 
1799செவ் வழி உளத்தினோர் சிறந்து செவ்விய
அவ் வழி நடந்து, ஒளி அரசன் தாழ்ந்து போய்,
மெய் வழி ஒளி தரச் சூழ்ந்த விண்ணவர்,
மை வழி இரா ஒரு மரத்து ஒடுங்கினார்.
41
   
மூவரும் காலையில் சோலை வழியே செல்லுதல்
 
1800மா இருள் விழுங்க வான் வாய் அங்காந்து என,
சேய் இருந்து ஐந்திரி தெளித்த கால் எழீஇ,
தாய் இரு கரத்து எழுந் தனயற் போற்றினர்
போய், இரு புடை நிழல் பொலி செல்வு ஏகினார்.
1
   
 
1801.ஊன் வழங்கிய பிரான் உறலின், போற்றல் போல்,
வான் வழங்கிய தரு வளைத்த நெற்றியில்
தேன் வழங்கிய கனி கலந்த தேன் மலர்
கான் வழங்கிய பொழில் எதிர் கண்டார்; அரோ.
2
   
 
1802பொன் கலத்து அலர் முகை பொழிந்த வாசனை
தன் கலத்து உயிர்த்து அன தண் அம் கால் எதிர்;
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என
வில் கலத்து எழில் நலோர் விளிப்ப வீசியே.
3
   
 
1803தேர் எழும் அரசு எனச், சிலைத்த தெண் திரை
நீர் எழும் பருதி தன் நெடுங் கதிர்க் கணை
பார் எழும் இருட்கு எதிர் பரப்பி ஓட்டலின்
கார் எழும் இருள் எலாம் கரந்த கா அதே.
4
   
 
1804கள் உற மலர்ந்த காக்கலந்த நீழலோடு,
அள் உற மலி இருள், இரு கண் அட்டதால்
தெள் உற உளத்து எழீஇத் திளைத்த ஞாபகம்
உள் உறத் தவம் கனிந்து உறையும் கா அதே.
5
   
 
1805சீர் விளை புவி எழில் முகத்தின் சீர்மையால்
ஏர் விளை எசித்து நாட்டு அருகில், ஏந்திய
தார் விளை குழல் எனக், கமழ் தண் தாது அவிழ்,
கார் விளை நிழலொடு, கரிய கா அதே.
6
   
 
1806காழகத்து அள் இருள், கதர் குளித்து ஒளி
வாழ் அகத்து எழுந்த மா மதிப் புத்தேள் எனா,
சூழ் அகத்து இருண்ட கா, தோன்றல் தோன்றி, அன்பு
ஆழ் அகத் தகவினோர் நுழைந்து உள் ஆயினார்.
7
   
 
1807இழை இடைக் குளித்த தம் இளவல் ஏந்தினர்,
மழை இடைக் குளித்த மின் என்ன வந்து, பூந்
தழை இடைக் குளித்தனர், மலர்ந்த தாது தேன்
கழை இடைக் குளித்து இழி கள் ஒத்து ஓடவே
8
   
 
1808கண் சிறை படுத்திய நிழல் செய் கா இடை,
மண் சிறை ஒழித்து அற வந்த மூவரை
பண் சிறை படுத்து இசை பாடி வாழ்த்தின,
ஒண் சிறை புடைத்த புள் உவந்த ஈட்டமே.
9
   
 
1809பனி வளர் பூந் துறை பருகும் தேன் உகத்
தொனி வளர் யாழ் எனப் பாடத் தும்பிகள்,
கனி வளர் சினை தொறும் கரிய யூகங்கள்
நனி வளர் ஆரிய நடம் செய்து, ஏகினார்.
10
   
இரு முனிவர்கள்,அவர்களைச்சித்திர கூடத்துக்கு
அழைத்துச்செல்லுதல்
 
1810பரவக் கதிர் வீசும்முகத்து இம் மூவர்,
  படர் பூங் காக்
கரவக் கடிது ஏக, கனிகள் கொய்து அங்கண்
  திரிந்த
குரவத் துகில் குளித்த குரம்பை முனிவர்
  எதிர்கொண்டு,
விரவக் கனிவு ஓங்க, விருந்து ஓம்பினர் போல்,
  விளம்புகின்றார்.
11
   
 
1811“மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த
  வான் வடிவீர்
விண் சேர் இனம் தானோ? மாக்கள் குலமோ?
  விழைவு ஓங்கிப்
பண் சேர் இசைப் பறவை பாடித் தவம் சேர்
  பதி, சேர்ந்து,
கண் சேர் அணி கடந்த கவின் நீர், சொல்மின்
  உவந்தது“ என்றார்.
12
   
 
1812“நசை சேர், வான் பதியோர் நாமே; உடல் சேர்
  நடலை அறா,
வசை சேர் மண் பதியோர் நாமே;
  யூதர் மண்டிலத்தின்
மிசை சேர் பிரான் பணியால் எசித்து நேடி,
  விரும்பிய புள்
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூந் தாது
  எழில் கொடியோன்.
13
   
 
1813“வைத்த திரு வீங்கும் எசித்து நாட்டின்
  வாயில் இதே
பொய்த்த வழி காட்டு இப் பொழில்கண் மயங்கா,
  புடை வம்மின்,
துய்த்த அருள் உமிழும் முக நல்லிர்!“ என்று
  சொற்றி, மலர்
மொய்த்த தேன் துளிக்கும் வழி, அம் மோனர்,
  முன் நடந்தார்.
14
   
 
1814கான் ஆர் மலர் முகைக்
  கண் விழித்து நோக்கிக் கனி நகைத்த
தேன் ஆர் காவில் நெடு நெறி போய்த்,
  தீம் சொல் செல் குறைய,
மானார் மனம் என முள் மலிந்த
  வேய் ஆர் வனம் கடந்து,
பான் ஆர் கதிர் கண்ட வெளியே
  கண்டு பரிவு அற்றார்.
15
   
 
1815கம் உகும் படர் கதலிக் கனிகள் நக்கும் கரும்பு ஒரு பால்,
கமுகும் பூகமும் ஆர் கனி முத்து அணிந்த கா ஒரு பால்,
அம் உகும் செங் கமல வாவி ஒரு பால் அணிசெய்க,
அம் உகும் சித்திர நல் கூடம் சென்றார் அத் தகவார்.
16
   
 
1816வினைகள் மாறிய வண் தவம் செய் மோனர்
  விழைந்து இறுப்ப,
சுனைகள் கண் குவளை இமையா நோக்க,
  சுனைக் கரைமேல்
சினைகள் ஆகிய ஆயிரந் தூண் நாட்டி,
  சித்திரங்கள்
நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூடம்
  நடு வதிந்தார்.
17
   
அத்திட்டன்என்னும்முனிவனுக்கும்சூசைக்கும், துறவறம்பற்றி
நடந்த உரையாடல் சித்திரக்கூடத்தின்அழகு
 
1817குடம் புரையின் தோன்றும் மதி
  கொழித்த கற்றை தெளித்து, மணி
வடம் புரையின் சித்திரங்கள்
  வரைந்து தோன்றும் வடிவம் அதோ?
படம் புரையின் தீட்டிய, பொன்
  பாங்கார் நோற்ற பான்மை அதோ?
சடம் புரையின் தோன்றிய வான் தளமோ?
  தேறல் சால்பு அரிதே
18
   
 
1818காவி அம் கண் கிளர் விளப்பான்
  இமையா நோக்கிக் கனிவு ஓங்கி,
ஆவி அங்கண் உண்டு எனினும்,
  நெடு நாள் மோனர் அண்டியதால்,
ஓவியங்கள், மோனம் உறீஇ,
  அவை கண்டாரும் ஓவியமாய்
மேவி, அம் கண் பிறழாது,
  விளைத்த இன்பால் வியப்பவரே
19
   
நூறு முனிவர்கள் அவர்களை வரவேற்றல்
 
1819அணிச் சாயல் ஈர் அறம் சேர்த்து
  அணிந்த மார்பு ஏந்து அருந் தவத்தோன்,
பணிச் சாயல் வரைந்த உருப்
  பலவும் சூழப் பார்த்தன கால்,
பிணிச் சாயல் வாட்டிய மெய்ப்
  பிணைவின் மாண்பு ஆர் நூறு அடிகள்,
துணிச் சாயல் மலர் முகத்துத்
  துன்னி, ஆசி சொற்றினர் ஆல்.
20
   
 
1820துன்பு மிக ஐம் பொறியைத்
  துமித்த தன்மைச் சுடர் ஞானத்து
அன்பு மிகப் புடை சூழ்ந்த
  அரிய மோனர், “அருந்துதிர்“என்று
இன்பு மிகக் கனிந்த கனி
  இளந் தீம் கந்தத்தோடு, அளித்த
பின்பு, மிக அருள் மூத்தோன்,
  “பெயர்ந்த நாடு எந் நாடு?“என்றான்.
21
   
வளன் தம்வருகை கூறல்
 
1821திருப் புகழே, புகழ் மறையே,
  திருவே, நூலே குடி வைகும்,
மருப் பொழிலே, விரைப் பணையே
  வளர் யூதேய நாட்டிலிருந்து,
உருப் புகை வெம் வனச் சுரம் வந்து,
  உவப்ப இங்கண் சென்றனம்“ என்று,
இருப்பு எனவே மறை உந்தும்
  இரத மார்பன் வளன் சொன்னான்.
22
   
அத்திட்டன் தாங்கள்வனம்வந்த காரணம்கூறல்
 
1822“நாகத்தால் உண்ட மதி
  நாறாக்குன்றும் நவை ஒப்ப,
மோகத்தால் உண்ட மனம்
  முதிர் பல் செல்வம் முரிந்து கெடும்
போகத்தால் விளை நசைத் தீப்
  பொறாது தண் காப் புக்கனம்“ என்று,
ஆகத்து ஆர் அருள் மிக்க
  அதிட்டன் என்பான், அறைகின்றான்.
23
   
வனத்தில்துறவறம்செய்தல் பற்றிய தருக்கம்
 
1823“சிக்குருவை வித்திய பின்,
  திண் காழ் ஆச்சா விளைவு ஆமோ?
சொக்கு உருவை உண்டு உண்டு
  துகளோடு ஆசை வளர்ந்தன பின்,
இக்கு உருவைக் காட்டிய பூ
  எழுதும் காவும் சுடும் அன்றோ?
ஒக்கு உருவை ஒழித்து, நசை
  ஒழியும்“ என்றான் மலர்க் கொடியான்.
24
   
 
1824“பிறந்த நாள் துயர் ஒக்கப் பிறந்து,
  பேராத் துணை வைகிச்,
சிறந்த நாள்அகலா, நூல் திறம் கொண்டு
  ஆசை அகன்றனரே,
இறந்த நாள் உய்வர்; அலால்,
  இருந்த நாட்டில் துயர் ஆற்றார்,
பறந்த நாள் கூண்டு ஒழியும் பறவை“
  என்றான் அதிட்டன் என்பான்.
25
   
 
1825“நசை அட்டு, நசை கடந்த நயம் செய்
  வான் தாள் அணுகின், மெய்ப்
பசை அட்டு வாழ்வர்; அலால், பகைத்த
  பாரில் வதிந்தன நாள்,
வசை அட்டு வாழ்பவரே, மலி நீர்
  சூழ்ந்த மலை நண்ணி
அசைவு அட்டு நிலை பெறுதல் அன்ன“
  என்றான் மறை வடிவோன்.
26
   
 
1826“போர் ஏந்திப் பகைத்தன போல், புணரி
  பல் நாள் புடை புடைப்ப,
வார் ஏந்தி முகில் புதைத்த வயிரக்
  குன்றும் குன்றும் அன்றோ?
தார் ஏந்தி வசை, ஏந்தும் சடத்த
  மண்ணோர் தளிர்த்த பகைச்
சூர் ஏந்தி நிற்பர் எவர்? சொல்மின்“
  என்றான் தொல் உணர்வான்
27
   
 
1827“நீர் ஏந்தி மலர் மிதக்கும்
  நிகரா, வல்லோன் கை அருளின்
சீர் ஏந்தி, எவர் நில்லார்? தெறுநர் தெவ்வும்
  திருப் பயத்தால்,
ஏர் ஏந்தி வரைந்திட்ட இன்ன காதை காட்டும்“
  என்றான்,
பார் ஏந்தி அணி திலதம் என நல் சீலப்
  படலையினான்.
28
   
 
1828பொன் சாயல் அரிது அங்கண்
  பொறித்த காதை என்றன கால்,
வில் சாயல் கண் கனிய
  விரும்பி நோக்கி, “ மதிப் புத்தேள்
தன் சாயல் மதி வல்லோய்,
  தளிர்ந்த ஐயம் தீர் சிறிது;
புன் சாயல் சொல்வல்“ எனப்
  புகல் மீண்டு உற்றான், தவம்மூத்தோன்.
29
   
சித்திரக்கூடம் அமைந்த நீபகன்கதை
நீபகன்சோலைக்கு வருதல்
 
1829புதி வளர் திங்கள் கோட்டுப்
  புரை வளர் அசனி வில்லான்,
கதி வளர் வளி முன் பாய் மா
  கடந்த போர் முகத்து ஏறு அன்னான்
நிதி வளர் மகுடம் பூண்ட
  நீபகன் என்னும் கோமான்
துதி வளர் துறவு வெஃகி
  துணர் வளர் காவில் வந்தான்.
30
   
 
1830“நீள் அரி மதர்க் கண்ணார்தம்
  நெடும் பகை துறத்தல் உள்ளி
வேள் அரிது அமர்ந்த போரில்
  வெற்றி கொண்டு, வந்து மீண்ட
கோள் அரி நடப்பதே போல்,
  கோன்மையும் நகரும் நீக்கி,
வாள் அரிது இடையில் பூட்டி,
  வந்து இவண் தனித்துச் சேர்ந்தான்.
31
   
 
1831“தெள் உற மின்னி ஆர்த்த செல் உறும் படர்ந்த நெற்றி
கள் உற மலர்ந்த கானம் கண்டு, அருகு உறுங் கால், வேட்கை
உள் உற புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன
அள் உற வாசம் கான்ற அனிலம் ஆங்கு எதிர் கொண்டானே.
32
   
ஆற்றைக்கடத்தல்
 
1832“புலம்பு உரை கேட்டு நண்ணிப்பூம்
  பொழில் ஒருங்கும் சூழ்ந்து, ஈர்
அலம் புரை, முகைத்த தேன் பூ
  அலர் இரு கரையில் விம்மி,
சிலம்பு உரை சிலம்பி ஓடத்தீம்
  திரை சுருட்டும் கங்கை,
கலம் புரை மணிப் பொன் மார்பன்,
  கண்டு அதைக் கடக்கல் ஆற்றான்.
33
   
 
1833“அவா உறீஇ நொந்து நிற்ப,
  அம்புலிக் குழவி வெண் கோட்டு
உவா உறீஇ அமைவ நோக்கி,
  உரம் கொடு உந்தி அப்பால்
இவா உறீஇ இழிந்த பின்னர்,
  இயைந்த தன்மதத்த மாவைச்
சுவா உறீஇ விழுங்கல் கண்டான்,
  துளங்கு பொன் குன்றத் தோளான்.
34
   
காவினுள்நுழைதல்
 
1834“மலை புறங்கண்ட மார்பன்
  மனம் வியந்து, அயிர்ப்பின் நோக்க,
அலை புறங்கண்ட கங்கை
  அரவு எழ அளவு இல் விம்மி,
சிலை புறங் கண்ட கூலம்
  சிவணி மேல் பிரழக் கண்டே
இலை புறங் கண்ட கா உள்
  இயைந்த வாள் ஏந்திப் புக்கான்.
35
   
நீலகன், பாடலும் பல்லிசையும்கேட்டல்
 
1835“பொன் கலத்து அரிட்டம் ஏந்திப்
  பூத்த கா நுழையும் போழ்தில்,
சொல் கலத்து இனிய பாடல்,
  தொடர்ந்த கின்னரம் பண் மற்றுஅப்
பல் கலத்து எழுந்த ஓதை
  பரிவு அற இமிழி கேட்டு,
‘வில் கலத்து அலர்ந்த இக் கா
  விரும்பி வந்தனர் ஆர்?‘ என்றான்.
36
   
 
1836கா எலாம் முகைத்துப் பூப்ப,
  கால் எலாம் சவரம் வீச,
பூ எலாம் நறுந் தேன் தூவ,
  புள் எலாம் விளித்துப் பாட,
கூ எலாம் நிகரா வண்ணக்
  கோல நீள் நெறி போய், அப்பால்
மேவு எலா வனப்பு வாட்டும்
  வியன்ற ஓர் வெளியுள் சென்றான்.
37
   
 
1837மோட்டு இளந் தேறல் தூவி,
  முகைத் தரு ஒழுங்கின் சூழ,
நாட்டு இளம் பிடியார் சாயல்
  நகை மயில் அகவி ஆட,
சேட்டு இளஞ் சினைகள் தோறும்
  திரு மணிச் சாயல் பைம் பூ
வேட்டு இளம் விழிகள் விண்ட
  இளந் தரு நடுவில் கண்டான்.
38
   
 
1838மீன் நிறத்து அலர்ந்த பைம் பூ
  விரை நிறத்து ஒழுகத்தீம் தேன்,
கோன் நிறத்து இடையில் வாய்ந்த
  கொழுந்தரு அணுகி நோக்கி,
கான் நிறத்து அலர்ந்த சாந்தக்
  கடி மரம் என்று நிற்ப,
பான் நிறத்து இனிய பண்சேர்
  பாடல் கேட்டு, ஒல்கிப் பார்த்தான்.
39
   
நூறு மாதர்கள்எதிர்வரல்
 
1839சூழ் அக மரங்கள் தோறும்,
  சூழ் உளைந்து ஈன்றதே போல்,
காழ் அகம் பிளந்து,
  சாய்ந்த காழக முகிலின் கூந்தல்,
கேழ் அக உடுக் கண், மின்னின்
  கெழு நுசுப்பு, அணித் தூசு ஏந்தி,
வாழ் அகம்மலர்ந்த நூறு
  மாதரே வருவ கண்டான்
40
   
 
1840நிழல் எடுத்து உலவு விண்மீன்
  நிறை மதி சூழ்ந்ததே போல்,
அழல் எடுத்து எரிக்கும் கண்ணார்
  அரசனை வளைத்து, வீணை
குழல் எடுத்து இனிய ஓதை
  குயில் எனக் குயில, நூறும்
கழல் எடுத்து ஆடிப் பாடிக்,
  கனிவு எடுத்து இனைய சொன்னார்:
41
   
மாதர்கள்கூற்று
 
1841“தூசு அனை மரங்கள் சூழ்ந்த
  துணர்ப் பொழில் முன்னி, வில் செய்
காசு அனை விருப்பம் பூண்ட
  கருத்து உனை மறவா வெஃகும்
சாசனை உவப்ப வந்தாய்;
  சாசனை உவப்பின், காவும்,
ஈசனைக் கண்டதே போல்,
  இன்பு எழக் காணாய்!‘ என்றார்.
42
   
சாசனையைக்கண்டு ஐயுறல்
 
1842பாண் நெறி இவற்றைப் பாட,
  படர்ந்த சந்தனமும் வீறி,
வாள் நெறி பழித்த நீள் கண்
  மடந்தையே புறப்பட்டு எய்த,
வேள் நெறி ஒழுகித் தான் முன்
  விழைந்த சாசனையின் சாயல்
கோள் நெறி முகத்தில் கண்டு,
  குலைந்து, அயிர்ப்பு உற்று நின்றான்.
43