நீர் வரம் அடைந்த படலம்
 
மூவரும்,மோசையின்பேழையில் வைத்து
இடப்பெற்ற ஆற்றை எதிர்ப்படல்
 
1933கார் முகத்து அகன்ற திங்கள்
  கதிர்செய் போல் தோன்றல் தோன்ற,
போர் முகத்து அளிகள் ஆர்க்கும்
  பொழில் அகன்று, இருவர், போகில்,
பார் முகத்து இரு கண் ஒத்தார்,
  படர் வழி கடந்த பின்னர்,
நீர் முகத்து அரும் பொன் சிந்தும்
  நெடும் புனல் எதிர்கொண்டு, உற்றார்.
1
   
 
1934பொய் செலச் செல்லும் வாயில்
  பொலிவொடு பெருகும் போல,
மை செலச்செல்லும் வாரி
  மருளி வந்து, அளவின் பொங்கி,
மெய் செலச் செல்லும் நன்று ஒத்து,
  எங்கணும் விளைவு உய்த்து ஓடி,
பை செலச் செல்லும் நாகப்
  பரிசு எனச்செல்லும் ஆறே.
2
   
வானவன் கபிரியேல் ஆற்றின்
நிகழ்ச்சியைக்கூறல் இது கையறு
 
1935விரை வளர் மலர் விள் சோலை
  வெயில் அற நிழற்றிக் கவ்வும்
கரை வளர் புனலைக் காட்டிக்,
  கபிரியேல் தொழுது, கூற
“வரை வளர் மாடத்து ஏந்தல்
  வைகும் மா புரம் கண் ஓடி,
திரை வளர் மணியும் பொன்னும்
  சிந்து கையாறு இது“ என்றான்.
3
   
யூதரைப்பகைத்த அரசன்கட்டளை
 
1936“நூல் நெறி வழுவா யூதர்
  நொந்து எசித்து உறைந்த காலை,
கோல் நெறி வளைத்த கோன் அக்
  குலத்தினைப் பகைத்த தன்மை,
சூல் நெறி பிறந்த மாதர்
  துணிக்குமின்!‘ என்று, தம் தாய்
பால் நெறி உயிர் உண்ணா முன்,
  பகை நெறி சிந்துவார் ஆல்.
4
   
மோயிசன்பிறப்பு
 
1937“காவினுள் கொடியின் பூவோ,
  கமல மேல் அன்னப் பார்ப்போ,
பூவினுள் திரண்ட தேனோ,
  பொன் வலம்புரியுள் முத்தோ,
வாவியுள் பதும மொட்டோ,
  வான் உலாம் கோளின் ஒன்றோ,
கூவினுள் தனி நீர்த்து, அன்று, அக்
  குலத்தில் ஓர் குழவி வேய்ந்தான்.
5
   
பேழையுள்வைத்து ஆற்றில்இடல்
 
1938அம் கதிர் மணியின் சாயல்
  அத் திரு மகனை, நோக்கி,
வெம் கதிர் வேலினார், தாம்
  வெட்டவும் விடவும் தேற்றா,
செம் கதிர் திரை மூழ்கு அன்ன,
  செய்த மஞ்சிகத்துள், பெய்தே,
‘இங்கு அதிர் புனற்கண் உய்க!‘என்று,
  இரங்கி, விட்டு ஏகினார் ஆல்.
6
   
மன்னவன்மகள்,பேழையை எடுத்துக்குழந்தையை வளர்த்தல்
 
1939“தாள் எழும் கமலம் நீரில்
  தளம்பியது என்றோ, முத்தம்
பீள் எழும் சங்கம் என்றோ,
  பேழை மேல் அலைந்து போகின்,
தூள் எழும் புரத்தின் கண்ணே,
  தூர் எழும் நாணல் மாட்டி,
வாள் எழும் கணினாள் ஈன்ற
  வண்ண நல் குழவி நின்றான்.
7
   
 
1940“அன்று, ஒளித் திங்கள் நாண
  அம் கதிர் முகத்து நல்லாள்,
குன்று ஒளித்திடும் திண் தோளின்
  கோன் இனிது ஈன்ற கோதை
சென்று, ஒளித் திரையை மாதர்
  திரளினோடு இமிழில் ஆட,
நின்று ஒளித்திருந்த பேழை
  நிமிர்ந்து கண்டு, ‘எடுமின்‘என்றாள்.
8
   
 
1941“எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி,
  இள மதி முகத்தில் தண்ணீர்
விடுத்த பைம் பனியோ, கஞ்சம்
  விள் முகத்து உதிர்த்த முத்தோ,
கடுத்த துன்பு ஆற்றாக்கண்ணீர்
  கான்ற கால், முகத்தைக் கண்டு,
தொடுத்த தன் அணிகள் பெய்து, ‘என்
  தோன்றல்‘ என்று அரசி கொண்டாள்.
9
   
 
1942“பால் நல முலையினாளைப்
  பாலனுக்கு அழைமின்‘ என்னா,
தான் நல மாடத்து எய்தி,
  தையலார் கமழ் நீர் ஆட்டி,
சே நலம் எழப் பொன் ஆழி
  சிலம்பு கிண்கிணிகள் பூட்டி,
மீன் நலம் அணிந்த நாகு
  விது எனத் தோன்றினானே.
10
   
பெற்ற தாயே செவிலித் தாயாகி வளர்த்தல்
 
1943“தாய் என உணராத், தாயை,
  தனயனை வளர்க்கக் கூட்ட,
சேய் என இமிழின் கண்டாள்;
  செறிந்து தன் உளத்தில் தைத்த
நோய் என அறுத்து, ஒன்று என்னா,
  நுனித்த அன்பு இயல்பின், பல் நாள்
தூயின மணியின் சாயல்
  தோன்றலை வளர்த்திட்டாளே.
11
   
மோயிசனைத் திரைக் கையால் ஏந்திய ஆறு கையாறு எனல்
 
1944“வளர்ந்த வெண் மதி ஒத்து அன்னான்
  வளர்ந்து, மோயிசன் என்று ஓத,
தளர்ந்த தன் குலத்தை ஓம்பத்
  தற்பரன் பணிப்ப, அங்கண்
உளர்ந்த பல் முயற்சி யாவும்
  ஒழுங்கின் நீர் உணர்தீர் அன்றே?
கிளர்ந்த நல் அறிவினோர்க்கு
  கிளர்க்க நான் உரைப்பது என்னோ?
12
   
 
1945“ஐ எடுத்து ஒளிர் அத் தோன்றற்கு
  அன்பு எடுத்து, உயிரைக் காக்கக்
கை எடுத்து அளித்தது என்று, இக்
  கங்கையைக் கையாறு என்னும்;
மெய் எடுத்து இசைத்த நாம
  விதி இதே“ என்றான் வானோன்.
மை எடுத்து இரைத்த யாறு
  வலத்தில் இட்டு அவரும் போனார்.
13
   
மரியாளும்சூசையும் திருமகனை ஒரு
மலர்ச்சுனைக்கு அருகிற்கொண்டு செல்லுதல்
 
1946மீன் சொரிந்த முடி வேய்ந்து ஒளிர் தாயும்,
தேன் சொரிந்த கொடி அம் திறலோனும்,
நான் சொரிந்த நவை தீர் மகவு ஏந்திக்,
கான் சொரிந்த சுனை கண்டு, அருகு உற்றார்.
14
   
 
1947மக்கள் தங்கு வடு நீத்தவர் வைகி,
சொக்கு அடங்கு சுதனைத் துதி பாட,
மிக்கு அடங்கு குயில் பாடலின், விள்ளி
இக்கு அடங்கு மலர் இன்பு உறல் கண்டார்.
15
   
 
1948கரை கிடந்த இவர் காட்டு அருள் அன்ன,
நிரை கிடந்த நிழல் நீள் தரு எல்லாம்
விரை கிடந்த மலர் விள்ளிய காலை,
நுரை கிடந்தன கள் நுண் மணல் ஆர்ந்தே.
16
   
 
1949கோளை உண்ட குழல் மென் கொடி ஈன்ற
காளை உண்ட வதனக் கவின் காண,
வாளை உண்ட சுனை வாவி மலர்ந்தே,
தாளை உண்ட மலர் தன் விழி ஆம் ஆல்.
17
   
 
1950சொல் கலத்தில் உயர்வோர் சுவை மாந்த,
பொன் கலத்தில் அமுதே பொழிவார் போல்,
வில் கலத்தில் ஒளிர் பூ , விரி தாது
தன் கலத்தில் நிறை தந்தன தேனே.
18
   
திருமகன்துணிதோய்த்த அச்சுனை,பிணிதீர்க்கும்பெருமை பெற்றது
 
1951நான் கலந்த நவை தீர் அருள் நல்லோர்,
கான் கலந்த கனிகள் கனிவு உண்டு,
வான் கலந்த உடு மான் மலர் கான்ற
தேன் கலந்த தெளி தீம் கயம் உண்டார்.
19
   
 
1952மணி நிறத்த எழில் மைந்தனை மூடும்
அணி நிறத்த நுரை அம் துகில் ஆடை,
பணி நிறத்த ஒளிர் பாணியின் நல்லாள்,
புணி நிறத்த மலர்ப்பூண் சுனை தோய்த்தாள்.
20
   
 
1953தோய்ந்த தன்மையொடும் அச் சுனை நல் நீர்
மேய்ந்த தன்மையொடு வெம் பிணி யாவும்
வாய்ந்த தன்மையொடு மாறவும் நாதன்
ஈய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா.
21
   
 
1954அருளின் வீங்கு வரம் அஃது என ஓர்ந்து,
தெருளின் வீங்கி, நறு தீம் கய வாவி
சுருளின் வீங்கு திரை சூழ் கரை மோதி,
பொருளின் வீங்கும் அடி போற்றுவ போன்றே.
22
   
 
1955அலை ஒருங்கு தமுள் ஆடிய பாலால்,
இலை ஒருங்கு விரி ஏர் அலர் ஆட,
தலை ஒருங்கு மிசை தன் கரம் ஏந்தும்
நிலை ஒருங்கு சுனை நீரிய தோற்றம்.
23
   
சுனை, வரம்பெற்றமை உணர்ந்து பறவைகள்மகிழ்தல்
வண்டின்இசையில் மயில்நடனம்
 
1956பால் நேர் இள நிலவு ஊறிய பனி மா மதி முக முன்
வான் நேர் இள பனி மானிய மது மா தரு வடிய,
தேன் நேர் இள குரலோடு இள அளி பா இசை திருக,
மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே.
24
   
நீர்வாழ் பறவைகள் நீராடி மகிழ்தல்
 
1957கயல் ஒத்தன விழி உற்றன களி மாதர்கள், கரு விண்
புயல் ஒத்தன திரையுள் களி விளையாடின புரை கண்டு,
இயல் ஒத்தன, கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும்,
வியல் உற்றன சிறை விட்டு, அயல் விளையாடின இனிதே.
25
   
பறவைகளின் விளையாட்டுப்போர்
 
1958புள்ளும் பல குருகும் பகம் இனமும், கவின் பொருவா
விள்ளும் பரிசு அன்னமும், பகை விலகும் களி விளை போர்
உள்ளும் படி, குறுகும் படி, உகளும் படி உளவே;
துள்ளும் பரி என வந்து, எதிர் தொடர்கின்றவை துறும் ஆல்.
26
   
 
1959தேன் காவியொடு உள மற்று அலர்
  திளை தேறலை உண வந்து
ஆங்கு ஆயின அளி பற்பல
  அரவத்து ஒலி அதிர,
தூங்கா ஒலி முரசு ஒத்து எழு
  தொனியில் தம்முள் தொடர் போர்
நீங்காதன பறவைக் குலம்
  நிகரும் சமர் நெடிதே.
27
   
 
1960இரியும் பல; குறுகும் பல; எதிரும் பல; இறகை
விரியும் பல; அறையும் பல; மெலியும் பல; விளை போர்
புரியும் பல; முரியும் பல; பொலியும் பல; புடையின்
பிரியும் பல; குமுறும் பல, தொனி உம்பரம் பெறவே.
28
   
 
1961பறை சிந்தின; ஒலி சிந்தின; பகை சிந்தின பறவை;
நறை சிந்தின; மலர் சிந்தின; நனை சிந்தின; நறு தேன்
உறை சிந்தின; இதழ் சிந்தின; உயர் சிந்தின உணும் நீர்;
முறை சிந்தின முனை சிந்தனை முயல் சிந்திட முடியா.
29
   
அன்னங்கள்தாமரை மலரைக் கல்வி,பேடை மேற்சிதறல்
 
1962வந்து ஓடிய ஒரு கோ அன்னம், மது ஓடிய மலரின்
அம் தோடு இனிது அலகோடு அது கவர்வு ஆயின அளவில்,
முந்து ஓடிய பெடை மீமிசை முருகு ஆர் துளி முடுல்,
பந்தோடு இயை மண நீர் களி மடவார் விடு படியே.
30
   
பேடைகள்ஒளித்தமை கண்டு முகைகள்மலர,பறவைகள்சிரித்தல்
 
1963பெடை நாணினது என, நாள் நறை பிளிர் தாமரை நெடுங் காக்
கடை, நாணின அன்னம், மேவுபு கரவு ஆயின முறை கண்டு,
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர,
நடை ஆடின பறவைக் குலம் நனி ஆர்த்தன நகவே.
31
   
பறவைகள், சுனையில்எறிந்த மலர்களின்தோற்றம்
 
1964பந்து ஒத்தன பனி முற்று அலர் பறவைக் குலம் எறிய,
சந்து ஒத்தன மதுரத் துளி சரியப், புயல் தரும் நீர்ச்
சிந்து ஒத்தன சிதறிப், பினர் தெளி அத் தடம் அதன் ஊடு,
இந்து ஒத்தன, உடு ஒத்தன, இணர் மற்று உகும் இயலே.
32
   
 
1965அளி ஆர் அலர் அரவே படம் அனை ஆட்டின பலவும்,
களியால் விரி சிறை ஊடு அது கரவு ஆற்றின பலவும்,
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஒட்டின பலவும்,
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை ஆல்.
33
   
நீர்ப்பறவை புகழ்ந்தாற்போல
மரக்கிளையிலிருந்த பறவைகள்பாடுதல்
 
1966மேல் நின்று ஒரு நடம் நோக்கினர்
  விரி வண் புகழ் ஒலி போல்,
வான் நின்று, அகல் கரை சூழ் நிழல்
  மரம் உந்திய பறவை,
தேன் நின்று அலர் சுனை ஆடின
  திறம் நோக்கிய களியால்,
பால் நின்று இனிது இசை
  பாடு உளி, புகழ் பாடின பரிசே.
34
   
பறவைகளின்அறிவைப்புகழ்தல்
 
1967பற்றலால் செயிர் பற்று இருள் மாக்களே,
கற்ற நூல் பயன் இன்றியும், காசினி
உற்ற நாதனைத் தாம் உணராமையின்,
இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவே.
35
   
மூவரூம்பறவைகளுக்கு ஆசிமொழிந்து ஏகுதல்
 
1968அறிவு இலா உயிர் தாம் அறிந்தால் என,
செறி விழா அணியின் சிறப்பு ஆடின.
நெறி விடாக் கனி நோக்கிய நேர் இலார்
முறிவு இல் ஆசி மொழிந்து, எழுந்து ஏகினார்.
36
   
பறவைகள்ஆர்த்தன
 
1969ஈய்ந்த நல் வரத்து ஏந்திய வாவி நின்று,
ஆய்ந்த மாண்பினர், போகையில், அல்லல் உள்
பாய்ந்த தன்மையில், அப் பறவைக் குலம்,
வேய்ந்த வான் உற ஆர்த்தன விம்மியே.
37