குழவிகள் வதைப் படலம்
 
எரோதனின் அச்சம்
 
2202“பிறந்த முன் இடம் பெயர்ந்து வந்து,
  எருசலேம் தன்னைத்
துறந்த பின் அவன் தொடர்ந்த பல் இடம்
  தொடர்ந்து, அவனைப்
பறந்தது என்னினும் பற்றி மொய்த்து
  அடுக என்று ஏவ,
திறம் தகும் சிலர் தேடலின்
  காண்கிலாது அயர்ந்தான்.
8
   
 
2203“நான் அளிக்கும் இந் நாட்டில் மற்றொருவன்
  வந்து, அவற்கே
மான் அளிக்கும் இக் கோன்மை ஈய்ந்து இறைஞ்சவோ?
  வளம் ஊழ்த்து
ஊன் அளிக்கும் இவ் வுடல் விட நாள் இதோ?“
  என, வான்
கோன் அளிக்கும் இக் கொள்கையில் தான்
  மயல் கொண்டான்.
9
   
 
2204விண் புலம் தகை வேய்ந்தது; தான் வினை வேய்ந்தான்
மண் புலம் குறை மறந்தது; தான் உயிர் மறந்தான்.
உள் புலம் தழல் உண்டது; தான் உணவு உண்ணான்.
கண் புலம் துயில் கடிந்தது; தான் கொலு கடிந்தான்.
10
   
எரோதன் மனிதனைய் பேய் தூண்டுதல்
 
2205மாலை ஏந்து இருள் மொய்த்து எங்கும்
  மல்கிய காலை கள்வர்
வேலை ஏந்துபு வெங் கோறல்
  விளைப்பது போல, கோடுங்
கோலை ஏந்து எரோதன் நெஞ்சிற்
  கொடிது உணர்ந்து இருண்டு மாழ்ந்த
காலை, ஏந்தலைப் பேய் சேர்ந்து,
  கடிது உணர்வு அழற்றிற்று அன்றோ.
11
   
 
2206“உருட்டிய செங்கோல் ஈந்தே
  உயிர் உய்வர் எவரும் உண்டோ?
மருட்டிய பகை முற்றா முன் வளர்
  திறத்து அடியில் ஈர்ந்து,
தெருட்டிய நீரார் கோன்மை
  திறம் பெறத் தாயும் மேவார்;
வெருட்டிய முறையில் வந்த
  வேந்தனைக் கோறல் நன்றே.
12
   
 
2207“விடுதியேல், முடியின் வாழ்க்கை
  விடுத்தனை. அவன் காணாதேல்,
சடுதியே இடங்கள் தோறும்
  ததும்பிய குழவி எல்லாம்
அடுதியே ஒருங்கு தானும்
  ஆவி யற்று இறப்பன். இல்லால்,
கெடுதியே“ எனப் பேய், கோவும்
  கேடு உற, “நன்று ஈது“என்றான்.
13
   
 
2208இருள் சொரிந்து அடர்ந்த கங்கு
  லிடை முகில் இரு கண் கூசத்
தெருள் சொரிந்து இடித்து மின்னும்
  திறத்து உளத்து ஆளும் நாதன்
அருள் சொரிந்து இடும் மெஞ்ஞானத்து
  அவிர் கதிர் மின்னி, அன்னான்
மருள் சொரிந்து இருண்ட நெஞ்சில்
  வடு முகங் கூசிக் கண்டான்.
14
   
 
2209தேம்பு உளம் கூசத் தோன்றும்
  திரு விளக்கு அவித்து, மீண்டும்
சாம்பு உளம் கருதும் தீமை
  தன்னையே சாரா தோன்றக்
கூம்பு உளம் கடுத்த வஞ்சம்
  குணம் எனச் சொல்வார்[த்] தேடி
ஓம்பு உளம் தெளிந்த நூலோர்
  ஒருங்கு உடன் அழைத்தல் செய்தான்.
15
   
 
2210சொரி சுமந்திடும் கார் ஒப்பத்
  துளிக் கையின் சலுமோன் நின்ற
எரி சுமந்து இலங்கி மின்னும்
  இனமணி நிரைத்து இட்டு ஈராறு
அரி சுமந்து எழுந்த பைம்பொன்
  ஆசனத்து இருந்து தோன்றி
வரி சுமந்து அடும் வெம்
  வேங்கை மறத்தொடு பொலிய நின்றான்.
16
   
 
2211மந்திரிமாரும், வாய்ந்த
  வளம் தரும் தவரும், நன்னூல்
தந்திரிமாரும், தானைத்
  தலைவரும் ஒருங்கு கூடி
இந்திரி அலை பொங்கு ஒத்தது
  இடையிடை மொய்ப்ப நின்றான்,
சிந்திரி மலை மேல் ஆடும்
  செழுங் கொடி ஒத்த நெஞ்சான்.
17
   
 
2212நாறிய மணியின் வாய்ந்த நன் முடி பெயர்தற்கு அஞ்சி
ஊறிய கொடிய வஞ்சத்து உணர்வினை ஒளித்து, தானே
கூறிய உரைகள் கோட்டிக் குணித்தவை முடித்தற்கு ஒல்கா
தேறிய உதவி தேடும் திறத்தென விளம்பல் செய்தான்:
18
   
நாபன் நயப்புரை
 
2213“பற்றார் வெம் பகை பட்டு அற நான் ஆள்
கற்றார் கல்வி கடந்து எழு நாட்டில்
மற்று ஆரோ ஒரு மன்னன் உதித்து ஈங்கு
உற்றான் என்றது ஒருங்கு உலகு எல்லாம்.
19
   
 
2214“அன்னான் ஈங்கு உளன் என்று அறைவாரை
முன்னால் நானும் நகைத்து முனிந்தேன்;
பின்நாள் ஆயின பெற்றியை எண்ணி,
என்னால் ஆவது இயம்புமின்“ என்றான்.
20
   
 
2215என்றான், ஆடி அடுத்தவை என்னத்
தன் தாழா முகம் உள்ளவை தந்து
நின்றான். கோட்டம் உணர்ந்து இடை நின்றார்
குன்றா நேர் நெறி கோடி உடைந்தார்.
21
   
 
2216‘கோல் கொண்டார் அவர் கொள்கையை நோக்கி
மேல் கொண்டாரும் விளம்புவர்‘ என்றார்
நூல் கொண்டார்; என நூல் அற யாரும்
மால் கொண்டார் அறம் மாற்று உரை கொண்டார்.
22
   
 
2217“வள் வாய் மா முரசு ஆர்ப்பு ஒலி மாறா
கள் வாய் ஆளும் மன்னவ, காதல்
கொள் வாய் வாய்மொழி கொள்க“ என மீண்டே
எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான்.
23
   
 
2218துஞ்சித் திண் பகை முன் துடையாதார்
விஞ்சித் திண் பகை முற்றிய வேலை
எஞ்சித் திண் திறல் எள்ளுறல் காண்பார்,
நெஞ்சில் திண் திறல் நேர் மதி வல்லோய்.
24
   
 
2219“அன்று உற்று ஏகின அண்ணலர் ஓடும்
சென்று உற்றே பகை தீர்கிலம் நாமே;
இன்று உற்று ஈர்கிலமேல், பழி வெள்ளம்
பின்று உற்று ஆழ்குதும் பேதையர் போன்றே.
25
   
 
2220“நடு ஒக்கும் தகை நாட்டு அரசர்க்கு ஓர்
வடு ஒக்கும் துயர் வந்தன வேலை
கடு ஒக்கும் பிணி போல் அது காப்பார்
உடு ஒக்கும் கலை ஒள் ஒளி நீரார்.
26
   
 
2221“ஆக்கத்து ஆருயிர் யாவும் அளித்த
நோக்கத்து ஓர் உயிர் கொன்றும் இகல் நூறல்
ஊக்கத்து அஞ்சுவையோ? உலகு எல்லாம்
காக்கப் பெய் நிறை கார் இடியாதோ?
27
   
 
2222“பாயா வேங்கையை என்புளி, பைம் பூ
வீயாப் புண்டரிகம் என எண்ணல்
ஆயாப் பேதைமை ஆம்; பகை கோறல்
ஓயாக் கோல் வழுவோ? கடன்!“ என்றான்.
28
   
மன்னன் நாபனை மகிழ்ந்து நோக்க பிற அமைச்சர் இசைதல்
 
2223விரும்பித் தேடிய விலைப் பொருள் கண்டென உள்ளம்
அரும்பித் தேறிய அரசன் ஆங்கு அவன்மிசை மலர்க் கண்
திரும்பித் தேறலின் காட்டிய திளை நயங் கண்டு,
சுரும்பின் தேக்கிய மற்றவர் ஒத்து உரை சொன்னார்.
29
   
எரோதன் வினா
 
2224“நன்று என்று ஆயினும்,
  நடுக்கு உறப் பெத்தில நகர்க்கண்
அன்று அங்கு எய்திய
  அன்னவன் இல்லையால்; அகன்றே
இன்று எங்கு உள்ளன்
  என்றாயினும் இயம்புவர் இல்லை;
பின்று, இன்று ஆம் தொழில்
  பேசுமின்“ என்றனன் பெருமான்.
30
   
மதியான் மறுமொழியும் மற்றொரு வினாவுக்கு விடையும்
 
2225நகைத்து மாதியன், “நர பதி வாழ்க“என
  நவிலும்;
“துகைத்து மொய்த்த வெந்துயர் அறச் சொன்னதற்கு
  அமைகின்,
பகைத்து வந்தவன் பழி அறுத்து, உன் முடி
  பெயரா,
முகைத்து நாடெலாம் முரண் இல வாழ்வது
  காண்பாய்.
31
   
 
2226“வளை கள் ஆர் பொழில் வனை அணிக் கரமித மலைமேல்
கிளைகள் ஆர் நிழல் கெழும் பலாக் கனி எலாம் தீம் தேன்
சுளைகள் ஆயிரம் தரவும், ஒன்று உயிர் அடும் விடம் ஆம்;
திளைகள் ஆர்கனி சேர்கில் ஈங்குஎவன் செய்வாய்?“ என்றான்.
32
   
 
2227“கொல்லும் அச் சுளை இன்னது
  என்று அறிகிலேல், குவி தேன்
புல்லும் அச் சுளை ஒருங்கு
  ஒழிப்பேன்“ எனப் பொருநன்,
“சொல்லும் நீர்மையின், துறும் பகை
  தோன்றிலது என்னில்,
ஒல்லும் நீர்மையில் ஒருங்கு
  அடல் குழவிகள்“் என்றான்.
33
   
அரசன் மௌனம்
 
2228கேட்ட வாசகம் கெழும் குணம் எனப் பலர் வாழ்த்த,
கோட்டம் ஆம் எனக் கூறிய சிலர் உளத்து அஞ்ச,
நாட்டம் வாய் உறு நயம் ஒளித்து அரசு உரை நவிலான்,
மீட்டு அம் மாதியன் வினை விளை மருள் உரை விரித்தான்:
34
   
 
2229“திருந்த ஆய்ந்து அறம் திறம்பு
  இலாச் செய்யினும், எவர்க்கும்
பொருந்த ஆற்றுவர் பூவுலகு
  உண்டுகொல்? மன்ன,
வருந்த ஆம்பலே, மனம்
  மகிழ் முளரி வாய் மலரும்
இருந்த மா இருள் ஈர்த்த ஓர்
  இரவியின் முகத்தே.
35
   
 
2230“பிரிந்தது ஓர் நிலம் பெறக் கொடும்
  போர் முகத்து இறப்பத்
தெரிந்த வீரரைச் செலுத்தலே
  கொடிது அலது என்பார்;
வரிந்த கோலொடு நாடு கொள்
  வழு அறச் சில ஈங்கு
இரிந்த சீறு உயிர் இறத்தலே
  கொடிது என்பார் கொல்லோ?
36
   
 
2231“பகைத்த வெம் பசி பரிந்து அற மலை ஒழிந்து ஒழுகி
முகைத்த பல் மலர் முருக்கிய நீத்தமும் கொடிதோ?
துகைத்த தீது அறச் சொன்னவை விடுதியேல், அய்யா,
தகைத்த வாழ்வொடு தாங்கு அரசு இகழ்ந்தனை!“ என்றான்.
37
   
ஏலியன் பேசத் தொடுங்குதல்
 
2232கால் முகத்து உயர் கல் மலை அனைய வெங் கொடிய
கோன் முகத்திலும் கொலும் தூயர் முகத்திலும் கோடா
நூல் முகத்து உரை ஏலியன், நுவன்றவை கேட்டு,
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து, இயம்புதல் உற்றான்:
38
   
ஏலியன் எதிர்மொழி
 
2233“தன் உயிராக மற்று உயிர்கள் தாங்கிட
மின் உயிர் மணி முடி வேய்ந்த பாத்திபன்
கொன் உயிர் வழு என அய்யங் கொண்டு பல்
மன் உயிர் ஒழித்தலோ வடு இலாது?“ என்றான்.
39
   
சிசலன் கூற்று
 
2234“போழ் வினையாயினும் முடி புரந்திடத்
தாழ் வினை உண்டு எனச் சாற்றுவார் உண்டோ?
வாழ்வினைப் பிறர்க்கு அளித்து அரசன் வாழ்வு உறக்
கீழ் வினை இலை“ எனக் கிசலன் கூறினான்.
40
   
ஏலியன் அறிவுரை
 
2235“கண் இலான் ஓவியம் வரைந்த காதை போல்,
எண் இலா இளைஞனாய் இசைத்தி நீ என
ஒள் நிலாவு அரசு அடி இறைஞ்சி ஓதியின்
தெள் நிலா ஏலியன் மீண்டு செப்பினான்:
41
   
 
2236“மண் அளவு ஒளிப் புகழ் மருவும் மன்னவ,
கண் அளவு அறிவு உளோர் கதைத்த மாசு உரை
என் அளவு இழிவு உறும் என்று கேட்கிலர்,
விண் அளவு ஒளி மறை விளம்பக் கேட்டியால்.
42
   
 
2237“வையகத்து ஒருவனாய் வாய்ந்த முத் தொழில்
செய் அகத்து இணை இலான் சிறந்த அன்பொடு
பொய் அகத்து உறும் செயிர் போக்க மைந்தனாய்
மெய் அகத்து உறும் திறன் மறையின் மெய்ம்மையே.
43
   
 
2238“ஊன் முகத்து உதித்த போது உலகின் தீது இருள்
நால் முகத்து ஒழிப்பன் என்று, உதிக்கும் நாள் தனில்
வான் முகத்து உடு நவம் வழங்கும் என்று, மெய்ந்
நூல் முகத்து எழு மறை நுவல்வது ஆய்ந்துளாய்.
44
   
 
2239“அக் கணம் காண்டலும் அரசர் மூவர் வந்து,
‘இக் கணம் காட்டிய யூதர் மன்னவன்
எக் கண் அங்கு அவன் பிறந்து இயைந்துளான்?‘ என,
மிக்கு அணங்கு அலங்கலோய், வினவக் கேட்டியால்.
45
   
 
2240“மீட்சியும், கோவலர் வியப்பக் கண்டது ஓர்
காட்சியும், கடும் வினை கடிந்த சீமையோன்
சாட்சியும் புகழ்ச்சியும் மற்றச் சால்பு உறு
மாட்சியும் பெருமையும் வழங்கக் கேட்டியால்.
46
   
 
2241“மன் அரசு இழந்தென வானில் நின்று வான்
தன் அரசு எமக்கு எலாம் தர வந்தான் பகைத்து
உன் அரசு எடுப்ப ஈங்கு உணர்ந்து உற்றான் எனக்
கொன் அரசு இழிவு உறக் குழைந்து உள் எண்ணவோ?
47
   
 
2242“எண்ணினும், அவன் பெயர் இசைத்த நீர்மையான்
மண்ணினும் வானினும் மன்னர் ஆட்சி ஆய்க்
கண்ணினும் இனிது உயிர் கடிதல் பண்ணவோ?
பண்ணினும், அரசியல் நிலைக்கும் பான்மையோ?
48
   
 
2243“ஆயினும், அவனை நீ காண்டு இலாமையால்,
தாயினும் அன்பு அமை அரசன் தன்மையாய்
தீயினும் கொடும் வினை தெரிந்து, சேய் எலாம்
வீயினும் நலது என விரும்பிச் செய்யவோ?
49
   
 
2244“வீய் வினை, அஞ்சினார் விளிவு இல் ஆவரோ?
தீய் வினை அஞ்சினார் செத்தும் செத்திலா,
தூய் வினை எஞ்சிலாத் துதியின் வாழ்வரே,
காய் வினை எஞ்சிலாக் கருத்தினோய்!“ என்றான்.
50
   
காலியன் சீற்றம்
 
2245ஏலியன் என்பவன் இவை எலாம் மறை
நூல் இயன்று உளத்து அஞ்சா நுவல்வது ஆய பின்,
காலியன் என்பவன் கதம் கொடு ஓதினான்,
மால் இயன்று இறையவன் வதனம் நோக்கியே.
51
   
 
2246“வீரியர் தொழில் இதோ? வெருவிப் புன்மை சேர்
நாரியர் தொழில் இதோ? நவை இலா மறை
ஆரியர் தொழில் என அரசியல் படப்
பூரியர் தொழிலினைப் புகன்றுளாய் அரோ.
52
   
 
2247“இன் வளர் தயை மலி இறைவன் ஏவலால்,
மின் வளர் படை முகத்து இரத்த வெள்ளமாய்
முன் வளர் தகமையோர் பகை முருக்கியே
பொன் வளர் முடி நலம் புனைவதாயினார்.
53
   
 
2248“சேய் வினை புரிவரைச் சேர்த்தி ஓம்ப ஓர்
தாய் வினை புரிதலே தருமம் ஆம்; பகை
நோய் வினை புரிவரை நூறலும் கொடுந்
தீய் வினை புரிதலோ?“ என்று செப்பினான்.
54
   
பிறர் இசைவுரை
 
2249பொன் தொழில் வனை மரப் பாவை பொற்பு என
மல் தொழில் ஒளியொடு வஞ்சம் கோடிய
புன் தொழில் அனைவரும் புகன்று, கோல் வளை
முன் தொழில் அத்தனம் முறியச் சொல்லினார்.
55
   
ஏலியன் மீண்டும் விளக்கம் கூறுதல்
 
2250வழுக்கு உடை இவை எலாம் வழங்கக் கேட்டலும்,
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என
ஒழுக்கு உடை ஏலியன் உளத்து நொந்துளான்
விழுக்கு உடை அரசியல் விரும்பிக் கூறினான்:
56
   
ஏலியன் மறையுரை
 
2251“தப்பு உற உரைத்த மாற்றம்
  தந்தன கடு நோய் தீர்க்கும்
கைப்பு உற உரைத்த மெய்மை
  கனிவு எனக் கேட்கிற் பார்க்கே:
துப்பு உற வியங்கும் மௌலி
  சூடினோய், அன்பைச் சூடிச்
செப்பு உற நினைத்த வாய்மை,
  சினந்தினும் உரைப்பேன் நானே.
57
   
 
2252நூல் இயல் நுணங்கு கேள்வி
  நோக்கினார் முகத்தை நோக்கார்;
கோல் இயல் கோடக் கோடிக்
  கூறுவர் பகையின் தீயார்:
கால் இயல் நோக்கி ஆடும்
  கலைக் கொடி அன்னார்க் கேட்பின்,
வேல் இயல் பகை இலானும்
  வேரொடு கெடும் உன் வாழ்க்கை.
58
   
 
2253“கற்று உறு மாட்சி பூண்டு
  கசடு அறு மறையின் நூலால்
உற்று உறு பொருள்கள் தேர்ந்தே
  உணர்த்துவது ஒன்று கேண்மோ:
சொற்று உறும் எனது சூழ்ச்சி
  துணிவு இழிவாகத் தோன்றின்;
முற்று உறும் மொழியைக் கேட்டு
  முனிதியே, முருகு வெலோய்!
59
   
 
2254“தேறிய தவத்தின் நீண்டு சிறந்த மோயிசனை நிந்தை
கூறிய அபீரோன் தாத்தான் கோரன் என்றவரை ஈண்டே
கீறிய புவி விழுங்கிக் கேடு உற, அவரைச் சார்ந்தோர்
ஊறிய அழலின் வெள்ளத்து ஒருங்கு ஐயைம்பதவர் வெந்தார்.
60
   
 
2255“பின், இயற் பொருவா அன்னான்
  பெருந்தகை இகழ்ந்து பேசும்
அன்னியத்து அவண் ஓர் ஈரேழ்
  ஆயிரத்து ஏழு நூறும்
வன்னியத் தடத்தில் உம்பி
  வயச் சினத்து இறைவன் நீதி
உன் இயற்கு உள்ளங் கூச
  ஒருங்கு வெந்து அடலை ஆனார்.
61
   
 
2256“தொகை இலாத் தகவின்
  காட்சிச் சுடர் எலிசேய் என்பானை,
‘சிகை இலாத் தலைய!‘என்று
  சிறுவர் எண்ணைந்து இரண்டும்
தகை இலாச் சொன்ன பாலால்
  சடத்து இரு கரடி பாய்ந்து,
நகையில் ஆற்றிய ஓர் சொல்லால்
  நடுங்கி ஆர்த்து ஒருங்கு மாய்ந்தார்.
62
   
 
2257“ஈறு அடி இல்லான் குன்றத்து எழுதிய மறைக் கற் பேழை
தேறு அடி அடிகள் ஏந்திச் செல்ல, மற்று எவரும் எண் ஐந்
நூறு அடி அகல நாதன் நுவன்று தான் செய்த ஏவல்,
ஆறு அடி ஆர்க்கும் தாரோய், ஆரணத்து அறிதி அன்றோ?
63
   
 
2258“செம்பு அதின் பிறப்பு ஐந்தோடும்
  சிறப்பு அணி வனை அப் பேழை
தம் பதி வரக் கை கூப்பாத்
  தருக்கொடு நோக்க, கால் முன்
கொம்பு அதின் இலைகள் போலக்
  குழைந்த பெற்சமித்தார் அங்கண்
ஐம்பதின் ஆயிரத்து ஏழு அமைந்த
  பத்து ஒருங்கு வீழ்ந்தார்.
64
   
 
2259“அள்ளிய அபையர் நாப்பண் அரசனும் இறைஞ்சிச் செல்ல,
தெள்ளிய மறையின் பேழை தேர்மிசை வரலின், சாய்ந்து,
விள்ளிய அலங்கல் ஓசன், விழும் எனக் கையால் தீண்ட
உள்ளிய உலகம் அஞ்ச உருமு பட்டு அன்ன மாண்டான்.
65
   
 
2260“ஆதி நீடு உடன்ற காலத்து அம்புவி கூசச் செய்த
நீதி நீ அறிதி அன்றே? நினக்கு யான் உரைப்பது என்னோ?
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவை எலாம் புரிந்த நாதன்
தீதின் நீ உயிர் ஈறு ஆகத் தேடுகின்றவனே அன்றோ?
66
   
 
2261அறத்து உறும் தகையும் செங்கோல்
  ஆண்மையும் ஒளியும் நீங்க
மறத்து உறும் தீங்கு தன்பால்
  வந்தபின் ஆவது உண்டோ?
புறத்து உறும் துயர் கண்டு உய்வார்
  பொலிந்த நூல் புலமை நீரார்;
நிறத்து உறும் தொடையில் மார்ப,
  நிகர்ப்பு அரும் நிலை இது அன்றோ?
67
   
 
2262“கண் புலன் உணர்த்தும் காட்சிக்
  கசடர் சொல் உதவி கேளேல்
மண் புலன் அளிப்ப நாதன்
  மைந்தனாய் உதித்தான் என்ன
உள் புலன் தெளிந்து, அன்னானை
  ஒருங்கு நீ தொழுதி; பின்னர்
விண் புல வேந்தன் ஆக
  வினை அற வாழ்வாய் என்றான்.
68
   
சீற்றுமும் கட்டளையும்
 
2263நால் கடல் கவியின் பாடல்
  நயம் பெறாக் கேட்ட கோகோ?
பாற் கடல் திரிந்தும் நச்சுப்
  பயன் பெறும் பாந்தள் தானோ?
நூல் கடல் கேள்வி நல்லோன்
  நுவன்றவை கேட்டுக் கால் முன்
மேல் கடல் சினத்து வேந்தன்
  மிக்கு உளம் வெகுண்டு சொன்னான்.
69
   
 
2264“மெய் உண்ட திறத்த வீரர்
  விளிவதற்கு அஞ்சுவாரோ?
கை உண்ட பசும் பொற் செஞ்கோல்
  கடிதலின் இறத்தல் நன்றே,
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான்
  நிறை உயிர் உண்டு, நானும்
மொய் உண்ட மடிவு உற்றாலும்,
  முடியுடன் இனிது மாள்வேன்!
70
   
 
2265என்றனன் இறைவன்; மீட்டும்,
  இழி மத யானைச் சீற்றம்
வென்றனன் ஒருவன், தானை
  மிடல் தலை மலக்கன் என்பான்
நின்றனன்; அவனை நோக்கி,
  நீதி நீத்து உரைத்த காதை
சென்றன எவனும் கூசத்
  திசை எலாம் உருமிற் சொன்னான்.
71
   
 
2266“பொருந்தலர் தடிந்து எஞ்ஞான்றும்
  புள் இனம் இனிது மாந்த
விருந்து அமர் அசனி வேலோய்,
  விரிந்த என் நாட்டில் எங்கும்
இருந்து அமர் சிறுவர் யாரும்,
  எவனையும் நீங்காது, ஒல்லற்கு
அருந் தமர் பிறர் என்று எண்ணாது,
  அடுதியே சடுதி!“ என்றான்.
72
   
எரோதன் அரண்மணைக்குப் போதல்
 
2267குன்று இணை இயையின் குன்றக்
  குவவிய தோளினானும்
இன்று இணை அடியைச் சூடி,
  விரும்பிய நிலையின் ஊங்கும்
உன்திணை எங்கும் வேரோடு
  உன் பகை ஒருங்கு தீர்ப்பேன்“
என்று, இணை அறக் காய்ந்து ஏக,
  எழுந்து இறை கோயில் புக்கான்.
73
   
சேவகர் செய்த கொடுமைகள்
 
2268புலக் கதம் பொதிர் அரி இனம் கொடும்
  புலி இனம் கொடிது ஒலி எழக்
கலக்கம் ஒன்றிய வெறிகள் தம் பறழ்
  கடுகி வந்து உணு கதம் எனா,
மலக்கன் என்றவனொடு முனிந்து அதிர்
  மறவர் வெங் குலம் மருவி, ஆங்கு
இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட
  இறைவன் என்றவை அயர்குவார்.
74
   
 
2269முலை முகக் கதிர் தழுவி மொய்த்தன
  முகை முகப் பல சிறுவரே
உலை முகக் கனல் எரி கதத்தனர்
  உவணிகள் கொடு ஒழிதரும்
கொலை முகத்தொடு குருதியைத் தொடர்
  குழவி துய்த்து உணும் அமுது உக,
அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும்
  அவிரும்துப்பு என மருளுமே.
75
   
 
2270கரமும் அற்றனர்; தழுவுகின்ற மொய்
  கதிரும் அற்றனர்; கசடு இலா
உரமும் அற்றனர்; நிரை துமிந்து உடல்
  உதரம் அற்றனர்; உயிர் படச்
சிரமும் அற்றனர்; சிதற வம்பு இதழ்
  முளரி அற்றெனச் சிறியதோர்
புரமும் அற்றனர், கடிகையும் பல
  புடையில் அற்று உக எவணுமே.
76
   
 
2271அடா! விடாதன கொடுமையார், “தருக
  அரிய சேயனை!“ என, அருள்
விடா விடாது தழுவினாள். அவன்
  வெகுள மார்பொடு மகவினைக்
கடாவினான்; உருவு ஒரு வை வாள் வழி
  கடிதில் ஈர் உயிர் பட, மதுப்
படா விளா முகை எழிலொடு ஓர் கொடி
  படுவ போல் அவர் விழுவரே!
77
   
 
2272இப்புறத்து இவள், “விடுதி!“ என்று அது
  இழுத்து இழுத்தனள். எரி கதத்து
அப்புறத்து அவன், “விடுதி“என்று அது
  இழுத்து அறுத்தனன்; அவள் முகம்
துப்பு உறத் தனி மகவு துண்டு
  துமித்து உடற் குறை எறிகுவான்
செப்பு உறத் தகு முறை அகன்ற
  சினத்து அழற்றிய நினைவினான்.
78
   
 
2273நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு
  என்று நாடினும், நாகு கொண்டு
அஞ்சினார் தொழில் கண்டிலாமையில்,
  அன்பினால் உயிர் பேணிய
நெஞ்சினாள் தொழில் கண்டிலா மகன்
  நின்று நீடு அழவே, பகை
விஞ்சினார் தொழில் கொண்டு, வாள் வழி
  வெம் புண் நீர் உக வீவன் ஆல்.
79
   
 
2274இடிக்குவார் சிலர்; இகழ்வினோடு எதிர்
  உடற்றுவார் சிலர்; இணை அடி
பிடிக்குவார் சிலர், தரையினோடு உடல்
  புடைக்குவார் சிலர்; பிளிர நெய்
அடிக்குவார் சிலர்; அணை கையோடு உடல்
  துமிக்குவார் சிலர்; அணு எனத்
தடிக்குவார் சிலர்; தறிக்குவார் சிலர்,
  தணிக்குவார் உயிர் எவருமே.
80
   
 
2275உருவி ஏந்திய உவணி மின் விழி
  உருவ, வெய்து உறீஇ உளை உளம்
வெருவி மாழ்கிட இடி முழங்கு ஒலி
  மெலிய மேவலர் உரறவே,
கருவி மாசு அனை குழலின் அன்னையர்
  கலுழு கண் மழை கடுகலோடு,
அருவியாகிய குருதி நெய் மகர்
  அணை இலாது உகம் விடுவர் ஆல்.
81
   
தாய்மார் துயர்
 
2276முலை அணிச் சுதர் அகலவே, அழும்
  முலை எனச் சொரி அழுது உக,
தலை அணிச் சுதர் அகலவே, கமழ்
  தலை இருள் கவின் அழி விட,
நிலை அணிச் சுதர் அகலவே, “இனி
  நிலை இலேம்!“ என விழ விழ,
விலை அணிச் சுதர் அகலவே வினை
  விளைவு இல் தாயவர் மெலிவரே.
82
   
 
2277“என் கணே! உயிர் அமுதமே! எனது
  இதயமே! உயிர் இனிமையே!
நின்கணே உயிர் மடியவே, நினை
  நினையவே, அகல் நிலையுழி
தன்கணே உயிரொடும் இரேன் இனி!“
  எனலொடே, மகர் தணர்வரே,
புன்கணே உயிர் பருகவே, ஒரு
  புனல் அறா விழி பொழியுமே.
83
   
 
2278தாயர் ஓதையும், மடிதரும் பல
  தனயர் ஓதையும், உதிரமே
பாயல் ஓதையும், வதை செயும் பல
  படைகள் ஓதையும், மறம் மலி
தீயர் ஓதையும், இனைவரும் பல
  திசையில் ஓதையும், வெருவு உறும்
த்தூயர் ஓதையும், இடியொடும் கடல்
  துதையும் ஓதையும் இணை இலா.
84
   
கவிக் கூற்று
 
2279வெவ் வினை விதைத்த காலை
  வினை விளைவாகும் தன்மை,
மை வினை உணர்ந்த தீய
  மன்னன், இத் திறத்திற் செய்த
அவ் வினை நினைத்து, நிந்தை
  அனைவரும் உரைப்பது அல்லால்,
செவ் வினை உளத்து வந்த
  திரு மகன், விளிந்தான் கொல்லோ?
85
   
திருமகன்,மரித்த மாசிலாக் குழந்தைகளைக்காட்சியில் காட்டல்
 
2280தேன் உகும் எசித்து நாட்டில்
  சேர்ந்து உறை நாதன் அங்கண்
மீன் உகும் முடியின் தாயும்
  வெண் மலர் வளனும் காண,
ஊன் உகும் கொலையின் தன்மை
  உளம் பனித்து எஞ்சக் காட்டி,
“வான் உகும் நிறையை நீத்தார்
  வழுக்கு அது காண்மின்! என்றான்.
86
   
சூசையும் மரியும் இரங்குதல்
 
2281போர் முகத்து ஒன்னார் மார்பில்
  புதைத்த வேல், உயிர் சால்பு உண்ணும்
சீர் முகத்து அவன் தன் நாட்டில்
  சிந்திய குருதி ஓட,
ஏர் முகத்து ஒரு மாசு இல்லா
  இளைஞரைக் கொல்லும் தன்மை,
பார் முகத்து, இணையாத் தீமை
  பார்த்து, உளத்து இரங்கி நொந்தார்.
87
   
 
2282“கடல் உடைத் தரணி யாவும்
  களித்து இனிது எழ, ஈங்கு உற்ற
உடல் உடைக் கடவுள் தன்னை
  ஒழிக்குப, பகைத்த கோமான்,
அடல் உடைத் தன் நாடு எஞ்சல்
  அடை பெரும் பயனோ! நாதன்
மிடல் உடைத் திறத்தில் என் ஆம்
  மேவலர் சூழ்ச்சி“என்றார்.
88
   
 
2283கொழு மலர்ப் பள்ளிப் பார்ப்பு
  கொடிய புள் பறிப்ப, அன்னம்
அழும் மலர்த் தடம் ஒத்து, அந் நாட்டு
  அன்னைமார் அழு நோய்க்கு ஏங்கி,
செழு மலர்க் கொடிகள் ஈன்ற
  தேன் முகை முகிழா முன்னர்
எழு மலர்ப் பகைக் கால்முன் பட்
  டென மகர்க்கு இரங்கி நொந்தார்.
89
   
 
2284கண் பொழி கலுழி போற்றிக்
  களிப்பு உகும் காட்சி உற்று,
புண் பொழி உதிரத்து ஆவி
  போக்கிய மகவர் யாரும்
விண் பொழி ஒளியின் வாழ்ந்து
  வினை அறும் கதியிற் கண்டு,
பண் பொழி உரையின் நாதற்
  பணிந்து இவர் வாழ்த்திச் சொன்னார்.
90
   
திரு மகனை வாழ்த்துதல்
 
2285“ஆலமே அமுது ஆக்கிய பான்மையால்
சீலம் மேவிலன் செய் பகை தம் உயிர்
கால மேனி இறந்தனர் காந்தி செய்
கோலம் மேவு உருக் கொண்டு எழ நல்கினாய்.
91
   
 
2286“தேர் எழுங் கதிரோன் திரி வான் தெருக்
கார் எழுந்து இருட் காலம் ஓர் காலமோ?
பேர் எழும் தயை பெற்று உனைச் சேர்ந்தனர்
சூர் எழும் கயம் துய்த்திலர் வாழ்வரே.
92
   
 
2287“தணி வரும் தடம் தாமரை பூத்தென
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ,
பிணி வருந்து உயிர் பேணிய பெற்றியே
பணிவு அருங் கலையோர் அடை பான்மையோ?
93
   
 
2288“அஞ்சினால் என ஈங்கு வந்து அண்மினாய்;
எஞ்சினார் இவர்க்கு ஈங்கு அருள் ஈய்ந்துளாய்;
துஞ்சினார் என ஆங்கு அவர் தோன்றி, வாழ்
நெஞ்சின் ஆர்உயிர் நீடு உற நல்கினாய்.
94
   
 
2289“வளி விள்ளா முகை கொய்தென மாய்ந்து தேன்
துளி விள்ளா முகைத் தேம் தொடை ஆக நீ
அளி விள்ளாது அணிந்து, அம் மகர் யாவரும்
களி விள்ளா உயர் செல் கதி வாழ்வரே.
95
   
 
2290“எண்ணின் மேல் எழும் சூட்சி இயற்றி நீ
விண்ணின் மேல் எழும் வீடு இட வந்து, உனை
மண்ணின் மேல் எழு மாக்கள் பகைப்பரோ,
புண்ணின் மேல் எழும் தீப் பொறி ஈட்டியே?
96
   
 
2291“மின்னைக் காட்டிய வேகத்து உற்று ஒல்கிப் போய்க்
கொன்னைக் காட்டிய கோலம் விரும்பினார்
பொன்னைக் காட்டு அழல் போன்று அரிது உன் தயை
தன்னைக் காட்டினர் நோய் செயும் தன்மையால்.
97
   
 
2292“கடல் வண்ணத்து அமுதே, கதி வாயிலே,
உடல் வண்ணத்து ஒளியே, உயிரே, உயிர்க்கு
அடல் வண்ணத்து அணியே, அருளே! எனா
மடல் வண்ணத்து அலர்த் தாளை வணங்கினார்.
98
   
 
2293வில்லின் மாரியின் விண்ணவர் நின்று, இசைச்
சொல்லின் மாரியின் தூய் புகழ் பாடியும்,
செல்லின் மாரியின் தேன் மலர் சிந்தியும்,
எல்லின் மாரியின் ஒள் அடி ஏத்தினார்.
99
   
வரும் பொருள்
 
2294நாதன் அன்றியும், நாதன் தெரிந்த தன்
தூதன் என்ற கருணையன, துஞ்சிலாது
ஆதல், அன்பு எழுந்து ஆங்கு அவர் கண்டு அடை
சீத இன்பு இயல்பு, ஈங்கு இனிச் செப்புவாம்.
100
   
மகப்பேறில்லாத சக்கரீயனும் எலிசபெத்தும்
 
2295அல் அறத் துளங்கு திங்கள்
  அணிந்த மீன் பரப்புப் போலப்
பல் அறத் தொகுதி வாய்த்த
  பணி புனை சக்கரீயன்;
இல்லறத் துணைவி, குன்றத்து
  இணைய கற்பு எலிசபெத்தை
சொல் அறத் துணையாயத், தம்முள்
  துணை புறத்து இன்றி நின்றார்.
1
   
 
2296கை வளர் கொடையோடு ஒன்றக்
  கான் வளர் தவத்தின் மிக்கோர்,
பொய் வளர் உலகின் ஆசை
  போற்றிய புதல்வர் இன்றி,
மெய் வளர் திரு உளத்தின் வினை இது
  என்று உணர்வில் தேறி,
மை வளர் துயர் அற்று ஓங்கி,
  வயது முற்றியராய் நின்றார்.
2
   
 
2297பூட்சியின் துணையாம் இன்பப்
  புதல்வரை இன்றி, தூய் நல்
ஆட்சியின் துணையை நேடி,
  அருமறை உணர்ந்த ஓதிக்
காட்சியின் துணையோடு, அன்னார்
  கனிந்து உயர்ந்து எவர்க்கும் ஞானச்
சூட்சியின் துணை தாம் ஆகி,்
  துகள் தவிர் புகழின் வாய்ந்தார்.
3
   
 
2298பரவு அலர் மலர்ந்த சோலை
  படர்ந்த தண் நிழலோடு ஒத்தார்;
கர அலர் மலர்ந்து நல்கும்
  கனிந்த தேன் எவர்க்கும் ஊட்டி,
புரவலர் ஆக, நொந்து
  புலம்பினர்க்கு உயிரே ஆகி,
இரவலர் உயிராய்ப் பேணி,
  இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார்.
4
   
வானவன் தூதரை- சக்கரீயன் ஊபையாதல் எலிசபெத்து கருவுறுதல்
 
2299பேர் அறக் கன்னி வையின்
  பிறக்கும் முன், தனக்குத் தூது என்று
ஆர் அறத் தொகையோன் மைமைக்கு
  அரியது ஓர் புதல்வன் தோன்ற,
ஈர் அறப் படலைக் கண்ணி ஏந்தும்
  இவர்க்கு, இறைவன் அந் நாள்
நேர் அறக் கருப்பம் தந்து,
  நெடும் புகழ் அளித்தல் ஓர்ந்தான்.
5
   
 
2300கேள்வியின் புலமை மூத்தோன,்
  கெழுமிய முறையில், தூம
வேள்வியின் முகத்து நிற்ப
  வேய்ந்த விண்ணவன் கண்டு அஞ்ச,
சூழ் வினை அறிந்த வானோன்,
  சொல் எடுத்து, “அஞ்சேல், அஞ்சேல்,
வாழ்வினை உரைப்பத் தூதாய்
  வந்தனென், கேட்டி“ என்றான்.
6
   
 
2301“மாண் தகை அறத்தின் பாலான்
  மைந்தனே நினக்குத் தோன்ற,
காண் தகை உரிய பண்பால்,
  கருணையன,் அவனை என்பாய்;
ஆண்டகை முகத்து, முன்னி,
  அவற்கு அதர் செப்பஞ் செய்து,
சேண் தகை அடையத,் தீயோர்
  செலுத்துவான் நெறியில்“ என்றான்.
7
   
 
2302“முதிர்ந்துஅன காலம் சாய்ந்த
  முகத்திலோ, உவப்ப நானே,
எதிர்ந்துஅன பிள்ளை காண்பேன்?“
  என்றனன் மூத்தோன், என்று, உள்
பொதிர்ந்தன அயிர்ப்பு உற்றாயே,
  புகன்றவை கண்டால் அல்லால்,
அதிர்ந்துஅன துயரில், ஊமை
  ஆதி “என்று ஒளித்தான் வானோன்.
8
   
 
2303இவ் வழி, எவரும் அஞ்ச, இருந் தவன் கையால் பேசி,
செவ் வழி உளத்துத் தேவ திருவுளம் போற்றி, அய்யம்
அவ்வு அழிவு ஒழியத் தூது வந்த காபிரியேல் சொன்னது
அவ் வழி கருப்பம் ஆகி, அதிசயித்து ஓங்கினானே.
9
   
கருவுற்ற எலிசபெத்தைக்காண மரியாள் செல்லுதல்
 
2304இலங்கு எழு விசும்பின், வெண் கோட்டு
  இளம் பிறைக் குழவி போல,
நலம் கெழு கருவில,் தோன்றல்
  நவி வளர்ந்து, ஆறாம் திங்கள்
அலங்கு எழு பருவத்து, எம்மை
  அளிப்பதற்கு இரங்கி, நாதன்
வலம் கெழு கன்னி தன்வாய்
  மைந்தனே தானும் ஆனான்.
10
   
 
2305கண் கவர் வனப்பின் தூது
  கபிரியேல் உரைத்த காலை,
பண் கவர் மொழி நற் கன்னி
  பயன்பட எலிசபெத்தை
மண் கவர் கருப்பம் தாங்கி
  மகிழ்ந்தன காதை கூற,
விண் கவர் அரசாள் ஓங்கி,
  விளைந்த பல் உணர்வும் உற்றாள்.
11
   
 
2306பூவிடைக் குளித்த தேன் போல்
  புதல்வனாய்த் தான் சூல் பூண்ட
மூ இடைப் புரக்கும் கோன்
  முன் முதிர் அருள் தூதாய் எய்தி,
கூவிடைப் பொது அற்று உற்ற
  குழவியை மருவத தானே,
பாவிடைப் புகழின் மிக்க
  பயன் கொள்வான் எனக் கண்டு உற்றாள்.
12
   
 
2307பான் நலம் சினை கொள் மேகம்,
  பகல் செய விளங்காது என்னோ
தேன் நலம் சினை கொள் பைம் பூ
  தேம் கமழாதோ? தேவ
சூல் நலம் சினை கொள் கன்னி,
  துளங்கு அருள் புரிதல் உள்ளி,
வான் நலம் சிவணிச் சூல் கொள்
  மைமையை அணுகல் ஓர்ந்தாள்.
13
   
 
2308ஓர்ந்தவை அறத்தின் ஆட்சிக்கு
  உரித் துணையவற்கும் கூற,
தேர்ந்தவை உயர்ந்த கேள்வி
  செறிந்த அருட் புலமையோனும்
கூர்ந்து அவை இமிழின் கேட்டு
  “குணம் இது“என்று இருவர் வானத்து
ஆர்ந்து அவை சூழ, நீண்ட
  அதர் கடந்து ஏகல் உற்றார்.
14
   
சூசையும் மரியும் புறப்பட்டுச் செல்லுதல்
 
2309தேசிகப் பாவையின் சிறந்த கோதையாள்,
மாசு இகல் பானு ஒளி கமலம் மாந்தல் போல்,
ஆசு இகல் சூல் அணிந்து அல்கல் நான்கும் ஆய்,
ஏசு இகல் பாய் ஒளி பரப்ப ஏகினார்.
15
   
 
2310ஆரண வடிவினோன் அரிய சூல் எனும்
காரணம் அறிகிலா, கருத்தில் ஓங்கிய
பூரண அருளினால் பொலிந்து, இன்பு ஆர் அலை
வாரணம் நீந்தி உள் மகிழ ஏகினார்.
16
   
 
2311கயில் துணை படலை அம் கலனின் சேர்ந்து இவர்
குயில் துணை குயிலும் இன் இசையின் கூத்து எழ
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள்
எயில் துணை உயர் நகர் அகல் ஏகினார்.
17
   
 
2312செண்பகம் மலர்ந்த காத் திரளும், பொய்கையும்
வண் பகடு உழைத்த பூம் வயலும், நாடும் தம்
பண்பு அக விசையொடு அப்படி கடந்து போய்,
விண் பகலவன் என வெற்பின் ஏறினார்.
18
   
 
2313கண் புதைத்துஅன இருள் கலந்த சோலை சூழ்
மண் புதைத்துஅன மணி வளர் குன்று உச்சிமேல்
நண்பு உதைத்துஅன நசைச் சிறை நலம் கொடு,
விண் புதைத்துஅன மினின் விரைவுற்று, ஏறினார்.
19
   
 
2314பிழையிடைக் குளித்த நோய் பெயர்க்கல் ஓர்ந்து, வான்
உழை இடைக் குளித்த பல் உறை விண் தாண்டி மின்
மழையிடைக் குளித்தென வளர்ந்த பல் மலை
நுழை இடைக் குளித்து, அருள் நுதலிப் போயினார்.
20
   
 
2315தீய் முகத்து இணங்கிலாது இல்லை; செஞ்சுடர்
காய் முகத்து இருள் இலை; கழுமும் நீத்தமே
பாய் முகத்து அணை இலை; அன்பு பற்றிய
வாய் முகத்து அரியது ஓர் வருத்தம் இல்லை ஆல்.
21
   
 
2316துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று, அன்பினால்
அணி உடை அலர் அடி வருத்தத்து அஞ்சிலார்;
பிணி உடை வரைகளும, பிரிந்த நெட்டிடைக்
கணி உடை நெறிகளும் கடிதின் நீந்தினார்.
22
   
 
2317யாப்பு உரி அன்பினார் ஐயென்று ஏகலும்,
தூப் புரி முத்து அணி தோன்ற,் சூழ் முகைக்
காப் புரிவு அலர்ந்த நீள் நெறி கடந்து போய்,
பூப் புரி எயில் நலம் பொலிய நோக்கினார்.
23
   
வரவேற்பு
 
2318மின் எதிர் விளக்கு என, விரிந்து வில் செயப்
பொன் எதிர் மணி என, புரிந்த அன்பினால்
தன் எதிர் இலார்க்கு முன், சக்கரீயனும்
துன் எதிர் துணைவியும் தொழுது எதிர்ந்தனர்.
24
   
 
2319நீர்த்த மெய் உயிரினைத் தழுவும் நீர்மையால்
சீர்த்த அருந் தவர் தமைத் தழுவி்த, தேன் மலர்
போர்த்த கொம்பு அணைத்த பூங் கொடியைப் போல், அருள்
கூர்த்த நல் மாதரும் குடங்கை வீக்கினார்.
25
   
 
2320அள்ளிய அலர்களும் அலருள் வாசமும்
தெள்ளிய கனிகளும் கனியுள் தேறலும்
வள்ளிய மணிகளும் மணியுள் வாமமும்
உள்ளிய நிலைத்து; அவர் உறைந்த சீர்மையே.
26
   
மரியாளின் இன்மொழி
 
2321“வற்றியே, முகில் மாரி செய் வாரியால்
பெற்றியே பெறும் ஓடையின், பெற்ற நாள்
முற்றியே, நயம் முற்று உறச் சூல் அருள்
உற்றியே எனக் கன்னி உரைத்தனள்.
27
   
கருணையன் கனிவு
 
2322உரைத்த வாய்மை இரு செவி ஊடு இனிது
இரைத்த ஆண்மையில், ஏந்திய சூல் உறை
வரைத்த வாம மகன், கரு மாசு அற,
கரைத்த; வாய் இலன், உள் களித்தான்; அரோ.
28
   
 
2323நிருதி வாய் திறந்து, அம் கையின் நேர், அருள்
கருதி, வாய் திறந்து ஆசி கதைத்தலால்,
பருதி வாய் திறந்து அள் இருள் பட்டெனச்
சுருதி வாய் திறந்து ஆசு துடைத்தனள்.
29
   
 
2324துடைத்த ஆசு அற, சூல் உறை தோன்றல், ஆங்கு
உடைத் தயா நிகரும் தவிர்ந்து, உள் உணர்வு
இடைத் தயாபமோடு ஈந்த வரத் தொகை,
படைத்த நாதன் அருட் பயன், எய்தினான்.
30
   
 
2325முகையின் முற்றிய வாசம் எனா, முதிர்
தகையின் கன்னி வயிற்றிடை் தற்பரன்,
நகையின் தன்மையின் கண்டு நயந்து அருள்
தொகையின் அங்கு அவன் தாள் தொழுது ஏத்தினான்.
31
   
 
2326ஏற்று அருங் குணத்து ஏத்திய நாதனும்,
மாற்று அருங் குணத் தாய் வயிற்று இன்பொடு
தூற்று அருங் குணத் தோன்றலை நோக்கலால்,
சாற்று அருங் குணத்து ஆர் அருள் தாங்கினான்.
32
   
எலிசபெத்து மரியானை வாழ்த்துதல்
 
2327மாரியால் பிரழ் ஆறு என, மைந்தன் உன்
தாரியால் தகு சால்பு அருள் தன்மை, மேல்
வாரியால் பிரண்டு, அன்னையும் மல்கு ஒளி
மூரியால் துதி முற்று எடுத்து ஓதினாள்:
33
   
 
2328“மக்கள் தங்கிய மாசு அற மைந்தனாய்த்
திக்கு அடங்கில தேவனைச் சூலொடு
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து,
இக்கு அடங்கில இன்பு அளிப்பாள் கொலோ!
34
   
 
2329“பிரிந்த கன்றினை நேடிய பெற்றமோ
எரிந்த கூழ் உயிர் என்று , இயை மாரியோ,
சொரிந்த தன்மை வரத் தொகை ஈக, நீ
விரிந்த நீள் நெறி வந்து, எனை மேவினாய்
35
   
 
2330“வேய்ந்த, மாட்சியின் மேவரு மேன்மையால்,
வாய்ந்த மாதருள் ஆசி மலிந்த நீ,
ஆய்ந்த வாய்மை கடந்து, அரிது ஆசியுள்
தோய்ந்த நீ அணி சூல் கனி தானுமே
36
   
 
2331“நின் தன் வாய் மொழி என் செவி நேர் பட,
என்தன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ,
மின் தன் வாய் என மேவி, உகண்டு, உளத்து
உன் தன் வாய் அருள் ஆண்மையில், ஓங்கினான்!
37
   
 
2332மநீத வாய் நெகிழா நெறி நாயகன்,
வேத வாய் மொழி ஆக விளம்பிய
சாத வாய்மை உன்வாய் தக, உன் புகழ்
கீத வாயில் எங்கும் கிளைப்பார்“ என்றாள்.
38
   
தன்புகழை மரியாள் இறைவனுக்கு்ப படைத்தல்
 
2333பட்ட செங் கதிர் மீட்டு, அவை பானின்மேல்
விட்ட வெண் பளிங்கு ஒத்து, இவள், மேவலோடு
இட்ட தன் புகழ,் தன் இறையோன் தனை
ஒட்ட, மீட்டனள் கன்னியும், ஓதியே
39
   
இறைவனைப் போற்றிய முறை
 
2334“தெருளால் தெளிந்த என் உளம் என்
  திரு நாயகனைப் புகழ்ந்து இறைஞ்ச,
அருளால் உயர் என் உயிர், என்னை
  அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப,
மருளால் தளர்ந்த இவ் அடிமை,
  மனம் தான் இரங்கிப் பார்த்த, தயைப்
பொருளால,் எவரும் முறை முறையால்
  புகழுற்று, என்னைச் செல்வி என்பார்.
40
   
 
2335“விண்பால் முதல் மூ வுலகு அசைக்கும்
  மிடலின் மிக்கோன,் என்னிடத்துத்
திண்பால் வளமே செய்தமையால்,
  திருத் தன் நாமம் புகழ்படவே,
நண்பால் இணையாக் குணத் தொகையோன்,
  நயந்து, எஞ் ஞான்றும், முறை எஞ்சா,
மண்பால் தன்னைத் தொழுது இறைஞ்சும்
  மக்கட்கே, தான் தயை செய்வான்.
41
   
 
2336“கேழ்வார் தடக்கை வலி காட்டிக்
  கிளர் தீ உணர்வின் செருக்கு உளத்துச்
சூழ்வார்,் சிதைத்தான்; வயத்து உயர்ந்தோர்த்
  துகள் செய் நிவப்பின,் நூக்குகின்றான்;
தாழ்வார் உயர்த்தான்; பசித்து அயர்வார்
  சால நிறைத்தான்; திரு மல்கி
வாழ்வார் வறியோர் ஆக்குகின்றான்
  மாறா நீதி வயம் மிக்கோன்.
42
   
 
2337“அண்ணத் தலையின் முறை கடந்தே,
  அபிரம் முதல் மூத்தோர்க்கு உரைத்த
வண்ணத்து, அரும் தன் தயை உள்ளி,
  வழுவா அன்பின் பணித் தொழும்பன்
எண்ணத்து ஒழுகும் இசறயலை
  இரங்கிக் கைக்கொண்டான்“ என்றாள்,
கண்ணத் தகுதி கடந்து எனை ஆள்
  கருணை மிக்க வான் அரசாள்.
43
   
கவிக் கூற்று
 
2338இனைய பலவும் இசைத்து இசைப்ப
  இன்பக் கடல் ஊடு உளம் மூழ்க,
தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில்
  தாயார் இவ்வாறு அன்று உவந்தார்்,
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம்
  நயப்ப, வளர் தேய் மும் மதி மற்று
அனையர் இனிது ஆங்கு உறைந்து, உற்றது
  அனைத்தும் அறைதற்கு எவர் பாலார்?
44
   
கருணையன் பிறப்பும் மரியாள் அருளும்
 
2339அம்கண் படர் வான் செஞ் சுடர் முன்
  அருகே சுங்கன் உதித்தது போல்
இங்கண் சுடர் ஒத்து அவதரித்த
  இறைவன் பிறக்கு முன், எவரும்
தம்கண் சிறுமை தீர்ந்தது எனத்
  தகும் காரணம் காணாது உவப்ப
திங்கட் குழவிக் கோட்டு உருவின்
  சிறந்து அத் தோன்றல் தோன்றினன் ஆல்.
45
   
 
2340பிணித்த நர தேவு இறையவற்கே
  பீடமாக வனைந்த, மதுப்
பணித்த கமலச் செங் கரத்தில்,
  பயந்த மகவை ஏந்தி, அருள்
குணித்த கன்னி அனைத்தன கால்,
  குழவிக்கு ஊட்டும் வரத் தொகையைக்
கணித்த திறத்து ஊட்டினள் அல்லால்,
  கதிர் வானவரும் அறிகுவரோ?
46
   
 
2341கனியே பார்த்தான், திரு முகத்தைக்
  கண்டான், உவந்தான், அருள் குளித்தான்,
துனியே தீர்ந்தான, உரை உதவாத்
  துள்ளித் துதித்தான், உணர்வு ஓங்கிப்
பனியே கிளர் பூங் கரத்து ஒல்கிப்,
  பணியச் சிரத்தைக் கோட்டுகின்றான்;
நனியே வாழ்ந்தான், வரப் பவ்வம்
  நயப்பத் தாழ்ந்தான் இள முத்தோன்.
47
   
சக்கரீயன் மகிழ்ச்சி
 
2342மெய் கொள் மறை நூல் நெறி வழுவா
  விளைந்த உவப்பில், எட்டாம் நாள்,
கைகொள் முறைகள் திருந்தலொடு,
  கருணையன் பேர் இட்டன பின்,
ஐ கொள் குழவி கருணையினால்,
  அவிழ் நாப் புரிவு தீர்ந்த அய்யன்,
மொய் கொள் உணர்வோடு உரை கொண்டே,
  முதலோன் மேல் வாய்த் துதி முடித்தான்.
48
   
மரியும் சூசையும் தம் உளருக்குக் திரும்புதல்
 
2343நிதியின் தோய்ந்த அழகு இளையோன்
  நீர்ப்ப ஆசி ஓதிய பின்,
துதியில் தோய்ந்த உரை எவர்க்கும்
  சுவையின் கனிந்து, கனி கூறி,
மதியில் தோய்ந்த பதத்தாளும்
  மறை தோய் மாட்சி மா தவனும்,
நுதியில் தோய்ந்த வாள் உயிர் ஈர்
  நோய் கொண்டு, அகன்று போயினர் ஆல்.
49