பிரிந்த மகவைக் காண் படலம்
 
வேதநூல் வல்லார் அவையில்
இயேசு திருமறை உண்மைகளை விளக்குதல்
 
3182முப் பகல் இவர் இவ்வாறே முற்றிய துயர் கொண்டு ஏங்க,
ஒப்பு அகல் மாட்சிப் பாலன், ஒளி மணிக் கோவில் தன்னில்,
தப்பு அகல் மறையின் வல்லோர் சவையினுள், பலவைக் கேட்ப,
அப் பகல் மூன்றும் வைகி, அனைவரும் வியப்பச் செய்தான்.
82
   
மறைவல்லார் ஆய்வுரை கேட்டல்
 
3183உற்ற நூல் ஊன்றி, “நாதன் உருவொடு
  உற்றனனோ?“ என்ன,
பெற்ற நூல் தெளியா நீரார்
  பிதற்றலின், மூன்றாம் நாளில்,
கற்ற நூல் இல நூல் வல்லோன்,
  கற்க வந்து எனச் சேர்ந்து, ஓர் ஒப்பு
அற்ற நூற் படி, தான் உற்றது
  அல்ல என்று அறையக் கேட்டான்.
83
   
இயேசுவின் வினா
 
3184கேட்டலும் இரங்கி, அன்னார்
  கிளந்தவை மறுத்து நீக்க
வேட்டலும், தன்னைக் காட்டா,
  மெல் இசை இரங்கு நல் யாழ்
கூட்டலும், கனி பால் மற்றக்
  குளும் சுவை திரட்டிக், காதில்
ஊட்டலும் அனைய தீம் சொல்,
  ஓர் என்பான், ஓதல் உற்றான்.
84
   
திருமகன் தெளிவுரை
 
3185“ஊட்டு அரக்கு உண்ட பதுமம் விண்டு உவப்ப
  ஒளிச் சுடர் உதித்தது போன்றே,
தீட்டு அரக்கு உடலின் நாதன், நாம் உவப்ப,
  சிறுவனாய்ப் பிறந்ததும் கேட்டேன்.
மீட்டு, அரக்கு ஒளி போய், வருடம் ஈர் அறு முன்,
  வெயில் என இராவும் ஆய், கீதம்
கேட்டு அரற்று இடையர் அரியது ஓர் காட்சி
  கிளர் ஒளி கண்டதும் கேட்டேன்.
85
   
 
3186“வான் தந்த நன்னர் வானமே காட்ட
  வழுக்கு இல நா என நவ மீன்
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து,
  தரணி காப்பவனை வந்து இறைஞ்ச,
மீன் தந்த வழி வந்து, எவண் அவன்? என்ன,
  விளங்கிய பெத்திலம் தன்னில்
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று
  உரைத்தது நீர் அன்றோ? என்றான்.
86
   
மறையவர் மறுமொழி
 
3187“கான் முகத்து அலர்ந்த மது மலர் வடிவோய்,
  களிப்ப நீ உரைத்தவை நாம் ஓர்ந்து,
ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம்
  உற்றனம் ஆயினும், வேத
நூல் முகத்து, ‘அரசர் இறைஞ்ச வந்து, எங்கும்
  நுதல்வு அரும் ஆண்மையில் ஆள்வான்,
வான் முகத்து இறைவன், என்றது ஆய்ந்து அல்லோ,
  வந்தது அன்று என்றனம்?‘ என்றார்.
87
   
இயேசுவின் வினா
 
3188“சொல்லிய தன்மைத்து அன்றியும், அன்னான்
  துறும் துயர்க் கடை இலன், மிடியே
புல்லிய தன்மைத்து உறவு இலன், நசை செய்
  பொருள் இலன், மனை இலன், உலகில்
ஒல்லிய தன்மைத்து எளியனாய்த் தோன்றி,
  ஒரு மரத்து இறப்பது, அவ் வேதத்து
இல்லிய தன்மைத்து உளது அன்றோ?“ என்றான்,
  இள முகத்து அனாதியான் அன்றே.
88
   
 
3189“வேறு பட்டு எதிர்த்த மாற்றம் ஒன்று ஆக,
  வெளிற்று இளஞ் சொல் ஒருவீரேல்,
ஈறு பட்டு அனைத்தும் கற்றவர் சொன்னது
  இயம்புதும்“ எனத், தொழுது உரைப்பான்:
“மாறு பட்டு அழிந்த மனுக் குலத்து அற நூல்
  வகுத்து அளித்து உற்ற பின், உலகம்
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான்,
  நிமலன், என்றது மறை அன்றோ?
89
   
 
3190“படி முடித்து, எவர்க்கும் பயன் தர வருங் கால்,
  பரமன், நீர் சொல்லிய வண்ணத்து,
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க,
  எங்கணும் வெருவினை வீசக்,
கொடி பிடித்து அமரர் முன்ன, மற்ற எவரும்
  குழைந்து சூழ் இறைஞ்ச, வான் அரசாய்,
கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து,
  கதிர் முகத்து இயல்வது நன்றே.
90
   
 
3191“ஒளி பொருள் இன்பம் வெஃகிய வினையால்
  உயிர் கெட நுழைந்த தீது ஒழிப்ப,
விளி பொருள் இவை என்று, எளிமையே பொறையே
  வெறுமையே மெய்த் திரு என்னத்,
தெளி பொருள் மறையாய்ப் பயிற்ற வந்தவன் தான்
  திரு வெறுத்து, எளியன் உற்று, எவர்க்கும்
நளி பொருள் ஓதல், தயை தளிர்த்து அளிப்ப
  நண்ணும் கால், உரிது அன்றோ? என்றான்.
91
   
அவையோர் வியந்து நீ யார் எனக் கேட்டல்
 
3192“இத் திறத்து, எதிர்த்த காதைகள் பொருந்தி,
  எய்திய நவங்கள் கண்டு, அளிப்ப
மெய்த் திறத்து இறைவன் பிறந்தனன் என்னில்,
  வெளிறு அதோ?“ என்றனன் பாலன்.
அத் திறத்து, எவரும் தாம் தமை நோக்கி
  அதிசயித்து, “எவர் மகன்?“எவ் ஊர்?
எத் திறத்து உரிய குலத்தன் நீ? என்றார்,
  இளவலும் மறைவு உறச் சொன்னான்:
92
   
திருமகன் மறைப்பொருளாய்க் கூறிய மறுமொழி
 
3193“தாதை உண்டு என்னில், தாய் இலை, அவனும்
  தாய் உளது எனில், இலை; உதித்த
காதையும் தெளிப்ப, எனக்கு ஓர் ஊர் இல்லை
  கலந்து இரு குலத்து உதித்து, இல்லை
கோதைஉண்டு அழிந்த குலம் எனக்கு“ என்றான்.
  “கூ இடத்து இன்னவர் இலை“என்று,
ஓதைஉண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு, ஆங்கு
  உணர்ந்தவை ஓர்ந்து போயினரே.
93
   
சூசையும் மரியும் திருமகனைக் கண்டு தழுவுதல்
 
3194தப்பு அடும் உரை உணர்ந்து எவரும் சாய்ந்து போய்,
வெப்பு அடும் வேலை ஆய், தாயும் மெய்யனும்,
ஒப்பு அடும் ஒளி மணி பதித்த ஒண் துகிர்ச்
செப்பு அடும் சிறுவனைச், சென்று, நோக்கினார்.
94
   
 
3195எல் ஒளி பட மலர் கஞ்சமே என,
வில் ஒளி முகத்து முன் விண்டு அலர்ந்து உளம்,
அல் ஒளி படத் துளி அளித்த காந்தம் போல்
செல் ஒளி விழியினார் அழுது சேர்கின்றார்.
95
   
 
3196சுனை அனை விழி விடா தொடுத்த நீரினால்
நனை அனை முழு மெயும் நனைப்ப, அன்னவர்,
புனை அனை அன்பு உயிர் புணர்ந்து ஒன்று ஆகவும்
தனையனை முறை முறை தழுவினார் அரோ.
96
   
தேவதாயின் அன்புரை
 
3197“கற்றை நாண் முகத்தினோய், பிரிந்த காரணத்து,
அற்றை நாள் ஆதியாய் உயிர் அற்று ஆகுலித்து,
இற்றை நாம் நுகர, நீ இரங்கு இல் ஆயது ஏன்?
மற்றை நாள் ஒன்றின், நாம் வாழவோ?“ என்றாள்.
97
   
திருமகன் கூறிய ஆறுதல்
 
3198பட்டவை அறிந்து இனைந்தேனும், பற்று எலாம்
அட்டு அவை புதைத்து என, “அருளி எந்தை தான்
சுட்டு அவை செயென் கொலோ?“ என்று சொன்ன பின்,
நட்டவை ஓம்பும் நீர் என, நட்பு ஊட்டினான்.
98
   
வானவர் வாழ்த்து
 
3199மரு அணி மலர் மழை வாரி, யாழ் குழல்
வரு அணி இசையொடு, மதுர வாய்க் குரல்
உரு அணி உம்பர், சூழ் உவந்து பாடி, வான்
தெரு அணி விழா அருஞ் சிறப்பில் வாழ்த்தினார்.
99
   
மூவரும் நசரேத்தூருக்குத் திரும்புதல்
 
3200விட்ட இடைக்கு இறுகி, அன்பு இன்பம் மிக்கவர்,
கட்டு இடைக் காப்பியக் கவிகள் போலவும்,
மட்டு இடைக் கமழ் மலர் மாலை போலவும்,
நெட்டு இடைப் பழம் பதி நேடிப் போயினார்.
100