தாண்டகம், திருநேரிசை, திருக்குறுந்தொகை, திருவிருத்தம் என்றவற்றில் ஒவ்வொன்றே இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. இவையெல்லாம் அன்பு மேலீட்டினால் உண்ணிறைந்து மேல்வழிவன போன்றன என்பார் அன்புறு என்றும், வண்மையால் பற்பல வளங்களையும் தருதலால் வண்தமிழ் என்றும், தமிழுக்குச் சிறப்பாயுரிய அகப்பொருட்சுவை மிக்கிருத்தலின். தமிழ்பாடி என்றும் கூறினார். அங்கு வைகி - திருக்கழிப்பாலையில் நாயனார் சிலகாலம் தங்கினர் என்பது திருப்பதிகங்களாற் கருத உள்ளது. நினைவு அறியார் - நினைத்தற்கும் அரியவர். உயர்வு சிறப்பும்மை தொக்கது. "உலகெலா முணர்ந் தோதற் கரியவன்" என்றது காண்க. உயிர்ப்போத உணர்வினுக்கு அரியவர் - எட்ட முடியாதவர் என்பது. இது நடுநிலைத் தீபமாய் கழிப்பாலை யிறைவரையும், தில்லையிறைவரையும் குறித்தது காண்க. திரு நீடு புலியூர் என்க. "செல்வ நெடுமாடம்" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும் காண்க. நினைந்து மீள்வார் - நினைந்து - "நினைப்பவர்" என்ற திருக்குறுந்தொகையின் குறிப்பு. மீளுதல் - மீண்டுந் தில்லையை அடைதல். மீள்வார் - மீள்வாராக; எதிர்கால வினையெச்சம். மீள்வார் - நண்ணும் போதில் - என மேல்வரும பாட்டின் வினையெச்சத்துடன் முடிந்தது. 173 திருச்சிற்றம்பலம் | காந்தாரம் - திருக்கழிப்பாலை |
| வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே யென்கின் றாளாற்; சினபவளத் திரடோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்ற னென்கின் றாளால்; அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலா னென்கின் றாளாற் கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ? |
1 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- தலைவனைப் பிரிந்த தலைவியினது மெலிவு கண்டு, செவிலி அல்லது தாய் கூறிய துறையாக அகப்பொருட் சுவையில் அமைந்தது இத்திருப்பதிகம். "மனைப்படப்பிற் கடற்கொழுந்து வளைசொரியும் கழிப்பாலை" (1439) என மேல்வரும் பாட்டிற் குறிப்பிடுகின்றபடி இத்தலம் நெய்தனிலஞ் சார்ந்தது; "இரங்கல் நறு நெய்தல்" என்று திணை இலக்கணம் வகுத்தபடி, பரிவின் இரங்குதல் இத்தினைக்குரிய பொருளாயிற்று. தலைவனைக்கண்டு திளைத்த தலைவி, அவனது பிரிவு நினைந்து அதுவே நினைவாய் இருப்பாள்; அவனது உருவெளிப்பாடு கண்டோ அன்றிக் காணாதோ அவனது அழகினையும் நலங்களையும் பிதற்றி இரங்கி மெலிவடைவாள்; அது கண்டு, தன்னை மறந்து பிதற்றி அவள் கூறும் சொற்களைக் கேட்டும், செவிலியும் தாயரும் இவள் இத்தலைவனைக் கண்டு திளைத்தனளோ என்று ஐயுற்றுத் தெளிந்து மேல் ஆவன துணிகுவர். இக்கருத்துப்பட இப்பதிக முழுமையும் வருவன காண்க. "அழக னேகழிப் பாலையெம் மண்ணலே, யிகழ்வ தோவெனை யேன்றுகொ ளென்னுமே" என்ற குறிப்புட் கொண்ட கருத்துடைய இத்தலக் குறிந்தொகைத் திருப்பதிகத்தினையும் நாயனார் இவ்வாறே அகப்பொருள் துறையின் வைத்தோதியருளினர். "கழிப்பாலைச் சேர்ப்பனாரே" என்ற திருநேரிசைக் குறிப்பும், "கழிப்பாலை மேய கபாலப்பனார், மாயக்குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே" என்ற இத்தலத்திருத்தாண்டகக் குறிப்பும் இக்கருத்துப்போலும்! சேர்ப்பர் - நெய்தனில மக்களின் பெயர். குறிப்பு :- இத்திருப்பதிகம் ஆசிரியரது திருமனத்தில் பதிந்து அதனைக்கவர்ந்ததாதலின் முன் கூறிவந்த யாப்பினைமாற்றி இங்கு இந்த யாப்பினிற் |