பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்149

 

தொண்டினிலைத்த மன உறுதிப்பாட்டினை நன்கு விளக்கி இச்சரிதப்பகுதிக்கு அகச்சான்றாக விளங்குகின்றது. "வானந் துளங்கிலென் - ஆட்பட்ட உத்தமர்க்கே" என்ற திருவிருத்தக் கருத்தும் இங்குவைத்துக் காண்க.

வெஞ்சிலை மூவிலை - என்பது பாடம்.

116

திருச்சிற்றம்பலம்

திருவதிகை வீரட்டானம்

பண் - காந்தாரம்

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண வுரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறு மகலம் வளாய வரவுந்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை; யஞ்ச வருவது மில்லை.

1

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை
யுரங்களெல் லாங்கொண் டெடுத்தா னொன்பது மொன்று மலற
வரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
நிரம்பு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை; யஞ்ச வருவது மில்லை.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- வெஞ்சுடர் மூவிலைச் சூலமேந்திய வீரட்டானேசுவரர் தம்முடைய அடியோம் நாம் ஆதலின் இப்போது அஞ்சுவதில்லை; இனியும் அஞ்சவருவது ஒன்றுமில்லை; என்று ஆசிரியர் காட்டுவது காண்க. (1381). "உடையாரொருவர் தமர்நாம்; அஞ்சுவ தியாொன்று மில்லை; அஞ்ச வருவது மில்லை; என்று பதிகப் பாட்டுக்கள் தோறும் வரும் மகுடங்கள் இக்கருத்தை விளங்குவன.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) சுண்ணவெண் சாந்தும், சந்தனச் சாந்தும் என்று சாந்து என்பதனை ஈரிடத்தும் கூட்டுக. "தன்மார்பிற் பால்வெண்ணீற்றஞ்சாந் தணிந்தானை" (சீகாமரம் - திருவாரூர். 10) என்றது நாயனார் திருவாக்கு. "சாந்தமுந் திருநீறு" திருவிசைப்பா (சாட்டியக்குடி - 2); "சீரெலாஞ் சிறந்த சாந்தம் தெய்வநீறு" (திருவிளை - புரா - 85); வெண்சாந்து என்றதனால், நீறு என்பதும், ஏனைச் சந்தனம் செம்மை நிறமுடைய தென்பதும் குறிப்பிடப்பட்டன. "சினபவளத் திண்டோண்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்ற னென்கின் றாளால்" (திருக்கழிப்பாலை - காந்தாரம் - 7.) என்றபடி, "கழல் தெளிவுற்ற பெரியோர்" (1379) இங்குத் தம்முள்ளத்தில் யானைச் சினத்தை மாற்றுதற்கு அதிதெய்வமாய் அதுபோல வைத்துத் தியானஞ்செய்து கணிக்கப்பட்ட மந்திரரூபமாகிய சிவபெருமானது திருவுருவத்தில் நாயனாரை மிகவும் வசீகரித்தது அவரது திருமேனியிற் பொலிந்த திருநீற்று வெண்சாந்தேயாம். அதனை அடுத்து அவரதுள்ளத்தைக் கவர்ந்து நின்றது அம்மையார் பாகத்தில் நின்ற செஞ்சந்தனச்சாந்து; "வலநீ றிடஞ்சாந்து" (பொன் - வண் - அந் - 65), "சந்தனமுங் குங்குமமும் சாந்தும் தோய்ந்த தோளானை" என்பவை காண்க. ஆதலின் இதனை முதற்கட் கூறித்தம் நெஞ்சழுத்திய அத்திருவுருவத்தினைப் பாடத் தொடங்குகின்றார். "இளங்கொங்கையிற் செங்குங்குமம், போலும பொடியணி மார்பிலங்கு மென்று புண்ணியர் போற்றிசைப்ப" என்ற திருப்பல்லாண்டு இதனை விளக்கும். இத்திருப்பதிக முழுதும் வளரும் பவளநிறமும் (81) வரைய திண்டோளும் (4) இருநிலனேற்ற சுவடும் (4) வலமேந்திரண்டு சுடரும் (5) மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந்திருங்குமிடறும் (7) முதலியனவாய் அவரது திருமேனியங்கங்களும்; திங்கட்