பக்கம் எண் :


226திருத்தொண்டர் புராணம்

 

ஆளுடைய பிள்ளையார் "தில்லைசூழ் நெடுமதிற் றென்றிரு வாயினே ரணித்தாக" வந்தனர் (திருஞான - புரா - 153) என்பதும் காண்க.

அணிகூறும் - மகிழ்வுறு - பொலிதரு - என்பனவும் பாடங்கள்.

161

1427.

அல்லற் பவமற வருளுந் தவமுத
         லடியா ரெதிர்கொள வவரோடும்
மல்லற் புனல்கமழ் மாடே வாயிலின்
         வழிபுக் கெதிர்தொழு தணைவுற்றார்,
கல்வித் துறைபல வருமா மறைமுதல்
         கரைகண் டுடையவர் கழல்பேணுஞ்
செல்வக் குடிநிறை நல்வைப் பிடைவளர்
         சிவமே நிலவிய திருவீதி.

162

(இ-ள்.) அல்லற் பவமற...எதிர்கொள - துன்பந் தருகின்ற பிறவியறும்படி உதவுகின்ற தவத்தையே தமக்கு முதலாகக் கொண்ட அடியவர்கள் தம்மை எதிர்கொள்ள; அவரோடும்.....வழிபுக்கு - அவர்களுடன் கூடிச்சென்று (அவர்) செழுமையாகிய நீர்மணம் வீசும் பக்கத்தில் உள்ள திருவாயிலின் வழியே புகுந்து; கல்வித் துறை.....கரைகண்டு - பெரிய வேதங்கள் முதலாகிய பல கல்வித் துறைகளையும் கரை கண்டவர்களாய்; உடையவர்...திருவீதி - யாவரையும் அடிமையாக உடையவராகிய கூத்தப் பெருமானது திருவடிகளைப் பேணுகின்ற செல்வக் குடிகளாகிய தில்லைவா ழந்தணர்கள் நிறைந்த நல்ல மாளிகைகள் இடையே வளர்கின்ற சிவத்தன்மையே நிலவிய திருவீதியினை; எதிர்தொழுது அணைவுற்றார் - எதிரிற்கண்டு தொழுது சேர்ந்தனர்.

(வி-ரை.) முன்பாட்டிற் கூறியபடி வந்துற்றாராகிய அவர் என்ற எழுவாய் வருவிக்க. (அவர்) அடியார் எதிர்கொள - வழிபுக்கு - திருவீதி - எதிர்தொழுது - அணைவுற்றார் என்று கூட்டி முடிக்க.

அல்லல் பவம் அற அருளும் தவம் - சிவபூசை. பவம் - பிறவி. அல்லற்பவம் - இன்பம் போலக் காட்டித் துன்பமே தருவது இப்பிறவி என்பது அறிஞர் துணிபு. ஆனால் அதனைப்போக்கி இன்பம் தருவதாகச் செய்வது சிவபூசை என்பதாம். "தவமே புரிந்திலன் றண்மல ரிட்டுமுட் டாதிறைஞ்சேன்.....திருவடிக்காம், பவமேயருளு கண்டாய்" - திருவாசகம்.

தவம் முதல் அடியார் - தவத்தையே தமக்கு முதலாகக் கொண்டவர்கள். முதல் - மூலதனம். தபோதனர் என்பது காண்க. "கழல் ஏத்தும் செல்வம்" முதல் - முதன்மையாக என்று கொள்ளலுமாம். அருளும் முதல் என்று கூட்டித் தம்மை அடைந்தார்களது பிறவியறும்படி அருள்செய்யும் அடியாராகிய திருநாவுக்கரசு நாயனார் என்றுரைத்து, அணைவுற்றார் என்பதற்கு எழுவாயாக்கி உரைப்பாருமுண்டு. இப்பொருளில் முதல் என்றது முதன்மையானவர் என்ற பொருள் தரும் என்பர். தவமுதல் - தவத்தினால் முதன்மை பெற்றவர். "தவமுதல்வர் சம்பந்தர்" என்புழிப்போல என்பர்.

மாமறை முதல் பல கல்வித்துறை வரு கரை கண்டு என்க. பல கல்வித் துறையும் - என முற்றும்மை தொக்கது. வரு - பெறப்படும். துறை - என்றதற் கேற்பக் கரைகண்டு என்றார். குறிப்புருவகம். கரை கண்டு என்பது "கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும்" (திருவாசகம்) என்றபடி கலைஞானங்கள் முற்றும் கைவரப் பெற்று அவற்றின் முடிபும் தேறி, அவையே பொருள்என்று அவற்றுள்ளே