பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்321

 

1471.

தீயவிடந் தலைக்கொள்ளத் தெருமந்து செழுங்குருத்தைத்
தாயர்கரத் தினினீட்டித் தளர்ந்துதனைத் தழனாக
மேயபடி யுரைசெய்யான் விழக்கண்டு "கெட்டொழிந்தேந்;
தூயவரிங் கமுதுசெயத் தொடங்கா" ரென் றது வொளித்தார்,

206

1472.

தம்புதல்வன் சவமறைத்துத் தடுமாற்ற மிலராகி,
யெம்பெருமா! னமுதுசெய வேண்டுமென வந்திறைஞ்ச,
வும்பர்பிரான் றிருத்தொண்ட ருள்ளத்திற் றடுமாற்ற
நம்பர்திரு வருளாலே யறிந்தருளி நவைதீர்ப்பார்,

207

1473.

 அன்றவர்கண் மறைத்தனுக் களவிறந்த கருணையராய்க்
 கொன்றைநறுஞ் சடையார்தங் கோயிலின்முன் கொணர்வித்தே,
"யொன்றுகொலா" மெனப்பதிக மெடுத்துடையான் சீர்பாட்ப்
 பின்றைவிடம் போய்நீங்கிப் பிள்ளையுணர்ந் தெழுந்திருந்தான்.

208

1471. (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு ஒல்லை வந்தணைந்த அம்மகன் தீயவிடம் தனது தலைக்கேற, மயங்கிச், செழுங்குருத்தைத் தன் தாயாருடைய கையினில் நீட்டித், தளர்ச்சியடைந்து, தன்னைத் தீப்போன்ற நாகம் தீண்டிய செய்தியைச் சொல்லாதவனாய்க், கீழே, விழ அதனைத் தாயாரும் தந்தையும் கண்டு "கெட்டொழிந்தோம்! புனிதராகிய ஆண்ட அரசுகள் இதனால் இங்கு அமுது செய்யத் தொடங்காரன்றே!" என்று உட்கொண்டு விடந்தீண்டிய அச்செய்தியை மறைத்தனராய்;

206

1472. (இ-ள்.) வெளிப்படை. தமது புதல்வனுடைய சவத்தை மறைத்து, அதனால், எவ்வித மனத் தடுமாற்றமும இல்லாதவர்களாகி, முன்னே நாயனாரிடம் வந்து, "எமது பெருமானே! அமுது செய்தருள வேண்டும்" என்று வணங்கிச் சொல்லி நிற்கத், தேவதேவராகிய சிவபெருமானது திருத்தொண்டராம் நாயனாரும் தமது செவ்விதாகிய திருவுள்ளத்தில் நம்பரது திருவருளால் ஒரு தடுமாற்றம் உண்டாக, அதனை அறிந்தருளித் துன்பத்தை நீக்குவாராய்;

207

1473. (இ-ள்.) வெளிப்படை. அன்று அவர்கள் இவ்வாறு புதல்வனது சவத்தை மறைத்த அன்பின்றிறத்துக்கு அளவற்ற கருணைகூர்ந்தவராய், அந்தச் சவத்தினைக் கொன்றைசூடிய வாசனையுடைய சடையாரது திருக்கோயிலின் முன்பு கொண்டுவரச் செய்து, "ஒன்று கொலாம்" என்று தொடங்கிய திருப்பதிகத்தினால் ஆளுடைய பெருமானது சீர்களைப்பாடப், பின்வந்து தங்கியவிடம் போய் நீங்கவே, பிள்ளை துயிலுணர்ந்தவன்போன்று எழுந்திருந்தான்.

208

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1471. (வி-ரை.) விடந் தலைக்கொள்ளுதல் - விடத்தின் ஏழாம் வேகம் தலையின் ஏறி மூளையுடன் பொருந்தி ஏழு தாதுக்களையும் ஊடுருவிக் கெடுத்தல்.

தெருமருதல் - நஞ்சினால் மயக்கமுற்றுச் சுழலுதல்

தழல் நாகம் - நஞ்சினை உகுத்துத் தழல்போல எரித்து அழிக்கவல்ல நாகம். நாகம் - ஈண்டுப் பாம்பின் ஒரு சாதிக் குறிப்புமாம். முன்பாட்டிலும் நாகம் என்றது காண்க.

மேயபடி - மேவிய - தீண்டிய - படியினை. இரண்டனுருபு தொக்கது.

உரை செய்யான் (விழக்கண்டு) - உரை செய்யாமல். இஃது அம்மகனது அன்பின் உறைப்பினை உணர்த்துதல் காண்க. இவ்வாறு துணிந்தே செய்தனன் என்பது அப்பூதியார் புராணத்துட் காண்க. உரை செய்து என்ற பாடம் தவறு.

கெட்டு ஒழிந்தோம்! - மனம் அவலமடைந்தமை காட்டும் அவலச் சொல்.