பக்கம் எண் :

144தணிகைப் புராணம்

கொண்டு மாறுபாடில்லாத முப்பத்திருவகைத் தருமங்களையும் வளர்த்தாளென்கிற குற்றமானது நீங்க (மக்கள்) விரும்பின பெரிய செல்வங்களெல்லாவற்றையும் சிறந்த மலைகளுக்குத் தலைவனாகிய முருகப்பெருமான் கொடுக்க வள்ளியம்மையாருந் தெய்வயானையாரும் வளர்க்க நிலைபெற்று நிற்பனபோலப் பல அறச்சாலைகள் நாடோறு மிடங்கடோறுந் தழைவுற்று நிற்கும்.

(வி - ம்.) தம் என்றது ஈண்டு வள்ளியம்மையார் தெய்வயானையாரை. அருள் - இறைவனளித்த. வரைக்கிழவன் - குறிஞ்சிநிலத்தலைவனாகிய முருகக்கடவுள், தணிகைக்கிறைவ னெனினுமாம்.

(109)

 பெருநிதி முகப்பத் தானமாக் கொடுக்கும்
           பெற்றியர் வாக்குநீர்த் தாரை
 இருகர தலத்தும் பிழைத்துவீழ் மணியு
           மிரணியக் குப்பையும் வரன்றிப்
 பொருதிரை சுருட்டி யொழுகுத லானும்
           போகுமா ளிகைநிரை கரைபோல்
 மருவுத லானுங் குலநதி நதம்போல்
           வயங்குவ பற்பல்வீ திகளும்.

(இ - ள்.) பெரிய செல்வங்களை முகந்துகொள்ளும் வண்ணம் மந்திர பூர்வகமாகக் கொடுக்கின்ற தன்மையை யுடையார் கொட்டுகின்ற நீரொழுங்கானது இருகரங்களினின்றும் பிழைத்து வீழ்கின்ற இரத்தினங்களையும். பொற்குவியலையும் வாரிக்கொண்டு மோதுகின்ற அலையை மடக்கி வீசிச்செல்லும் தன்மையாலும் உயர்ந்த மாடவரிசைகள் கரையைப்போலப் பொருந்துதலினாலும் பற்பல வீதிகளும் நதியைப்போலவும் நதத்தைப்போலவும் விளங்கும்.

(வி - ம்.) தாரை - எழுவாய். பிழைத்து - தப்பி. இரணியம் - பொன். போகு - உயர்ந்த. நதி - மேற்றிசையினின்று கீட்டிசைக்கட் செல்வது. நதம் - கீட்டிசையினின்று மேற்றிசைக்கட் செல்வது.

(110)

 மணிமலர்ப் பட்டின் விசித்திரம் பிறங்க
           மல்லல்வீ திகடொறு மமைத்த
 தணிவில்பூம் பந்த ராற்றினைக் கடப்பச்
           சமைத்தவான் சிலைவழி போலும்
 அணிதரு மகர தோரண மணித்தோ
           ரணங்களாங் காங்குநீண் டவிர்தல்
 துணிவுறு தகையோ ரியங்குதற் கமைத்த
           தொடர்படு கொடிவழி போலும்.

(இ - ள்.) அழகிய பூத்தொழிலமைந்த பட்டினால் விம்மிதம் விளங்க வளம்பொருந்திய வீதிகடோறும் செய்யப்பெற்ற உயர்ந்த