பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்91

 இனையவாறுபல் வளங்களும் விராவிய
           விடங்களு ளுவராதி
 புனையுமாழிதன் னிழிவறிந் தகற்சியிற்
           போற்றிநின் றிடக்கானும்
 வனைக லாப்புகழ்ப் பழனமு மருங்குற
           வள்ளிநா யகற்றாங்கி
 வினையெ லாந்தபும் விலங்கல்வீற் றிருப்பது
           தணிகையந் தலமாதோ.

(இ - ள்.) இவ்வாறு பல வளங்களும் கலந்த இடங்களுள் வைத்து, உப்பு புலால் நாற்ற முதலியவற்றைத் தன்னிடத்துக் கொண்ட கடலானது தன்னிழிவைத் தானே யறிந்து சேய்மைக் கண்ணே நின்று துதியாநிற்ப, முல்லை நிலமும், ஒருவராலும் அலங்கரித்துக் கூறற்கியலாத புகழோடு கூடிய மருத நிலமும் தனதண்மையிற் பொருந்த வள்ளி நாயகிக்குத் தலைவராகிய முருகக் கடவுளைத் தாங்கி (மக்கள் பிறப்பிறப் புக்களிற் சுழலுதற் கேதுவாகிய) நல்வினை தீவினையாகிய வினைகளை யெல்லாம் நீக்கும் மலையானது, தணிகையாகிய தலத்தின்கண் வேறொன்றற் கில்லாத சிறப்புட னிருப்பது.

(வி - ம்.) அகற்சி - தூரம். ஆதியென்றதனாற் புலால் நாற்றம் முதலியனவும் கொள்க. வனைகலாப்புகழ் - ஒருவராலும் அலங்கரித்துக் கூறமுடியாத கீர்த்தி. பழனம் - மருத நிலம். தபும் - நீக்கும். தலத்தின் கண் என ஏழாவது விரிக்க. விலங்கல் வீற்றிருப்பது என வினை முடிவு செய்க.

(170)

திருநாட்டுப் படலம் முற்றிற்று.

 ஆகச் செய்யுள் - 186