பக்கம் எண் :

120ஆத்மாநாம் படைப்புகள்

கேள்விக்குறி

மழை பொழிய வேண்டுமென்று
எழுத்தில்
மழை பொழிய வேண்டுமென்று
மையைக் கொஞ்சம் நனையவிட்டேன்
வெளிர்ப் பச்சை நிறத்தில்
காகிதத்தில் பரவியது
வர்ணத்தில் மழை பொழிந்துகொண்டிருந்தது
ஒரு பகுதியில்
நீலத்தைத் தெளித்தேன்
இன்னொரு புறத்தில் கறுப்பை உதறினேன்
மற்றும் ஓர் புறத்தில் சிகப்பை
வண்ண வண்ணமாய்
மழை பொழிந்துகொண்டிருந்தது
அப்பொழுது
ஒரு பொருள்
குறுக்கே வந்தது
மழை அப்பொருளின் வண்ணமாயிற்று
மாறிவரும் மழையின் முதல் வண்ணம்
என்ன என்று
ஒரு கணம் நிதானித்தேன்
வர்ணமற்று
மழை பொழிந்துகொண்டிருந்தது
வர்ணங்களற்ற அம்மழை
குளிர்ச்சியாய் இருந்தது
தொடர்ந்து அம்மழை
மனத்தில் பெய்துகொண்டேயிருந்தது
வெளியே
வண்ண வண்ணமாய் மழை
ஒவ்வொரு கணமும் நிதானித்துக்கொண்டிருந்தேன்
உள்ளும் புறமும் அற்ற ஒரு பொருள்
உருவாக்கம் கொண்டது