பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்129

எழுப்பப்பட்ட சப்தம்

சப்தம் எழுந்துவிட்டது
கடலிலிருந்து
வண்டிலிருந்து
அக்கடா என்று கூறு போடப்பட்ட
வயல்களிலிருந்து
ஓவியத்திலிருந்து
இறுதியாக
ஒரு சொல்லிலிருந்து
அமைதி குலையத் தொடங்கிற்று
சப்தத்தின் பிடிப்பிலிருந்து
ஓடி ஒளியத்துவங்கிற்று
அமைதியைக் காண இயலா சப்தம்
பெரும் கூச்சலுடன் ஓய்ந்தது
நிசப்தம் உருவாயிற்று
எங்கும் ஒரே நிசப்தம்
நிசப்தத்தைக் கண்டு அஞ்சிய உலகம்
சப்தம் போட ஆரம்பித்தது
மாறி மாறி
சப்தமும் நிசப்தமும்
ஆட்சி புரியத் தொடங்கிற்று
சிறிது காலத்தில்
சப்தமும் நிசப்தமும்
ஒன்றாயிருக்கப் பழகிவிட்டன
இணைபிரியா ஒன்றாகிவிட்டன
சப்த நீட்சியின் ஓரத்தில்
அமைதி
பேரமைதிக்கான
தவத்தைத்
துவங்கிற்று