பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்65

இப்பொழுதெல்லாம்

நன்றாகத்தான் இருக்கிறது
மெத்தென்ற புல்தரை
சில பறவைகள்
மீண்டும் மீண்டும்
எனைத் தேடி வருகின்றன
ஒரு மாற்றத்திற்காய்
நானோ
அவற்றின் வண்ணத்திலும்
சிறகடுக்குகளின் அழகிலும்
அமிழ்ந்து போகிறேன்
கண் விழிக்கையில்
நான் மட்டுமே இருக்கிறேன்
இப்பொழுதெல்லாம்
பறவைகளைத் தேடுகிறேன்
ஒரு மாற்றத்திற்காய்