செற்றம் நீக்கிய மனத்தினர்; யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்; காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை யாவதும் அறியா இயல்பினர்; மேவரத் துனியில் காட்சி முனிவர்" (126-137) இவ்வடிகள் முனிவர்களை நம் முன்னே நிறுத்திக் காட்டுகின்றன. அந்தணரும் வேள்வியும் கடைச்சங்க காலத்திற்குப் பன்னூறாண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டில் அந்தணர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வேதம் கற்றவர்கள்; வேள்விகளும் செய்தனர். வடமொழி வேதக் கொள்கைகள் தமிழ் நாட்டிலே பரவியிருந்தன. வடவர் - தமிழர் என்ற வேறுபாடு காணப்படவில்லை. தமிழர் நாகரிகம் - வடவர் நாகரிகம் என்ற வேற்றுமையின்றி இரண்டும் ஒன்றாகக் கலந்துவிட்டன. "ஒருமுகம், மந்திரத்தையுடைய வேதத்தில் விளம்பும் முறை தவறாதபடி அந்தணர்கள் செய்யும் வேள்வியை நினைத்துக் கொண்டிருக்கும். ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும் மே" (94--96) இதனால், தமிழ்நாட்டிலே அந்தணர்கள் வேத முறைப்படி வேள்விகளைச் செய்து வந்தனர் என்பதைக் காணலாம். |