108கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 398 ஆம் செய்யுள்
முன்னிகழ்வுரைத் துடறீர்த்தல்

     அஃதாவது: தலைவன் பரத்தமை ஒழுக்கம் காரனமாகப் பள்ளியின்கண் தலைவி ஊடி முகங்கொடாளாக அவளுடைய ஊடல் தீர்க்கக் கருதிய தலைவன் பண்டு நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியை அவளுக்குக் கூறுவானாய் அவள் விரும்பிக் கேட்குமாறு கூறி அவ்வூடலைத் தீர்த்தல் என்றவாறு. அதற்குச் செய்யுள்-

ஆறூர் சடைமுடி அம்பலத்
     தண்டரண் டம்பெறினும்
மாறூர் மழவிடை யாய்கண்
     டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடுநெறி சென்றிச்
     செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளிற்றங்கு
     கங்குற் சிறுதுயிலே.

முன்னி கழ்ந்தது நன்னுதற் குரைத்து மன்னு புனலூ ரன்மகிழ் வுற்றது.

     (இ-ள்) ஊர்மழ விடையாய்-தவழாநின்ற இளைய காளையினை உடைய நங்காய்; ஆறு ஊர் சடைமுடி அம்பலத்து அண்டர் அண்டம் பெறினும்-ஆறு பரந்த சடைமுடியையுடைய அம்பலவாணராகிய தேவர் படைத்தருளிய உலகம் முழுவதையும் யாம் பெற்றாலும்; வண்கதிர் வெதுப்பு நீறு ஊர் கொடுநெறி சென்று-ஞாயிற்றினுடைய வளவிய கதிர்கள் வெதுப்பிய நீறு பரந்த கொடிய வழியைச் சென்று; இச்செறி மெல்முலைகள் நெருங்க-இந்த நெருங்கிய மெல்லிய நின்னுடைய முலைகள் எம்முடைய மார்பினிடை வந்துபொருந்த; சீறூர் மரை அதளின் தங்கு கங்குல் சிறுதுயில் மாறுகண்டிலம்-நெறியாற் சிறிய ஊரின்கண் பண்டு யாம் இருவரும் கானவர் குடிலின்கண் மரையினது தோலாகிய படுக்கையிலே தங்கிய இரவின்கண் கொண்ட சிறிய துயிலுக்கு ஒப்பாதல் கண்டிலேம் அல்லமோ அந்நிகழ்ச்சியை நீ நினைந்து மகிழ்ந்ததுண்டோ என்க.

     (வி-ம்.) ஆறு-கங்கை. அம்பலத்தண்டர்-அம்பலவாணராகிய இறைவர். அண்டம்-உலகு. அவர்படைத்த உலகங்கள் முழுதும் என்க. இனி அம்பலத்தண்டர் அண்டம் சிவலோகம் எனினுமாம். இக்கருத்தோடு,

“தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொ
 றாமரைக் கண்ணா னுலகு”
(திருக். 1103)