164கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 47 ஆம் செய்யுள்
பிறைதொழு கென்றால்

     அஃதாவது: தலைவியின் வேறுபாடு கண்டு ஆராயுந்தோழி மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது ஆராயுங்கால் மேற்றிசையில் பிறை தோன்றிற்றாக. அதனைத்தான் தொழுது நின்று இதனை நீயும் தொழுவாயாக! எனக் கூறித் தலைவியினது மனநிலை அறியா நிற்றல். அதற்குச் செய்யுள்:

மைவார் கருங்கண்ணி செங்கரங்
     கூப்பு மறைந்துமற்றப்
பொய்வா னவரிற் புகாதுதன்
     பொற்கழற் கேயடியேன்
உய்வான் புகவொளிர் தில்லைநின்
     றோன்சடை மேலதொத்துச்
செவ்வா னடைந்த பசுங்கதிர்
     வெள்ளைச் சிறுபிழைக்கே.

பிறைதொழு கென்று பேதை மாதரை நறுநுதற் பாங்கி நாண நாடியது.

     (இ-ள்) மறந்தும் பொய் அவ்வானவரில் புகாது-மறந்து பொய்ம்மையையுடைய அந்தத் தேவர்களிடத்தே செல்லாமல்; தன் பொன்கழற்கே அடியேன் உய்வான்புக-தன்னுடைய பொன்னானியன்ற கழலையுடைய திருவடிகளிலே அடியேன் உய்தற்பொருட்டுத் தஞ்சம்புகா நிற்ப; ஒளிர் தில்லை நின்றோன் சடைமேலது ஒத்து-விளங்கும் திருத்தில்லைச் சிற்றம்பலத்தின்கண் அடியேன் கண்ணாற் காணூம்படி நின்ற இறைவனுடைய சடையின்கண்ணதாகிய பிறையை ஒத்து; செவ்வான் அடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறு பிறைக்கு-செக்கர் வானை அடைந்த புதிய ஒளியையுடைய வெள்ளையாகிய சிறிய பிறைக்கு; மைவார் கருங்கண்ணி-மையையுடைய நெடிய கரிய கண்ணினையுடையோய்; செங்கரம் கூப்பு-நின்னுடைய சிவந்த கைகளைக் கூப்பித் தொழுவாயாக என்க.

     (வி-ம்.) கருங்கண்ணி செங்கரம் என்புழிச் செய்யுளின்பமுணர்க. மறந்தும் என்றது ஈண்டு அறியாதும் என்னும் பொருட்டாய் நின்றது. மற்று: அசைநிலை. மற்றை என்பதும் பாடம். இதற்கு அவனல்லாத பொய்வானவர் என்று கொள்க. இனம் அல்லராயினும் இனமாக உலகத்தாராற் கூறப்படுதலின் அவ்வாறு கூறினார். வானவர்-ஈண்டுத் திருமால் முதலியோர் ‘மூவரென்றே எம்பிரானொடும் எண்ணி’ என்பதூஉம் அக்கருத்தே பற்றி வந்தது. பிறர் கூறும்