திருக்கோவையார் 52 ஆம் செய்யுள்
வேழம்வினாதல்
அஃதாவது:
இரந்து பின்னிற்றலைத் துணிந்த தலைவன் தோழிக்குத் தன்குறையைக் கூறக்கருதி இவளுக்கு
வெளிப்படக் கூறுவேனாயின் இவள் மறுக்கவும் கூடுமென உட்கொண்டு என்குறை இன்னதென்று இவள்
தானே உணருமளவும் கரந்தமொழியால் சில சொல்லிப் பின் குறையுறுவதே காரியம் எனக்கருதி
வேட்டைமேற் செல்வான்போலத் தலைவியும் தோழியும் வதியும் இடத்தே சென்று நின்று
தன் காதல் தோன்ற அவரை நோக்கி இங்கு ஒரு மதயானை வரக்கண்டீரோ என்று வினவியது
என்பதாம். அதற்குச் செய்யுள்:
இருங்களி யாயின்
றியானிறு
மாப்பவின் பம்பணிவோர்
மருங்களி யாவன லாடவல்
லோன்றில்லை யான்மலையீங்
கொருங்களி யார்ப்ப வுமிழ்மும்
மதத்திரு கோட்டொருநீள்
கருங்களி யார்மத யானையுண்
டோவரக் கண்டதுவே.
|
ஏழைய ரிருவரு மிருந்த செவ்வியுள் வேழம் வினாஅய் வெற்பன் சென்றது.
(இ-ள்)
பணிவோர் மருங்கு இரும் களியாய் யான் இன்று இறுமாப்ப இன்பம் அளியா அனல் ஆட வல்லோன்-அடியவரிடத்தே
அவரோடு கூடிப் பெரிய மகிழ்ச்சியையுடையேனாய் யான் இன்று இறுமாக்கும் வண்ணம் இன்பத்தை
எனக்கு வழங்கித் தீயினை ஏந்திக் கூத்தாடுதலில் வல்லவனாகிய; தில்லையன்-இத்திருத்தில்லையையுடைய
கூத்தப்பெருமானுடைய; மலைஈங்கு அளி ஒருங்கு ஆர்ப்ப-மலையின்கண் இவ்விடத்தே வண்டுகள்
ஒருங்கே ஆரவாரிக்கும்படி; உமிழ் மும்மதத்து இருகோட்டு நீள் கரும் களி ஆர் ஒரு மதயானை
வரக்கண்டது உண்டோ-உமிழப்படா நின்ற மூன்று மதத்தையும் இரண்டு கோட்டையும் உடைய
நீண்ட கரிய களிப்பமைந்த ஒரு மதயானை வரா நிற்றலை நீயிர் கண்டதுண்டோ உண்டாயின்
கூறுமின்! என்பதாம்.
(வி-ம்.)
மெய்யடியாரோடு கூடிமகிழும் இன்பம் வீட்டின்பமே போறலின் பணிவோர் மருங்கு இருங்களியாய்
யான் இறுமாப்ப என்றான். அங்ஙனம் இறுமாப்பவும் அவன் அருளே கூட்டவேண்டுதலின் இறுமாப்ப
அளியா ஆடவல்லோன் என்றான். பணி
|