மூலமும் உரையும்307



திருக்கோவையார் 188 ஆம் செய்யுள்
பொழுதுகண்டுமயங்கல்.

     அஃதாவது: தலைவன் ஒருவழித்தணந்த காலத்தே ஞாயிறு மறையாநிற்ப, பிறிவாற்றாமையால் வருந்துகின்ற தலைவி அத்துன்பத்தை மிகுவிக்கும் மாலைப்பொழுதின் வரவு கண்டு மயங்குதல் என்பதாம். அதற்குச் செய்யுள்:

பகலோன் கரந்தனன் காப்பவர்
     சேயர்பற் றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
     யொனெவ ரும்புகலத்
தகலோன் பயிறில்லைப் பைம்பொழிற்
     சேக்கைக ணோக்கினவால்
அகலோங் கிருங்கழி வாய்க்கொழு
     மீனுண்ட வன்னங்களே.

மயல்தரு மாலை வருவது கண்டு கயல்தரு கண்ணி கவலை யுற்றது.

     (இ-ள்) பகலோன் கரண்டனன்-கதிரவன் மேலைக்கடலில் மறைந்தான்; காப்பவர் சேயர்-இம்மாலைக்காலத்தே வரும் துன்பத்தை வராமற்செய்து என்னைப் பாதுகாக்கும் எம்பெருமானும் தொலைவிடத்தே உறைவாராயினர்; அகல் ஓங்கு இருங்கழிவாய்க் கொழுமீன் உண்ட அன்னங்கள்-அதுவேயுமன்றி அகன்று பெருகும் பெரிய இக்கழியினிடத்தே இதுகாறும் கொழுவிய மீன்களைப்பற்றித் தின்ற அன்னப்பறவைகள் தாமும்; பற்று அற்றவர்க்குப் புகலோன்-புலன்களிற் பற்றற்ற மெய்யடியார்க்குப் புகலிடமாவோனும்; புகுநர்க்குப் போக்கு அரியோன்-தன் அருள் நீழலில் வந்துபுகும் அடியவர்க்குப் பின் பிரிந்துபோதற்கு அரியவனும்; எவரும் புகலத்தகலோன்-எத்தகையோரும் ஏற்றித் தொழத்தகுந்த தகுதியையுடையவனும் ஆகிய இறைவன்; பயில்தில்லை பைம்பொழில் சேக்கைகள் நோக்கின-திருக்கூத்தியற்றுகின்ற தில்லைநகரத்தின்கண் உள்ள பசிய சோலையின்கண் அமைந்துள்ள தத்தம் கூடுகளை நோக்கிச் செல்லா நின்றன, அந்தோ! இனி யான் என்செய்குவேன் என்பதாம்.

     (வி-ம்.) இனி யான் என்செய்வேன் என்பது குறிப்பெச்சம். இவ்வன்னங்களை நோக்கியேனும் இதுகாறும் யான் ஆற்றியிருந்தேன்; இனி என்செய்தாற்றுவேன் என்பாள் அன்னங்கள் சோலைநோக்கின என்று ஏங்கினாள்.