திருக்கோவையார் 242 ஆம் செய்யுள்:
விரதியரை வினாவல்
அஃதாவது:
மகட்போக்கிய செவிலித்தாய் அவளைத் தேடிப் பாலை நிலத்திலே அடியொற்றிச் செல்பவள்
அப்பாலை நிலத்தின்கண் தன்னெதிரே வருகின்ற தாபதரை நோக்கி என் மகளொருத்தியும்
பிறன் மகனொருவனும் நும்மெதிரே செல்லக் கண்டீரோ என்று வினவாநிற்றல். என்றவாறு;
அதற்குச் செய்யுள்:-
சுத்திய பொக்கணத்
தென்பணி
கட்டங்கஞ் சூழ்சடைவெண்
பொத்திய கோலத்தி னீர்புலி
யூரம் பலவர்க்குற்ற
பத்தியர் போலப் பணைத்திறு
மாந்த பயோதரத்தோர்
பித்திதற் பின்வர முன்வரு
மோவோர் பெருந்தகையே.
|
வழிவரு கின்ற மாவிர தியரை மொழிமின்க ளென்று முன்னி மொழிந்தது.
(இ-ள்)
சுத்திய பொக்கணத்து-சுத்தியை யுடைத்தாகிய பொக்கணத்தையும்; என்பு அணி-எலும்பாகிய
அணிகலனையும்; கட்டங்கம்-கடங்கமென்னும் மழுப்படை யினையும்; சூழ்சடை-சுற்றிய சடையினையும்;
பொத்திய வெண்கோலத்தினீர்-உடல் முழுதும் மூடிய வெள்ளிய கோலத்தையுமுடையீர்; புலியூர்
அம்பலவர்க்கு உற்ற பத்தியர் போல-புலியூர்க்கணுண்டாகிய அம்பலவாணர்பால் மிக்க
அன்புடையாரைப் போல; பணைத்து இறுமாந்த பயோதரத்து ஓர் பித்தி-பூரித்துச் செம்மாந்த
முலைகளையுடையாளொரு பேதை; தன்பின் வர ஓர் பெருந்தகை முன் வருமோ-தனக்குப் பின்னே
வாரா நிற்ப ஒரு பெருந்தகைமையையுடைய நம்பி நுங்கள் முன்னே சென்றனனோ கூறுமின்! என்பதாம்.
(வி-ம்.)
சுத்தி-பிறர்க்குத் திருநீறு கொடுத்தற்கு இப்பி வடிவாகத் தலையோட்டல் அமைக்கப்படும்
ஒரு கருவி. பொக்கணம்-சிறுபொதி. இதனை இக்காலத்தார் பொட்டணம் எனவும் பொட்டலம்
எனவும் வழங்குவர். எற்பணி என நிற்றல் வேண்டிய புணர்ச்சி என்பணி என இயல்பாய் நின்றது.
கடங்கம்-கட்டங்கம் எனத் திரிந்து நின்றது. கடங்கம்-மழு. பொத்திய வெண்கோலத்தினீர்
என மாறுக. என்றது திருநீறு சண்ணித்த கோலமுடையீர் என்றவாறு. பணைத்தல்-ஈண்டு பூரித்தல்
என்பதுபட நின்றது. இறுமாத்தல்-யாரோ எமக்கீடெனச் செம்மாந்திருத்தல். சிவனடியார்
இங்ஙனம் செம்மாந்திருப்பர் என்பதனை,
|