திருக்கோவையார் 270 ஆம் செய்யுள்
சொல்லாதேகல்
அஃதாவது:
வரைபொருட்குப் பிரியக் கருதிய தலைவன் இப்பிரிவினைத் தலைவிக்குக் கூறின் அவள்
உடன்படாள். ஆதலின் யான் அவட்கறிவியாமலே பிரிந்து சென்று விரைந்து மீண்டு வருவேன்.
அதுகாறும் நீ அவளை ஆற்றுவித்துக்கொண்டு இருப்பாயாக வென்று தொழிக்குக் கூறித் தலைமகளுக்குச்
சொல்லாது பிரியா நிற்றல். அதற்கச் செய்யுள்:-
வருட்டிற் றிகைக்கும் வசிக்கிற்
றுளங்கு மனமகிழ்ந்து
தெருட்டிற் றெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே.
|
"நிரைவளை வாட உரையா தகன்றது"
(இ-ள்)
வருட்டின் திகைக்கும் - தோழீ கேள்! யான் தலைவியின் நுதலையும் தோளையும் கையாற்
றைவந்து ஒன்று சொல்லக் குறிப்பேனாயின் இஃதென்கருதிச் செய்கின்றானென்று மயங்கா
நிற்கும்; வசிக்கின் துளங்கும் - இனி இன்சொல்லாலே அவளை வயப்படுத்தி ஒன்று சொல்லத்
தொடங்குவேனாயின், அக் குறிப்பறிந்து நெஞ்சம் நடுங்காநிற்பாள்; தெருட்டின் மனமகிழ்ந்து
தெளியலள் - இனி வெளிப்படப் பிரிவுணர்த்திப் பொருளீட்டிக் கடிதின் வருவேன் என்று
சூளுற்றுத் தெளிவிப் பேனாயின் அவள் மனமகிழ்ந்து அதனைத் தெளிவாளுமல்லள்; செப்பும்
வகைஇல்லை - இங்ஙனமிருத்தலால் அவட்கு அறிவித்தற்குரிய வழி வேறு இல்லை, அதனால்;
சீர் அருக்கன் குருட்டிற் புகச்செற்ற கோன் புலியூர் - பெருமையுடைய கதிரவன் குருடாகிய
இழிபிறப்பிற் புகும்படி அவனை வெகுண்ட இறைவனுடைய புலியூரை; குறுகார் மனம்போன்று - அன்பால்
அடையாதாருடைய நெஞ்சம் போன்று; இருட்டின் புரிகுழலாட்கு எங்ஙன் சொல்லி ஏகுவன் -
இருட்டு தலையுடைய புரிந்த கூந்தலையுடைய அவட்கு என் பிரிவை எவ்வாறு சொல்லிப் போவேன்
ஒருவாற்றானுமரிது என்பதாம்.
|