திருக்கோவையார் 3 ஆம் செய்யுள்
தெளிதல்
அஃதாவது;
ஊழ்வினை கூட்டத் தலைவியைத் தலைவன் ஒரு பூம்பொழிலிற் றலைப்பட்டுக் கண்டுழி இவள்
மானிடமகளோ தெய்வமகளோ என ஐயுற்றவன் பின்னர் அவள் கண்இமைத்தலையும் கால் நிலந்தோய்ந்திருத்தலையும்,
கண்ணுற்று இவள் தெய்வமகள் அல்லள் மானிடமகளே எனத் தெளிந்து தன்னுட் கூறியது என்பதாம்.
அதற்குச் செய்யுள் :-
பாயும் விடையரன் றில்லையன்
னாள்படைக் கண்ணிமைக்குந்
தோயு நிலத்தடி தூமலர்
வாடுந் துயரமெய்தி
யாயு மனனே யணங்கல்ல
ளம்மா முலைசுமந்து
தேயு மருங்குற் பெரும்பணைத்
தோளிச் சிறுநுதலே.
|
"அணங்கல்லளென் றயில்வேலவன் குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது"
(இ-ள்)
பாயும் விடை அரன் தில்லை அன்னாள் - பாய்ந்தோடுங் காளையூர் தியையுடைய சிவபெருமானுடைய
திருத்திலையைப் போன்று எல்லா நலங்களுமுடைய இவளுடைய; படைகண் இமைக்கும் - வாளும்
வேலும் அம்பும் ஆகிய படைக்கலங்களை யொத்த கண்கள் இமையா நின்றன!; அடிநிலத்துத்
தோயும்- இவளுடைய அடிகள் தாமும் நிலத்தின்கண் தோயா நின்றன; தூமலர் வாடும்- இவளணிந்துள்ள
மலர்கள் தாமும் வாடாநின்றன ஆதலின்; துயரம் எய்தி ஆயும் மனனே - துன்பமெய்தி இவள்
மானிடமகளோ தேவமகளோ என்று ஐயுற்று ஆராய்கின்ற என் நெஞ்சமே கேள்!; அம்மாமுலை
சுமந்து தேயும் மருங்குல் பணைபெருந்தோள் - அழகிய பெரிய வாகிய முலைகளைச் சுமந்து தேயாநின்ற
இடையினையும் மூங்கில் போலும் பெரிய தோள்களையுமுடைய; இச்சிறுநுதல் அணங்கு அல்லள்
- இந்தச் சிறிய நெற்றியினையுடையாள் தெய்வமகள் அல்லள் மானிடமகளே காண் என்பதாம்.
(வி-ம்.)
தில்லை காண்போர்க்குப் பேரின்பம் நல்குதலின் தலைவிக் குவமையாயிற்று. படை - வாள்
முதலியன, தேவர்களுக்குக் கண்ணிமைத்தலும் அடி நிலந்தோயலும் மலர்வாடலும் இன்மையினானும்,
இவள் கண்ணிமைத்தலாலும் அடி நிலந்தோய்தலாலும் மலர் வாடுத
|