மூலமும் உரையும்401



திருக்கோவையார் 312 ஆம் செய்யுள்
காவற்பிரிவறிவித்தல்

     அஃதாவது: நாடு காவற்பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லக் கருதியதனைக் குறிப்பாலுணர்ந்த தோழி அவன் கருத்தினைத் தலைவிக்குக் கூறியது என்பதாம். அதற்குச் செய்யுள்:-

மூப்பா னிளையவன் முன்னவன்
     பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்றில்லை யானரு
     ளால்விரி நீருலகங்
காப்பான் பிரியக் கருதுகின்
     றார்நமர் கார்க்கயற்கட்
பூப்பா னலமொளி ரும்புரி
     தாழ்குழற் பூங்கொடியே.

"இருநிலங் காவற் கேகுவர் நமரெனப் பொருசுடர் வேலோன் கோக்கறி வித்தது"

     (இ-ள்) கார்க்கயல் கண் பூப்பால் நலம் ஒளிரும் புரி தாழ்குழல் பூங்கொடி - கரிய கயல்மீன் போலும் கண்ணினையும் நறுமலரின் கண்ணுண்டான மணத்தின் நன்மை விளங்கும் சுருண்டு தாழ்ந்த கூந்தலையுமுடைய பூங்கொடியையொத்த பெருமாட்டியே கேள்; மூப்பான் - உலகினைப் படைத்தற்கு முன்னே தன் விருப்பப்படி மேற்கொண்ட அருள் திருமேனியையுடையனாதலின் எல்லோர்க்கும் இளையவனும்; முன்னவன்- உலகத்திற்கு முன்னுள்ளோனும்; பின்னவன் - உலகமெல்லாம் அழிந்தொழியும் ஊழிக்குப் பின்னும் இருப்பவனும்; முப்புரங்கள் வீப்பான் - மூன்று புரங்களையும் அழிப்பவனும்; வியன்தில்லையான் - அடியார் பொருட்டு அகன்ற தில்லைச் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய சிவபெருமானுடைய; அருளால்- திருவருளை முன்னிட்டு; நமர் விரி நீர்உலகம் காப்பான் - நபெருமான் வாழா நின்ற விரிந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்தைப் பாதுகாத்தற் பொருட்டு; பிரியக் கருதுகின்றார் - நம்மைப் பிரிந்துசெல்ல நினைக்கின்றார் என்பதாம்.

     (வி-ம்.) மூப்பானும், இளையவனும், முன்னவனும், பின்னவனும், வீப்பானும் ஆகிய தில்லையான் என்க. அவன் அருளால் பிரிதலாவது இறைவனால் அருளப்பட்ட அறநூல் விதிகருதிப் பிரிதல்.