திருக்கோவையார் 391 ஆம் செய்யுள்
புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்
அஃதாவது:
தலைவன் பரத்தை ஒருத்தியைப் பலருமறியப் புனலாட்டுவித்தனன். அச்செய்தியை யுணர்ந்த
தலைவி அத்தலைவன் இல்லிற்கு வந்துழி அச்செய்தியை அவனுக்கு எடுத்துக்கூறி ஊடுவாள் கூறியது
என்பதாம். அதற்குச் செய்யுள்:-
தெந்தார் நறுங்கொன்றைச்
சிற்றம்
பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கா
லயிற்படைக் கொற்றவரே.
|
"ஆங்கதனுக் கழுக்கமெய்தி வீங்கு மென்முலை விட்டுரைத்தது"
(இ-ள்)
கொந்து ஆர்தடம் தோள்விடம் கால்அயில் படைக் கொற்றவர்- தபூங்கொத்தாலியன்ற
மாலைநிறைந்த பெரிய தோளினையும் நஞ்சினைக் காலும் கூரிய படையினையுமுடைய கொற்றவர்;
பாவி எற்கு என் வளமனையின் நிற்குமாறு- தீவினையாட்டியேனாகிய என்பொருட்டு எனது வளவிய
மனையில் வந்து நிற்கும் முறைமை; செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம்பலவர் தில்லைநகர்
- சிவந்த மாலையாகிய நறிய கொன்றை மலரினையுடைய திருச்சிற்றம்பலவருடைய இத்தில்லை
நகரத்தின்கண்; ஓர் பந்துஆர் விரலியைப் பாய்புனல் ஆட்டி - பந்து பயின்ற விரலாள்
ஒருத்தியைப் பாயும் புனலாடலைச் செய்வித்து; வந்தார் பரிசும் அன்றாய் நிற்கும் ஆறுஎன்-வெளிப்படத்
தவறு செய்து வந்தார் சிலர் நிற்கும் முறையால் நில்லாது மனத்தவறு செய்யாதார் வந்து
நிற்குமாறு வந்து நின்றாராயின் அது பொறுத்தலரிது என்பதாம்.
(வி-ம்.)
கொந்து - கொத்து. விடங்கால் அயிற்படைக் கொற்றவர் என்றது இகழ்ச்சி. கொற்றவன்
- ஈண்டுத் தலைவன். மன் : ஒழியிசை. இனி கொற்றவர் விரலியைப் புனலாட்டி யெற்கு
வந்தார் பரிசுமன்றாய் நிற்கமாறு என் என இயைத்து அதற்கியையப் பொருள்கோடலுமாம்.
மெய்ப்பாடு - வெகுளி. பயன் - ஊடுதல்.
|