திருக்கோவையார் 214 ஆம் செய்யுள்:
வழிப்படுத்துரைத்தல்
அஃதாவது:
ஓம்படுத்துரைத்த தோழி, ஆயமுமன்னையும் பின்வராமல் இவ்விடத்தே நிறுத்தி இவ்வூரிடத்துள்ள
அலரையு மொரு வாற்றானீக்கி யானும் வந்து நுங்களைக் காண்பேனாக; நீயிருந் திருவொடுசென்று
நும்பதியிடைச் சேர்வீராமின்என இருவரையும் வழிப்படுத்துக் கூறாநிற்றல் என்றவாறு.
அதற்குச் செய்யுள்:-
ஈண்டொல்லை
யாயமு மௌவையு
நீங்கவிவ் வூர்க்கவ்வைதீர்த்
தாண்டொல்லை கண்டிடக் கூடுக
நும்மையெம் மைப்பிடித்தின்
றாண்டெல்லை தீரின்பந் தந்தவன்
சிற்றம் பலநிலவு
சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று
சேர்க திருத்தகவே.
|
"மதிநுதலியை வழிப்படுத்துப் பதிவயிற் பெயரும் பாங்கி பகர்ந்தது"
(இ-ள்)
எம்மைப் பிடித்து ஆண்டு . எம்மை வலிந்து பிடித்தாண்டு; இன்று எல்லைதீர் இன்பம் தந்தவன்
சிற்றம்பலம் நிலவு-இன்று எல்லையை நீங்கிய வின்பத்தைத் தந்தவனது சிற்றம்பலம்
நிலைபெற்ற; சேண்தில்லை மாநகர் வாய்-சேய்த்தாகிய தில்லையாகிய பெரிய நகரிடத்து;
திருத்தகச் சென்று சேர்க - நீவிர் பொலிவுதகச் சென்று சேர்வீராமின்; ஆயமும் ஒளவையும்
ஈண்டு நீங்க-ஆயமு மன்னையும் பின் வாராது இவ்விடத்தே நீங்க; இவ்வூர்க் கௌவை ஒல்லை
தீர்த்து- இவவூரின்கண் உண்டாகிய அலரை யொருவாற்றான் விரைய நீக்கி; ஆண்டு நும்மை
ஒல்லை கண்டிடக் கூடுக- யானாண்டு வந்து நும்மை விரையக் காணக்கூடுவதாக என்க.
(வி-ம்.)
ஒல்லை-விரைந்து. ஆயம் - தோழியர் கூட்டம். ஒளவை - அன்னைமார். கவ்வை - அலர்.
ஒல்லை - விரைவு. பிடித்து என்றது வலிந்து பிடித்து என்பதுபட நின்றது. எல்லைதீர் இன்பம்
- எல்லையற்ற பேரின்பம் திரு-அழகு. சேண்தில்லை என்பதற்கு, மதில் முதலாயினவற்றால்
உயர்ந்த தில்லை எனினும் அமையும் ஒல்லைக் கண்டிடல் எனல் வேண்டிய புணர்ச்சி விகாரவகையால்
வல்லெழுத்துப் பெறாது நின்றது. மெய்ப்பாடு - அழுகை, பயன் - அச்சந் தவிர்த்தல்.
சேர்க-கூடுக என்பன வியங்கோள் வினைமுற்றுக்கள். நீவிர் சேர்க எனவும், யான் கூடுக
எனவும் எழுவாய் வருவித்துக் கொள்க.
|