மூலமும் உரையும்549



திருக்கோவையார் 331 ஆம் செய்யுள்
மறவாமை கூறல்

     அஃதாவது: வினைமுற்றிவந்து தலைமகளோடு பள்ளியிடத்தானாகிய தலைமகன், நீயிர் வினையிடத்தெம்மை மறந்தீரேயென்ற தோழிக்கு, யான் பாசறைக்கட் டாழ்த்தவிடத்தும், கண் முத்திலங்க நின்று, இவள் என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்கிற்றிலள்; ஆதலால், யான் மறக்குமாறென்னோவெனத் தானவளை மறவாமை கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

கருங்குவ ளைக்கொடி மாமலர்
     முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்
     றிலள்நின்று நான்முகனோ
டொருங்கு வளைக்கரத் தானுண
     ராதவன் றில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை
     நீடிய வைகலுமே.

பாசறை முற்றப் பைந்தொடியோ டிருந்து மாசறு தோழிக்கு வள்ள லுரைத்தது.

     (இ-ள்) நான்முகனோடு ஒருங்கு வளைக்கரத்தான் உணராதவன் தில்லை ஒப்பாய்-நான்முகனோடேகூடச் சங்கை ஏந்திய கையையுடைய திருமாலும் உணர்தற்கரியவனாகிய இறைவனுடைய தில்லை நகரத்தை ஒத்த நன்மையுடைய தோழியே! கேள்; மருங்கு வளைத்து மன்பாசறை நீடிய வைகலும்- போர்க்களத்தின் பக்கத்தே சூழ்ந்து மன்னனுடைய பாசறையின்கண் யான் தங்கியிருந்த நாளின்கண்ணும்; கருங்குவளைக் கடிமா மலர் முத்தம் கலந்து இலங்க நின்று-கண்ணாகிய கரிய குவளையினது புதிய பெரிய மலர் கண்ணீராகிய முத்துக்களோடு கலந்து விளங்கும்படி நின்று; நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற்றிலள்-நெருங்கிய வளையலணிந்த இக்கிளியை ஒப்பவள் ஒருகாலமும் என்னைவிட்டு நீங்கினாளில்லை, அதனால் எம்முள் பிரிவென்பதொன்றில்லை என்க.

     (வி-ம்.) மாமலர்-பெரிய மலர். முத்தம்-முத்து-கிள்ளை-கிளிபோல்பவள். நீங்கிற்றிலள்: ஒருசொல். வளைக்கரத்தான்-சங்கேந்திய திருமால். நான்முகன் பறவையாகிப் பறந்தும் திருமால் பன்றியாகி மண்ணகழ்ந்தும் இறைவனுடைய முடியும் அடியும் காணப்படாமையின் நான்முகனும் வளைக்கரத்தானும் உணராதவன் என்றார். வைகல்-நாள். அதனால் எம்முள் பிரிவென்பதொன்றில்லை என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு-உவகை. பயன்-தலைவியை மகிழ்வித்தல்.