திருக்கோவையார் செய்யுள்: 353
பொறையுவந்துரைத்தல்
அஃதாவது:
தலைவனைப் பரத்தையர் எதிர்கொண்டழைத்தேகினர் என்று கேள்வியுற்ற தலைவி நெஞ்சுடைந்தும்
அத்துன்பம் புறத்தார்க்குப் புலப்படாமல் மறைத்துப் பொறுமையுடன் இருந்தாளாக, அப்பெருந்தன்மையைக்
கண்ட தோழி யான் இங்ஙனம் ஆற்றாதொழிவேனாக; இதனைப் பொறுத்திருந்த எம்பெருமாட்டியை
யான் என் சொல்லிப் பாராட்டுவேன்! என்று அவளை உவந்து கூறியது. அதற்குச் செய்யுள்:-
சுரும்புறு கொன்றையன்
தொல்புலி
யூர்ச்சுருங் கும்மருங்குற்
பெரும்பொறை யாட்டியை யென்னின்று
பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன்
றானென்று கண்மணியு
மரும்பொறை யாகுமென் னாவியுந்
தேய்வுற் றழிகின்றதே.
|
கள்ளவிழ் கோதையைக் காதற் றோழி உள்ளவிழ் பொறைகண் டுவந்து ரைத்தது.
(இ-ள்)
பேரொலி நீர்க் கரும்பு உறை ஊரன் கலந்து அகன்றான் என்று-பெரிய முழக்கத்தையுடைய
நீரையுடைய கரும்பு தாங்கும் ஊரையுடையவன் எம்பெருமாட்டியைக் கலந்து வைத்து நீங்கினான்
என்று நினைத்தலால்; கண்மணியும் அரும்பொறை ஆகும்-அழுதழுது வீங்கி என் கண்மணியும்
தாங்குதற்கரிய பாரமாகா நின்றன; என் ஆவியுந் தேய்வுற்று அழிகின்றது-என் உயிரும்
தேய்ந்தழியா நின்றது; யான் இவ்வாறாகவும் சுரும்பு உறு கொன்றையன் தொல்புலியூர்-வண்டுகள்
வாழும் கொன்றைப் பூவினையுடைய இறைவனுடைய பழையதாகிய புலியூரின்கண்; சுருங்கும் மருங்குல்
பெரும் பொறையாட்டியை-சுருங்கிய இடையினையுடைய பெரிய பொறுமையினையுடைய எம்பெருமாட்டியை;
என் இன்று பேசுவ-கலங்காது நின்ற பெரிய பொறையினையுடைய எம்பெருமாட்டியை யான் இப்பொழுது
பாராட்டுவன என்னையோ என்க.
(வி-ம்.)
என் கண்மணியுந் தேய்வுற்றழியா நின்றது. ஆவியுமரும்பொறையாகா நின்றதென்று கூட்டுவாரு
முளர். உள்ளவிழ் பொறை-நெஞ்சுடைந்து புறத்து வெளிப்படாத பொறை. மெய்ப்பாடு-அழுகை
சார்ந்த உவகை. பயன்-தலைமகளை வியத்தல்.
|