திருக்கோவையார் செய்யுள் 146
வறும்புனங்கண்டு வருந்துதல்
அஃதாவது:
தலைமகளும் தோழியும் தமர் தினைக்கதிர் அரிந்து விட்டமையால் காவல் கைவிட்டுச்
செல்லாநிற்ப, தலைவன் அவ் வறும்புனைத்திடைச் சென்று நின்று இப்புனம் யாமுன் பயின்றதன்றோ
இஃதின்றிருக்கின்றவாறென்னோ வென்று, அதன் பொலிவழிவு கூறித் தலைமகளைத் தேடி வருந்தாநிற்றல்
என்றவாறு; அதற்குச் செய்யுள்:-
பொதுவினிற்
றீர்த்தென்னை யாண்டோன்
புலியூ ரரன் பொருப்பே
யிதுவெனி லென்னின் றிருக்கின்ற
வாறெம் மிரும்பொழிலே
யெதுநமக் கெய்திய தென்னுற்
றனிரை யீண்டருவி
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே.
|
மென்புனம் விடுத்து மெல்லியல் செல்வ மின்பொலி வேலோன் மெலி வுற்றது.
(இ-ள்)
பொதுவினில் திர்த்து என்னை ஆண்டோன்-நல்வழி அதுவோ இதுவோ என்று அறியாது மயங்கிப்
பொதுவாக நின்ற என் நிலைமையை நீக்கி என்னை ஆட்கொண்டவனாகிய; புலியூர் அரன்-புலியூரின்கண்
எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய; பொருப்பே எனில்-மலையே இம்மலை என்றால்; இது இன்று
இருக்கின்றவாறு என் - இஃது இற்றைநாள் இங்ஙனம் வறிதாய் இருத்தற்குக் காரணம் என்;
எம் இரும்பொழிலே-எம்முடைய பெரிய பொழிலே; நுமக்கு எய்தியது எது-நுங்கட்கு இன்று வந்த
மாறுபாடு என்னையோ; என் உற்றனீர்-நீங்கள் என்ன துன்பம் எய்தினீர்; அதுவேயுமன்றி;
இவ் வான்புனம் - இந்தப் பெரிய தினைப்புனம்; அறை ஈண்டு அருவி மதுவினில் கைப்பு வைத்தால்
ஒத்தஆ-ஒலியாநின்ற பெருகிய அருவியாய் விழுகின்ற தேனின்கண் அதனின் சுவையை மாற்றிக்
கைப்பாகிய சுவையை வைத்தாலொத்த வாறென் யான் இத்துன்பத்தை எங்ஙனம் ஆற்றுகேன்
என்க.
(வி-ம்.)
பொது-வழிதெரியாமல் அதுவோ இதுவோ என்று மயங்கிப் பொதுவில் நிற்கும் நிலை. புலியூர்-தில்லை.
தலைவியும் தானும் இயற்கைப் புணர்ச்சி எய்திய பொழில் அயலிருத்தலின் தலைவியையும்
உளப்படுத்தி எம்மிரும்பொழிலே என்று விளித்தான். பின்னர்த் தினைப்புனத்தை நோக்கி
இவ்வான்புனம் என்றான். மற்றென்பது
|