திருக்கோவையார் செய்யுள் 175
காப்புச்சிறைமிக்க கையறு கிளவி
அஃதாவது:
இற்செறிக்கப்பட்டு வருந்தாநின்ற தலைவி இரவுக் குறிக்கண் தலைவனைத் தலைப்படுதற்கு
இடையூறு பற்பல இருத்தல் கண்டு தன்னுட் பெரிதும் வருந்திக் கூறியது என்றவாறு. அதற்குச்
செய்யுள்:-
இன்னற வார்பொழிற்
றில்லை
நகரிறை சீர்விழவிற்
பன்னிற மாலைத் தொகைபக
லாம்பல் விளக்கிருளின்
றுன்னற வுய்க்குமில் லோருந்
துயிலிற் றுறைவர்மிக்க
கொன்னிற வேலொடு வந்திடின்
ஞாளி குரைதருமே.
|
மெய்யுறு காவலிற் கையறு கிளவி
(இ-ள்)
இன் நறவு ஆர் பொழில் தில்லைநகர் இறை சீர் விழவில்-இனிய தேன் பொருந்திய பூம்பொழிலை
யுடைய இத் தில்லை நகரத்திற்குக் கடவுளாகிய அம்பலவாணருடைய சிறப்புடைய திருவிழாவின்கண்;
பல் நிற மாலைத் தொகை பகல் ஆம்-மாணிக்கம் முதலானவற்றால் பல நிறத்தையுடையவாகிய
மாலைத் தொகுதிகளாலே இவ்விராப்பொழுதும் பகற் பொழுதாக நிற்கும்; பல்விளக்கு இருளின்
துன் அற உய்க்கும்- அவ்விழாவின்பொருட்டு ஏற்றிய பலவாகிய விளக்குகளோ இங்கு இருள்
பொருந்துதல் அறும்படி அகற்றும்; இல்லோரும் துயிலின்-இவ்விடையூறுகளே யன்றி ஒருபொழுதும்
துயிலாத இவ்வில்லத்தோர் சிறிது துயில் கொள்வாராயின்; துறைவர்கொன் மிக்க நிறவேலொடு
வந்திடின்-நம் பெருமான் அச்சத்தைச் செய்யும் மிக்க நிறத்தையுடைய வேலோடு ஒருகால்
வருவராயின்; ஞாளி குரைதரும்-அப்பொழுது நாய்கள் குரையாநிற்கும் ஆதலின் அவரை நாம்
எதிர்ப்படுதல் எங்ஙனம் என்க.
(வி-ம்.)
விழவு-திருவிழா. மணிமாலைகள் தம் மொளியால் இருளை அகற்றுதலின் இவ்விரவும் பகல்
ஆகும் என்றவாறு. இனி மாலைத் தொகையும் இராப்பகலாகாநிற்கும். பல் விளக்கும் இருளைத்
துரக்கும் என்று கூறினும் அமையும். இருளின் துன்-இருளின் துன்னுதல். இல்லோருந் துயிலின்
என்றதனால் அஃதும் ஓரிடையூறு என்றாளாயிற்று. கொன்-அச்சம். இதனை,
|