1. தமர் நினைவு கூறி வரைவு கடாதல்
 
   
அமுதமும் தருவும் பணிவரப் படைத்த  
உடலக்கண்ணன் உலகு கவர்ந்து உண்ட  
களவுடை நெடுஞ் சூர்க் கிளை, களம் விட்டு ஒளித்த--  
அருள் நிறைந்து அமைந்த கல்வியர் உளம் எனத்  
தேக்கிய தேனுடன் இறால் மதி கிடக்கும்--
5
எழு மலை பொடித்த கதிர் இலை நெடு வேல்  
வள்ளி துணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த  
கறங்கு கால் அருவிப் பரங்குன்று உடுத்த  
பொன் நகர்க் கூடல் சென்னி அம் பிறையோன்  
(பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினை,
10
'கொங்கு தேர் வாழ்க்கை'ச் செந்தமிழ் கூறி,  
பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி,  
என் உளம் குடிகொண்டு இரும் பயன் அளிக்கும்  
கள் அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான்)  
மலர்ப்பதம் நீங்கா உளப் பெருஞ் சிலம்ப!
15
கல்லாக் கயவர்க்கு அரு நூல் கிளை மறை  
சொல்லினர் தோம் என, துணை முலை பருத்தன;  
பல உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர்  
தவம் என, தேய்ந்தது, துடி எனும் நுசுப்பே;  
கடவுள் கூறார் உளம் என, குழலும்,
20
கொன்றை புறவு அகற்றி, நின்ற இருள் காட்டின;  
சுரும்பு படிந்து உண்ணும் கழுநீர் போல,  
கறுத்துச் சிவந்தன கண் இணை மலரே;  
ஈங்கு இவை நிற்க: சீறூர், பெருந் தமர்,  
இல்லில் செறிக்கும் சொல்லுடன், சில் மொழி
25
விள்ளும்; தமியில் கூறினர்,  
உள்ளம் கறுத்துக் கண் சிவந்து உருத்தே.
உரை