11. கல்வி நலம் கூறல்  
 
நிலையினின் சலியா நிலைமையானும்,  
பல உலகு எடுத்த ஒரு திறத்தானும்,  
நிறையும் பொறையும் பெறும் நிலையானும்,  
தேவர் மூவரும் காவலானும்,  
தமனியப் பராரைச் சயிலம் ஆகியும்;
5
அளக்க என்று அமையாப் பரப்பினதானும்,  
அமுதமும் திருவும் உதவுதலானும்,  
பல துறைமுகத்தொடு பயிலுதலானும்,  
முள்ளுடைக் கோட்டு முனை எறி சுறவம்  
அதிர் வளை தடியும் அளக்கர் ஆகியும்;
10
நிறை உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை  
தருதலின், வானத் தரு ஐந்து ஆகியும்;  
மறை வெளிப்படுத்தலின், கலைமகள் இருத்தலின்,  
அகமலர் வாழ்தலின், பிரமன் ஆகியும்;  
உயிர் பரிந்து அளித்தலின், புலமிசை போக்கலின்,
15
படி முழுது அளந்த நெடியோன் ஆகியும்;  
இறுதியில் சலியாது இருத்தலானும்,  
மறுமை தந்து உதவும் இருமையானும்,  
பெண் இடம் கலந்த புண்ணியன் ஆகியும்;  
அருள் வழி காட்டலின், இரு விழி ஆகியும்;
20
கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின்,  
நிறை உளம் நீங்காது, உறை அருள் ஆகியும்;  
இவை முதல் ஆகி, இரு வினை கெடுக்கும்--  
புண்ணியக் கல்வி உள் நிகழ் மாக்கள்,  
'பரிபுரக் கம்பலை இரு செவி உண்ணும்
25
குடக் கோச் சேரன் கிடைத்து, இது, காண்க' என,  
'மதி மலி புரிசை'த் திருமுகம் கூறி,  
'அன்பு உருத் தரித்த இன்பு இசைப் பாணன்  
பெற நிதி கொடுக்க' என உற விடுத்தருளிய,  
மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்
30
இரு சரண் பெறுகுநர் போல,  
பெரு மதி நீடுவர்; சிறுமதி நுதலே!  
உரை