15. அழுங்கு தாய்க்கு உரைத்தல்  
 
கல் உயர் வரைத்தோட் செம் மனக் குரிசிலும்,  
கல்லாதவர் உளம் புல்லிய குழலும்,  
இம் மனை நிறை புகுந்து, எழில் மணம் புணர,  
கோளொடு குறித்து வரும் வழி கூறிய  
மறை வாய்ப் பார்ப்பான்மகனும் பழுது இலன்;
5
சோதிடக் கலைமகள் தோற்றம் போல,  
சொரி வெள் அலகரும் பழுது இல் வாய்மையர்;  
உடல் தொடு குறியின், வரும் வழி குறித்த  
மூது அறி பெண்டிரும் 'தீது இலர்' என்ப;  
பெருந் திரட்கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து,
10
வாய்ச் சொல் கேட்ட நல் மதியரும் பெரியர்;  
ஆய் மலர் தெரிந்து இட்டு, வான் பலி தூவி,  
தெய்வம் பராய மெய்யரும் திருவினர்:  
(கருங் கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த  
பனைக் குடிப் பரதவர் கலத்தொடும் மறிய,
15
சுரிமுகச் செவ் வாய்ச் சூல் வளை தெறிப்ப,  
கழுக் கடை அன்ன கூர்வாய்ப் பெருங் கண்  
பனை கிடந்தன்ன உடல் முதல் துணிய,  
ஆர் உயிர் கவரும், கார் உடல் செங் கண்,  
கூற்றம் உருத்து எழுந்த கொள்கை போல,
20
நெட்டுடல் பேழ்வாய்ப் பெருஞ் சுறவு தடியும்--  
வரை நிரை கிடந்த திரை உவர் புகுந்து,  
நெடுஞ் சடைக் கிடந்த குறும் பிறைக் கொழுந்தும்,  
கரு முகில் வெளுத்த திரு மிடற்று இருளும்,  
நுதல் மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும்,
25
மறைத்து ஒரு சிறுகுடிப் பரதவன் ஆகி,  
பொன் தலைப்புணர் வலை கொடுங் கரம் ஆக்கி--  
நெடுங் கடல் கலக்கும் ஒரு மீன், படுத்த)  
நிறை அருள் நாயகன் உறைதரு கூடல்  
வணங்கார் இனம் என மாழ்கி,
30
குணம் குடிபோய்வித்த ஆய் உளம் தவறே.
உரை