21. தன்னுள் கையாறு எய்திடு கிளவி
 
 
நீர் நிலை நின்று, கால் கறுத்து எழுந்து,  
திக்கு நிலை படர்ந்த முகில்-பாசடையும்;  
இடை இடை உகளும் மீன் ஆம் மீனும்;  
செம் முகில் பழ நுரை, வெண் முகில் புது நுரை,  
எங்கும் சிதறிப் பொங்கி எழு வனப்பும்;
5
பல தலை வைத்து முடியாது பாயும்,  
எங்கும், முகம் வைத்த கங்கைக் காலும்;  
கொண்டு குளிர் பரந்த மங்குல்-வாவிக்குள்--  
முயல் எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி,  
தேவர்-மங்கையர் மலர் முகம் பழித்து,
10
குறையாப் பாண்டில் வெண்மையின் மலர்ந்த  
மதித் தாமரையே! மயங்கிய ஒருவேன்,  
நின்பால் கேட்கும் அளி மொழி ஒன்று உள:  
மீன் பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கி,  
சூல் வயிறு உளைந்து, வளை கிடந்து முரலும்
15
புன்னைஅம் பொதும்பரில்--தம்முடை நெஞ்சமும்;  
மீன் உணவு உள்ளி இருந்த வெண் குருகு எனச்  
சோறு நறை கான்ற கைதைய மலரும்;  
பல தலை அரக்கர் பேர் அணிபோல,  
மருங்கு கூண்டு எழுந்து, கருங் காய் நெருங்கி,
20
விளை கள் சுமந்த தலை விரி பெண்ணையும்;  
இன்னும் காணாக் காட்சி கொண்டு இருந்த  
அன்னத் திரளும்; பெருங் கரியாக,  
சொல்லா இன்பமும் உயிருறத் தந்து,  
நாள் இழைத்திருக்கும் செயிர் கொள் அற்றத்து--
25
மெய்யுறத் தணந்த பொய்யினர், இன்று,  
(நெடு மலை பெற்ற ஒரு மகள் காண,  
நான்முக-விதியே தாளம் தாக்க,  
அந்த நான்முகனை உந்தி பூத்தோன்  
விசித்து மிறை பாசத்து இடக்கை விசிப்ப,
30
மூன்று புரத்து ஒன்றில் அரசுடை வாணன்  
மேருக் கிளைத்த தோள் ஆயிரத்தொடும்,  
எழு கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க,  
முகம் வேறு இசைக்கும் குடமுழவு இரட்ட;  
புட் கால் தும்புரு, மணக் கந்திருவர்,
35
நான்மறைப் பயன் ஆம் ஏழ் இசை அமைத்து,  
சருக்கரைக் குன்றில் தேன்மழை நான்றென;  
ஏழு முனிவர்கள் தாழும் மாதவர்,  
அன்பினர் உள்ளமொடு என்பு கரைந்து உருக;  
விரல் நான்கு அமைத்த அணி குரல் வீங்காது,
40
நான் மறை துள்ளும் வாய் பிளவாது,  
காட்டி உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது,  
பிதிர் கனல் மணி சூழ் முடி நடுக்காது,  
வயிறு குழி வாங்கி, அழு முகம் காட்டாது;  
நாசி, காகுளி, வெடிகுரல், வெள்ளை,
45
பேசாக் கீழ்-இசை, ஒருபுறம் ஒட்டல்,  
நெட்டுயிர்ப்பு எறிதல், எறிந்து நின்று இரட்டல்,  
ஓசை இழைத்தல், கழி போக்கு, என்னப்  
பேசுறு குற்றம் ஆசொடும் மாற்றி;  
வண்டின் தாரியும், கஞ்ச நாதமும்,
50
சிரல் வான்நிலையும், கழை இலை வீழ்வதும்,  
அருவி ஓசையும், முழவின் முழக்கமும்,  
வலம்புரிச் சத்தமும், வெருகின் புணர்ச்சியும்,  
இன்னும் என்று இசைப்பப் பன்னிய விதியொடு;  
மந்தரம், மத்திமம், தாரம், இவை மூன்றில்,
55
துள்ளல், தூங்கல், தெள்ளிதின் மெலிதல்,  
கூடிய கானம் அன்பொடு பரவ,  
பூதம் துள்ள, பேய் கைமறிப்ப,  
எங்கு உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட,  
நாடக-விதியொடு ஆடிய பெருமான்,
60
மதுரை மாநகர்ப் பூழியன் ஆகி,  
கதிர் முடி கவித்த இறைவன் மா மணிக்  
கால் தலைக் கொள்ளாக் கையினர் போல)  
நீங்கினர்; போக்கும், ஈங்குழி வருவதும்,  
கண்டது கூறுதி ஆயின்;
65
எண்தகப் போற்றி, நின் கால் வணங்குதுமே.
உரை