24. இடம் அணித்துக்கூறி வற்புறுத்தல்  
   
பொருப்பு வளன் வேண்டி, மழைக்கண் திறப்ப,  
குருகு பெயர்க் குன்றத்து உடல் பக எறிந்த  
நெடு வேற் கடவுள் மயில், கொடி, முன்றில்  
பெருங்கிளை கூண்டு, வெட்சி மலர் பரப்பி,  
இறால் நறவு அளாய செந் தினை வெள் இடி,
5
தேக்கு இலை விரித்து, நால் திசை வைத்து,  
மனவு அணி முதியோள், வரை அணங்கு அயர்ந்து,  
மூன்று காலமும் தோன்றக் கூற,  
வேலன் சுழன்று குறு மறி அறுப்ப,  
கருவி நுதிகொள் நெறி இலை ஈந்தின்
10
முற்றிய பெரு நறவு எண்ணுடன் குடித்து,  
நெட்டிலை அரம்பைக் குறுங் காய் மானும்  
உளியம் தணித்த கணை கொள் வாய்த் திரிகல்  
ஒப்பு உடைத்தாய வட்ட வாய்த் தொண்டகம்,  
கோல் தலை பனிப்ப, வான்விடு பெருங் குரல்
15
வீயாது துவைக்கும் கடன் மலை நாடர்  
வருந்தி ஏற்று எடுத்த செந்திரு மட மகள்!  
ஒருவுக, உளத்துப் பெருகிய நடுக்கம்:  
எம் ஊர்ச் சேணும், நும் ஊர்க் குன்றமும்,  
பெருந் தவர் குழுவும், அருங் கதி இருப்பும்;
20
பொதியமும், களிப்ப விரிதரு தென்றலும்;  
கனைகடல் குடித்த முனிவனும், தமிழும்;  
மேருவும், மூவர்க்கு ஓதிய புரமும்;  
உலகம் ஈன்று அளித்த உமையும், மா அறனும்;  
தேவர்க்கு அரசனும், காவல் தருவும்;
25
வழுவா விதியும், எழுதா மறையும்;  
செங்கோல் வேந்தும், தங்கிய குடியும்;  
தவம் சூழ் இமயமும், கமஞ் சூல் மழையும்:  
எல்லையில் ஈங்கு இவை சொல்லிய அன்றி,  
கண்ணன் கரமும் வெண்ணெயும் போலப்
30
பாசடை புதைத்த நெட்டாற்று எரியுள்,  
பூத்து அலர் விரித்த சேப் படு தாமரை-  
உள் வளை உறங்கும் வள்ள வாய்க் கூடல்  
நிறைந்து உறை முக் கண் பெருந் திறல் அடிகள்,  
அடியவர்க்கு எவ்வளவு" அது ஆம்--
35
கொடி புரை நுசுப்பின் பெரு முலையோளே!  
உரை