41. அவயவங்கூறல்
 
   
வீதி குத்திய குறுந் தாட் பாரிடம்  
விண் தலை உடைத்துப் பிறை வாய் வைப்ப,  
குணங்கினம் துள்ள, கூளியும் கொட்ப;  
மத்தியந்தணன் வரம் சொலி விடுப்பத்  
தில்லை கண்ட புலிக்கால் முனிவனும்,
5
சூயை கை விடப் பாஞ்சலி ஆகிய  
ஆயிரம் பணாடவி அருந்தவத்து ஒருவனும்,  
கண்ணால் வாங்கி, நெஞ்சு அறை நிறைப்ப;  
திருநடம் நவின்ற உலகு உயிர்ப் பெருமான்;  
(கடல் மாக் கொன்ற தீப் படர் நெடு வேல்
10
உருள்இணர்க் கடம்பின் நெடுந் தார்க் கண்ணியன்,  
அரி-மகள் விரும்பிப் பாகம் செய்து,  
களியுடன் நிறைந்த ஒரு பரங்குன்றமும்;  
பொன்அம் தோகையும், மணி அரிச் சிலம்பும்,  
நிரைத் தலைச் சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும்,
15
வண்டு கிளை முரற்றிய பாசிலைத் துளவும்,  
மரகதம் உடற்றிய வடிவொடு மயங்க,  
மரக்கால் ஆடி அரக்கர்க் கொன்ற  
கவைத் தலை மணி வேல் பிறைத் தலைக் கன்னி  
வடபால் பரிந்த பலி மணக் கோட்டமும்;
20
சூடகம், தோள்வளை, கிடந்து வில் வீச,  
யாவர்தம் பகையும், யாவையின் பகையும்,  
வளனின் காத்து, வருவன அருளும்,  
ஊழியும் கணம் என, உயர் மகன் பள்ளியும்;  
உவா மதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி,
25
மருந்து கைக் கொண்டு வானவர்க்கு ஊட்டிய,  
பாகப்பக்க நெடியோன் உறையுளும்;  
தும்பி உண்ணாத் தொங்கல்-தேவர்  
மக்களொடு நெருங்கிய வீதிப் புறமும்;  
மது நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி,
30
சூரரக்கன்னியர் உடல் பனி செய்யும்  
கடைக்கால் மடியும் பொங்கர்ப் பக்கமும்;  
ஊடி ஆடுநர்த் திரையொடு பிணங்கித்  
தோழியின் தீர்க்கும் வையைத் துழனியும்;  
அளவா ஊழி மெய்யொடு சூழ்ந்து,
35
நின்றுநின்று ஓங்கி, நிலை அறம் பெருக்கும்  
ஆனாப் பெரும் புகழ் அருள் நகர்க் கூடல்)  
பெண் உடல் பெற்ற சென்னிஅம் பிறையோன்;  
பொற்றகடு பரப்பிய கருமணி நிரை என,  
வண்டும், தேனும், மருள் கிளை முரற்றி,
40
உடைந்து உமிழ் நறவு உண்டு, உறங்கு தார்க் கொன்றையன்-  
திருவடி புகழுநர் செல்வம் போலும்,  
அண்ணாந்து எடுத்த அணி உறு வன முலை;  
அவன் கழல் சொல்லுநர் அரு வினை மானும்,  
மலை முலைப் பகை அட மாழ்குறும் நுசுப்பு;
45
மற்று-அவன் அசைத்த மாசுணம் பரப்பி  
அமைத்தது கடுக்கும், அணிப் பாம்பு அல்குல்;  
ஆங்கு-அவன் தரித்த கலைமான் கடுக்கும்,  
இரு குழை கிழிக்கும் அரிமதர் மலர்க் கண்--  
புகர் முகப் புழைக்கை துயில் தரு கனவில்
50
முடங்குளை கண்ட பெருந் துயர் போல,  
உயிரினும் நுனித்த அவ் உருக் கொண்டு,  
பொன்மலை பனிப்பினும் பனியா  
என் உயிர் வாட்டிய தொடி இளங்கொடிக்கே.
உரை