68. பங்கயத்தோடு பரிவுற்று உரைத்தல்
 
   
சிலை நுதல் கணை விழித் தெரிவையர் உளம் என  
ஆழ்ந்து, அகன்று, இருண்ட சிறை நீர்க் கயத்துள்,  
எரி விரிந்தன்ன பல் தளத் தாமரை!  
நெடு மயல் போர்த்த உடல் ஒருவேற்கு,  
குரு மணி கொழிக்கும் புனல் மலைக் கோட்டுழி
5
நின் பதி மறைந்த நெட்டிரவகத்துள்,  
குருகும் புள்ளும் அருகு அணி சூழ,  
தேனொடும் வண்டொடும் திருவொடும் கெழுமி,  
பெருந் துயில் இன்பம் பொருந்துபு நடுநாள்,  
காணும் நின் கனவுள், நம் கவர் மனத்தவரைக்
10
கொய் உளைக் கடு மான் கொளுவிய தேரொடு,  
'பூ உதிர் கானற்புறம் கண்டனன்' என,  
சிறிது ஒரு வாய்மை உதவினை அன்றேல்--  
(சேகரம் கிழித்த நிறைமதி உடலம்  
கலை, கலை சிந்திய காட்சியது என்ன,
15
கடுமான் கீழ்ந்த கடமலைப் பல் மருப்பு  
எடுத்துஎடுத்து உந்தி, மணிக் குலம் சிதறி,  
கிளைஞர்கள் நச்சாப் பொருளினர் போல,  
சாதகம் வெறுப்ப, சரிந்து அகழ்ந்து ஆர்த்து,  
திரள் பளிங்கு உடைத்துச் சிதறுவதென்ன,
20
வழி எதிர் கிடந்த உலமுடன் தாக்கி,  
வேங்கையும் பொன்னும் ஓர் உழித் திரட்டி  
வரையர மகளிர்க்கு அணி அணி கொடுத்து,  
பனைக்கைக் கடமா எருத்துறு பூழி  
வண்டு எழுந்து ஆர்ப்ப, மணி எடுத்து அலம்பி,
25
மயில் சிறை ஆற்ற, வலிமுகம் பனிப்ப,  
எதிர் சுனைக் குவளை மலர்ப் புறம் பறித்து  
வரையுடன் நிறைய மாலை இட்டாங்கு,  
நெடு முடி அருவி அகிலொடு கொழிக்கும்  
கயிலை வீற்றிருந்த கண்ணுதல் விண்ணவன்,
30
நாடகக் கடவுள்) கூடல் நாயகன்  
தாமரை உடைத்த காமர் சேவடி  
நிறை உளம் தரித்தவர் போல,  
குறை உளம் நீங்கி இன்பாகுவனே.
உரை