72. வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
 
   
திருமலர் இருந்த முதியவன் போல  
நான்முகம் கொண்டு, அறி நன்னர் நெஞ்சு இருந்து,  
வேற்றருள் பிறவி தோற்றுவித்து எடுத்து;  
நிலம் இரண்டு அளந்த நெடுமுகில் மான,  
அரக்கர்தம் கூட்டம் தொலைத்து, நெய் உண்டு;
5
களிற்று உரி புனைந்த கண்ணுதல் கடுப்ப  
அழல் எடுத்து ஒன்னலர்புரம் எரி உட்டி;  
இனைய, எவ் உலகும் தொழுது எழு திரு வேல்,  
சரவணத்து உதித்த அறுமுகப் புதல்வன்--  
பரங்குன்று உடுத்த பயம் கெழு கூடல்
10
பெரு நகர் நிறைந்த சிறு பிறைச் சென்னியன்;  
மால் அயன் தேடி, மறை அறைந்து, அறியாத்  
தன் உரு ஒன்றில் அருள் உரு இருத்திய  
ஆதி நாயகன்; அகல் மலர்க் கழல் இணை  
நண்ணலர் கிளைபோல் தன் மனம் திரிந்து, நம்
15
துறைவன் தணக்க, அறிகிலம் யாமே--  
பிணர் முடத் தாழை விரிமலர் குருகு என,  
நெடுங் கழிக் குறுங் கயல், நெய்தலுள் மறைந்தும்;  
புன்னைஅம் பொதும்பர்க் குழைமுகம் குழைமுகம்  
கருந் திரை சுமந்து எறி வெண் தரளத்தினை
20
அரும்பு என, சுரும்பினம், அலர நின்று இசைத்தும்;  
கலம் சுமந்து இறக்கும் கரி இனம் பொருப்பு என,  
பருகிய முகிற்குலம், படிந்து கண்படுத்தும்;  
பவள நன் கவைக் கொடி வடவையின் கொழுந்து என,  
சுரிவளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும்;
25
வெள் இற உண்ண விழைந்து புகு குருகினம்,  
கருங் கழி நெய்தலைக் காவல் செய் கண் என,  
அரவு எயிற்று அணி முட் கைதையுள் அடங்கியும்;  
விண் தொட எழுந்து விழுதிரைக் குழுவினைக்  
கடல் வயிற்று அடங்கிய மலையினம் வரவு என,
30
குழி மணற் கேணியுள் கொம்பினர் படிந்தும்;  
முயங்கிய உள்ளம் போகி,  
மயங்கிய துறையினம் ஒருங்குழி வளர்ந்தே.
உரை