81. வறும் புனம் கண்டு வருந்தல்
 
   
உள் இருந்து எழுந்து புறம்பு நின்று எரியும்  
அளவாத் திரு மணி அளித்த லானும்,  
கொலை முதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து  
கொழுஞ் சினை மிடைந்து களிரொடு பொதுளிய  
நெடு மரத்து இளங்கா நிலைத்தலானும்,
5
பாசடை உம்பர் நெடுஞ் சுனை விரிந்த  
பேர் இதழ்த் தாமரை பெருகலானும்,  
நெடு விசும்பு அணவும் பெரு மதி தாங்கி,  
உடையா அமுதம் உறைத லானும்,  
இளமையும், தொங்கலும், இன்பமும் ஒருகால்
10
வாடாத் தேவர்கள் மணத்த லானும்,  
நூறுடை மகத்தில் பேறு கொண்டிருந்த  
புரந்தரன் போலும்--பொன் எயில் எறிந்த  
மணி வேற் குமரன்--திரு வளர் குன்றம்  
பேர் அணி உடுத்த பெரு நகர்க் கூடல்
15
கோயில் கொண்டிருந்த குணப் பெருங் குன்றம்,  
(அருந் தவக் கண்ணினோடு இருந்த மா முனிபால்,  
பேர் இருள் மாயைப்பெண், மகவு இரக்க,  
உவர் முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்துக்  
கொடுத்த மெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய
20
ஏழு நீர்ச் சகரர்கள், ஏழ் அணி நின்று,  
மண் புக மூழ்கிய வான் பரி பிணிக்க,  
பல் முக விளக்கின் பரிதியில் தோட்டிய  
வேலைக் குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த  
பெருங் கார்க் கருங் கடு அரும்பிய மிடற்றோன்;
25
எறிந்து வீழ் அருவியும், எரிமணி ஈட்டமும்,  
உள்ளுதோறு உள்ளுதோறு உள்நா அமுது உறைக்கம்  
திரு முத்தமிழும், பெருகு தென் மலயத்து  
ஆரப் பொதும்பர் அடை குளிர் சாரல்,  
சுரும்புடன் விரிந்த துணை மலர்க் கொடியே!
30
விண் விரித்து ஒடுக்கும் இரவி வெண் கவிகைக்கு  
இட்டு உறை காம்பு என விட்டு எழு காம்பே!  
மரகதம் சினைத்த சிறை மயிற்குலமே!  
நீலப் போதும் பேதையும் விழித்த  
பொறி உடல் உழையே! எறிபரல் மணியே!
35
பாசிழைப் பட்டு நூல் கழி பரப்பிய  
கிளைவாய்க் கிளைத்த வளைவாய்க் கிளியே!  
மைந்தர்கண் சென்று மாதர் உள் தழைத்த  
பொழி மதுப் புது மலர்ப் போக்குடைச் சுரும்பே!  
வெறி முதிர் செம் மலர் முறிமுகம் கொடுக்கும்,
40
சந்தனப் பொதும்பர்த் தழை சினைப் பொழிலே!  
கொள்ளை அம் சுகமும் குருவியும் கடிய  
இரு கால் கவணிற்கு எறி மணி சுமந்த  
நெடுங் கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே!  
நெருநல் கண்ட எற்கு உதவுழி இன்பம்
45
இற்றையின் கரந்த இருள் மனம் என்னை?  
இவண் நிற்க வைத்த ஏலாக் கடுங்கண்  
கொடுத்து உண்டவர் பின் கரந்தமை கடுக்கும்;  
ஈங்கு இவை கிடக்க: என் நிழல் இரும் புனத்து  
இருந்து ஒளிர் அருந் தேன் இலதால்; நீரும்,
50
'நின் புனம் அல்ல' என்று என் புலம் வெளிப்பட  
அறைதல் வேண்டும்: அப் புனம் நீரேல்,  
முன்னம் கண்டவன் அன்று என்று  
உன்னா, உதவுதல் உயர்ந்தோர் கடனே.
உரை